ஞாயிறு, 27 ஆகஸ்ட், 2017

விநாயகர் சதுர்த்தி விழாவும் சில செய்திகளும்.

விநாயகர் சதுர்த்தி சிறப்பு பதிவாய்  'சதுர்த்தி எண்ணங்கள்' என்ற பதிவில்
பிள்ளையார் செய்ய வேண்டுமா என்று பாலசுப்பிரமணியம் சார்
ஒரு காணொளி பகிர்ந்து இருந்தார். நீங்கள் பார்த்து இருப்பீர்கள். அழகான எளிமையான செய்முறை. அந்தப்பதிவின் பின்னூட்டத்தில் என் பேரனும் இதே போன்ற பிள்ளையார் செய்திருக்கிறான் என்று போட்டிருந்தேன்.
சார் சொல்வது போல் சில பதிவுகள் நம்மை எழுத தூண்டும் பதிவுகளாய் அமையும் என்பது உண்மையே!

 என் பேரன், ஓவியம், கைவேலைகள் கற்றுக் கொள்கிறான். அவர்கள் சொல்லிக் கொடுத்து இருக்கிறார்கள் பிள்ளையார் செய்ய.அவன் செய்த பிள்ளையார் தான் இந்த விநாயகர் சதுர்த்திக்கு.

என் மகன், சிறுவனாக இருக்கும்போது நான் சப்பாத்தி மாவு பிசைந்து கொண்டு இருக்கும்போது கொஞ்சம் மாவு எடுத்துப் போவான், அதில் வித விதமாய்ப் பொம்மைகள் செய்வான். பிள்ளையார் சதுர்த்திக்குக் களிமண் பிள்ளையார் வாங்கப் போனால்,  கூடவே கொஞ்சம் களிமண் வாங்கி வருவான். அதை வைத்துச் சின்ன பிள்ளையார் செய்து விடுவான். அதற்குத் தனியாக அவன்சதுர்த்தி கொண்டாடுவான்.சாக்பீஸில் நிறைய உருவங்கள் செய்வான்.படம் பார்த்தால் உடனே அதைப்பார்த்து வரைவான்.
இப்போதும் ஓய்வு நேரத்தில் கேன்வாஸ் ஓவியம் வரைவான் அதை நண்பர்கள் வீட்டு விழாக்களுக்கு பரிசளித்து விடுவான். எங்களுக்கும், கயிலை படம், நடராஜர் படம் வரைந்து தந்து இருக்கிறான்.

பனி சிற்பம்.  உட்லை வருத்திக் கொண்டு செய்த அருள்மிகு ஹெர்க்குலேஸ்வரர்’

//என் மகன் வசிக்கும் நியூஜெர்சியில் மூன்றாம் தேதிஅன்று(3/1/2014)  பனிப் பொழிவு இருந்திருக்கிறது. அந்தப் பனிப்புயலுக்கு 'ஹெர்க்குலிஸ்’  என்று பெயர் இட்டு இருக்கிறார்கள்.   பனி விழுந்த சமயத்தில் என் மகன் அதைச் சேகரித்து , சிவலிங்க உருவம் செய்து, ’அருள்மிகு ஹெர்க்குலேஸ்வரர்’ என்று பெயரிட்டு வழிபட்டான். போனமுறை பனிக்காலத்தில் பனி மனிதன் உருவமும், அதற்கு முந்தைய தடவை  ’பனிப்புயல் காத்த விநாயகர்’ உருவம் செய்து இருந்தான்.


அங்கு உள்ள மக்களுக்கு ’ஹெர்க்குலிஸ் பனிப்புயல்’ எந்த விதப் பாதிப்பையும் தராமல் இருக்கப் பிரார்த்தனை செய்துகொண்டார்களாம். பிரசாதமாய் மருமகள் பிரட் அல்வா செய்தாளாம். //


//என் மகன் அமெரிக்காவிலிருந்து படங்கள் அனுப்பி இருந்தார். அதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். கஷ்டமான பனி பொழிவையே தங்கள் ரசனையால் சிற்பங்கள் செய்து மகிழ்கிறார்கள் மகனும் மருமகளும். போனமுறை பனிமனிதன் செய்து மகிழ்ந்தார்கள் இந்தமுறை விநாயகர். மரங்கள் சாய்கின்றன, போக்குவரத்து பாதிக்கப் படுகிறது. பள்ளி கல்லுரிகள் விடுமுறை அளிக்கிறார்கள். இவர்கள் வீட்டு அருகில் இருந்த மரம் போன பனி புயலில் விழுந்து விட்டது. நல்லவேளை யாருக்கும் எந்த துன்பம் தராமல். இந்த முறை கார் நிறுத்தும் இடத்தின் அருகில் உள்ள மரம் சாய்ந்து நிற்கிறதாம்.கேட்கும் போது பயமாய் இருக்கிறது. கவனமாய் இருங்கள் என்று சொல்கிறோம். அதனால் மருமகள் யாருக்கும் எந்த சேதமும் இல்லாமல் இனி வரும் நாட்கள் இனிதாக இருக்க பிராத்தனை செய்கிறாள். நாமும் பிராத்தனை செய்வோம்.//


  . பனிபுயல் காத்த விநாயகர்




இப்போது அப்பாவைப்போல் என் பேரனும் படம் பார்த்து வரைகிறான்


 .

                                               கேன்வாஸ் ஓவியம்  - வானம், நிலா, அருவி.

 பேரன் கவினுக்கும் ஓவியம்  வரைய ஆர்வம் இருந்ததால்  அதை மேலும் மெருகேற்ற ஓவியப்பள்ளியில் சேர்த்து இருக்கிறான் என் மகன். அவனும் அழகாய் வரையக் கற்றுக் கொண்டு இருக்கிறான்.அங்கு தான் இந்தப் பிள்ளையாரைச் செய்யக் கற்றுக் கொடுத்திருக்கிறார்கள்
Modeling kids clay  யில் செய்து இருக்கிறான் பிள்ளையாரை.

பிள்ளையார், குழந்தைகளின் நண்பன்.  இந்த குட்டி நண்பன் கவினைக்  காக்கவேண்டும் நாளும்!


No automatic alt text available.
பிள்ளையாருக்குப் பிடித்த இனிப்புக் கொழுக்கட்டை, காரக் கொழுக்கட்டை, எள்ளுருண்டை, மோதகம்  என்று அம்மா செய்து தந்ததை ஒன்று ஒன்று வைத்து இருக்கிறான் , அப்புறம் சாப்பிட்டு விட்டு எது வேண்டும் என்று கேட்கிறாரோ அதைக் கொடுப்பானாம் மீண்டும். (ஏன்  1,1,1,1 என்று கேட்டதற்கு பதில் அவன்  சொன்னது)


Image may contain: night
 என் பிள்ளையாருக்கும் குடை வேண்டுமே!


தேவகோட்டைஜி (கில்லர்ஜி)        பெரியப்பாவின் சிலைகளை ஆற்றில் கரைப்பது ஏன்? என்று அருமையான விழிப்புணர்வுப் பதிவு எழுதி இருக்கிறார். பண்டிகைகள் நாளுக்கு நாள் ஆடம்பரமாய்ப் போவதை அழகாய் சொல்லி இருக்கிறார்.   தேவகோட்டைஜியும் அழகான பிள்ளையார் காணொளி போட்டு இருக்கிறார். 2015 ல் புதுக்கோட்டை பதிவர் திருவிழா  நடத்தும் மின் இலக்கியப் போட்டிக்கு எழுதிய பதிவு அது.

அவர் சொல்வது போல் பண்டிகைகள் போகும் போக்கு நாளுக்கு நாள் மாறிக்கொண்டுதான் இருக்கிறது.

அருகம்புல், எருக்கம் பூ  வைத்து எளிமையாகக் கும்பிட்டாலே போதும், பிள்ளையார் அருளைத் தருவார்.

அவருக்கு   தொலைக்காட்சியில் 21 வகையான இலைகளை வைத்து வணங்கினால் நல்லது, அவை இந்த இந்த பலனைத் தரும் என்று ஒரு சோதிடர் சொன்னார்.(அப்படியாவது அந்த மரம் செடிகளை வளர்க்கட்டும். அதுவும் நல்லதுதான்.)

அவர்  சொன்னதை வைத்துக் கொண்டு   சிலர் அந்த 21 இலைகளைச் சேகரித்து   பேக் செய்து," விநாயகர் சதுர்த்திக்கு முதல் நாள் எங்களிடம்  கிடைக்கும், தேவையானவர்கள்  எங்கள் அலுவலக தொலைபேசியில் புக்கிங் செய்யுங்கள்  22, 23 தேதிகளில் புக் செய்பவர்களுக்கே  கிடைக்கும்."
 என்று துண்டு விளம்பரம் வீடு வீடாய் போட்டுச் சென்றார்கள். விழாவிற்கு முந்தின நாள் கொண்டு வந்து கொடுத்தபின் பணம் கொடுக்கலாம் என்று போட்டு இருந்தது எவ்வளவு பணம் என்று சொல்லவில்லை. இலவச டோர் டெலிவரி என்று போட்டு இருந்தார்கள்.

21 பழங்கள் , 21 பூவும்    அந்த ஜோதிடர் சொன்னார் அதை அவர்கள் சேகரித்து டோர் டெலிவரி  செய்வதாக சொல்லவில்லை. சேகரித்த பின் யாரும் வாங்கவில்லை என்றால்  கஷ்டம் என்று விட்டுவிட்டார்கள் போலும்.

பண்டிகைகள் எளிமையாகக் கொண்டாட முடியாத அளவு விலைவாசிஏறி கிடக்கிறது. நாவல்பழம் எளிமையான பழம். முருகன் ஒளவைக்குக்
கொடுத்த காலம். இப்போது 100 கிராம் 30 ரூபாய். விளாம்பழம்  இரண்டு 80 ரூபாய் ,  நாலு சின்ன பேரிக்காய்   80 ரூபாய்,  கொய்யா கால்கிலோ வாங்கினால் 30 ரூபாய் அரைக்கிலோ வாங்கினால் 50 ரூபாய் என்கிறார்கள் , எல்லாப் பழங்களிலும்  ஒன்று ஒன்று போடு என்று சொன்ன அம்மாவைத் திட்டுகிறார்கள்  "எந்த காலத்தில் இருக்கிறே ! ஒவ்வொரு பழமும் ஓவ்வொரு ரேட்டு முடிந்தால் வாங்கு இல்லை இடத்தை காலி செய் "என்கிறார்கள். பெரிய பழக்கடையிலும் வியாபாரம் சூடு பறக்கிறது.

பண்டிகைக்காலங்களில் கிடைக்கும்  பழங்கள், காய்கறிகளைப் பக்தியோடு இணைத்து மக்களை உண்ண வைத்தார்கள், உடல் நலத்திற்கு.
 கால சீதோஷணத்திற்கு ஏற்ற மாதிரி அவை இருக்கும்.

எள் உருண்டைக்கு எள் வாங்கி நாமே செய்தால் 60 ரூபாய்க்கு நிறைய உருண்டை வரும். அதுவும் இப்போது இயற்கை அங்காடியில் கிடைக்கிறது , ஒரு சின்ன டப்பாவில் 7 உருண்டைகள் அடங்கியதின் விலை 60 ரூபாய்.
முடியாதவர்களுக்கு இதனால் நன்மைதான், காலம் மாறுது நீயும் மாறு இல்லையென்றால் கஷ்டம். இப்படிச் சொல்வது என் கணவர்!

                                                   வாழ்க வளமுடன்!

வெள்ளி, 25 ஆகஸ்ட், 2017

விநாயகர் சதுர்த்தி









வந்தார் விநாயகர்  தந்தார் அருளை  பழைய பதிவை  வாசிக்க வில்லை என்றால் வாசிக்கலாம்.

//இங்கு நியூஜெர்சியில், நம் ஊரில் விற்பது போல் களிமண் பிள்ளையார் கிடைக்க மாட்டார், ஆனால் களிமண் கிடைக்கிறது.  ஈரக்களிமண் 5 கிலோ வாங்கி வந்தான் மகன். ”போன முறை  மண்பிள்ளையார் சிலை  நான் செய்தேன் , இந்த முறை நீங்கள் இங்கு இருப்பதால் நீங்கள் செய்யுங்கள் அப்பா” என்றான்.  அவர்களும் மகிழ்ச்சியாக பிள்ளையார், மூஞ்சூறு வாகனம் எல்லாம் செய்தார்கள். அலங்காரக் குடை இருந்தது ,அதை மகனின்
பிள்ளையாருக்கு வைத்து விட்டு, தான் செய்த பிள்ளையாருக்கு அலங்கார திருவாச்சி வீட்டில் இருந்த தெர்மோகோலில் செய்தார்கள்.  மகன் போன முறை  செய்த  பிள்ளையாருக்கு ஸ்பிரே பெயிண்ட் அடிக்கப்பட்டது. அந்த பிள்ளையாரும் புதிதாக ஆனார்.//

இன்று எங்கள் வீட்டுக்கு மண் பிள்ளையார் வருவாரா என்று சந்தேகமாய் இருந்தது . நேற்று  வண்ணப் பிள்ளையார்கள் தான் விற்றார்கள். இன்று காலை போய் பார்த்த போது  களிமண் பிள்ளையார் செய்பவர் கடை போட்டு இருந்தார், ஆனால் அவரைச் சுற்றிக் கூட்டம் என்று வந்து விட்டார்கள். இந்த முறை மஞ்சள் பிள்ளையார் மற்றும் நம் வீட்டில் இருக்கும் நிறைய பிள்ளையார்களை வைத்து விநாயகர் சதுர்த்தியைக் கொண்டாடி விடலாம் என்று முடிவு செய்தாலும் , எதற்கும் போய்ப் பார்த்து வருகிறேன், கூட்டம் இல்லையென்றால் வாங்கி
வருகிறேன் என்று போனார்கள் கடைக்கு. அவர் அருளாலே அவர் தாள் வணங்க 
வந்து விட்டார் வீட்டுக்கு .

இவர்கள் வாங்கும் போது இன்னொருவருக்கு செய்து முடித்து விட்டு சார் உங்களுக்கு வேண்டுமா? செய்யவா  ?என்று கேட்டு செய்து கொடுத்து இருக்கிறார்.
அப்புறம் கூட்டம் நிறைய வந்து விட்டதாம். அச்சு வைத்து தான் செய்கிறார்.  ஆனாலும் கூட்டத்திற்கு செய்வது கஷ்டம் தான். .





விநாயகர் சிலைகளைக் கரைக்கும் வழக்கம் ஏன் ஏற்பட்டு இருக்கும் என்பதைப் பற்றிப்
 படித்த செய்தி:-

//ஆடிப்பெருக்கில் வெள்ளம் வந்து ஆற்று மணலை அடித்து கொண்டு போய் இருக்கும். அதனால் நீர் நிலத்தில் நிற்காமல் கடலை சென்று அடையும். ஆனால் களிமண்ணில் நீர் இறங்கும். களிமண்ணில் உள்ள இடத்தில் நீர் கீழே இறங்கும்.அதனால்  விநாயகரை  நீர் நிலைகளில் கரைக்க செய்தார்கள். ஈரக்களிமண்   நீரோடுசீக்கீரம் கரைந்து  நீரின் வேகத்தோடு சென்று விடும். காய்ந்த களிமண்  அதே இடத்தில் படிந்து விடும். இதனால் ஆற்றில்   வரும் நீரானது   பூமியில் நிலத்தடி நீராக மாறி நமக்கான குடிநீர் பிரச்சனையைத் தீர்க்கும். //

நன்றி- தினமலர்.

ஆனால் இப்போது ஆற்றில் மணலும் இல்லை, நீரும் இல்லை. இருக்கும் நீர்நிலைகளில்  விநாயகரை எப்படிக் கரைப்பது? நான் வீட்டில் வாளியில் கரைத்து என் தொட்டிச் செடிகளுக்கு விட்டு விடுவேன். இப்போது  தொட்டி சின்னது இரண்டு தான் இருக்கிரது அதனால் மரம் செடி இருக்கும் இடத்தில் கொண்டு விட வேண்டும். அதனால் சின்னப் பிள்ளையார் தான் வாங்கினோம்.

சேலம் மாணவிகள் செய்த மாதிரியும் பிள்ளையார் பிடித்து வைத்து வணங்கலாம்.
சேலம் மாணவிகள் 6000  விதைப்பந்து விநாயகர்களை செய்து சாதனை செய்து இருக்கிறார்கள். அவற்றை இன்று மரம் இல்லாத இடங்களில்  போடப் போகிறார்கள். பெரியவிநாயகர் சிலைகளைச் செய்து அவை கரைக்க தண்ணீர் இல்லாமல் கஷ்டப் படுவதற்குப் பதிலாக இப்படி செய்வது நல்லது.  

  விதைப்பந்து விநாயகர்கள் எல்லாம்  மரங்களாய் வளர்ந்து  வளர்ந்து நல்ல மழையைக் கொடுக்க வேண்டும். 

அந்த குழந்தைகளைப் பாராட்டுவோம். வேந்தர் தொலைக்காட்சியில் விதைப்பந்து விழாவைக் காட்டினார்கள். குழந்தைகள் விதைப் பந்து விநாயகருக்கு கொழுக்கட்டைகளையும் செய்து வணங்கினார்கள். 

அவர்கள் அனைவருக்கும்  விநாயகர் அருள் கண்டிப்பாய் கிடைக்கும்.தன்னலம் பார்க்காமல் பொதுநலத்திற்கு உழைக்கும் குழந்தைகள் வாழ்க!
அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்.

 அங்கிங்கெணாதபடி எங்கும் பிரகாசமாய் வியாபித்திருக்கும் ஓம் எனும் ஓங்கார வடிவமாக விளங்கும்பவர் ஸ்ரீ விநாயகப் பெருமான், அவர்  எல்லோருக்கும் நலமே அருள வேண்டும்.


                                                            வாழ்க வளமுடன்.

சனி, 19 ஆகஸ்ட், 2017

வியாழன், 17 ஆகஸ்ட், 2017

மாலைச்சூரியன்


கீழச் சூரிய மூலை அருள்மிகு சூரிய கோடீஸ்வரர் ஆலயம்


//இங்குள்ள மூலவரை , காலை முதல் மாலைவரை சூரிய பகவான் தன் பொன்கதிர்களால் ஆராதனை செய்வதாக ஐதீகம். //
ஆவணி மாதத்தில் சூரிய வழிபாடு செய்யப் போகலாம் இந்த கோயிலுக்கு.நான் எழுதிய பதிவைப் படிக்கவில்லை என்றால் படிக்கலாம்.

ஓவ்வொரு மாதமும் ஒரு சிறப்பு. ஆவணி மாதம் ஞாயிறுக்குச் சிறப்பு.
 எங்கள் பக்கம் (திருநெல்வேலி) ஒவ்வொரு  ஆவணி ஞாயிறு அன்றும் சூரியனுக்குப் பொங்கல் வைப்பார்கள். ஆவணி ஞாயிறு  அம்மன்களுக்கு கோயிலில்களில் விஷேச பூஜைகள் நடைபெறும்.

ஞாயிறு விரதம் இருந்தால் நோய் நொடி இல்லாமல் இருக்கலாம்,
ஆவணி ஞாயிறு விரதம் இருந்தால் மேலும் சிறப்பு என்பார்கள்.

ஆவணி 3 ஆம் தேதி சனிக்கிழமை முதல் ஆவணி மாதம் 24 ஆம் தேதி வியாழன் வரை  மீனாட்சி கோயிலில் திருவிழா. ஒவ்வொரு நாளும் திருவிளையாடல் புராணத்தில்    உள்ள  (வரும் லீலைகள்)  முக்கியமான கதைகள் காட்சியாக  நடத்தபடும்.


முதல் நாள்   -   கரிக்குருவிக்கு  உபதேசம் செய்த லீலை

இரண்டாம் நாள்   -  நாரைக்கு முக்தி கொடுத்தது

மூன்றாம் நாள் - மாணிக்கம் விற்ற லீலை

நான்காம் நாள் -தருமிக்குப் பொற்கிழி கொடுத்த லீலை

ஐந்தாம் நாள் -கடும் வறுமையிலும் தவறாமல்  மகேஸ்வரபூஜை செய்த
சிவ அடியார் நல்லான்,தருமசீலா தம்பதியருக்கு உலவாக்கோட்டை அருளிய லீலை.

ஆறாம் நாள் - குருவுக்குத் துரோகம் புரிந்த சீடனின் அங்கங்களை  அவனுடன் வாள் போர்புரிந்து அவனின் அங்கங்களை வெட்டிய லீலை

ஏழாம் நாள் - வளையல் விற்ற லீலை
இந்த நாளில் சுவாமிக்குப் பட்டாபிஷேகம் நடைபெறும்.  இதையொட்டி மதுரை இன்மையிலும் நன்மை தருவார் கோயிலில் சிறப்பு பூஜை நடைபெறும். மாலை பட்டாபிஷேகம்.

எட்டாம் நாள் - நரிகளைப் பரிகளாக்கிய லீலை
மாணிக்கவாசகருக்காக  நரிகளைப் பரிகளாக்கித் திருவிளையாடல் புரிந்த லீலை.

ஒன்பதாம் நாள் - பிட்டுக்கு மண் சுமந்த லீலை.
மண்ணைப்படைத்தவர் மண் சுமந்து பிரம்படி பட்ட லீலை

பத்தாம் நாள் பாணபத்திரர் என்ற பக்தருக்கு அருளவும், கர்வம் கொண்ட பாகதவருக்குப் பாடம் புகட்டவும் இறைவன்  விறகு வெட்டியாக வந்து விறகு விற்ற லீலை.

பதினொன்றாம் நாள் - சட்டத்தேர்
ஈசன் அரசனாக வலம் வரும் நாள்

பன்னிரண்டாம் நாள் -  தீர்த்தவாரி
தீர்த்தவாரியுடன் விழா இனிதே நிறைவு பெறும்.

நான் வளையல் விற்ற லீலை, பிட்டுக்கு மண்சுமந்த லீலை இரண்டும் பார்த்து இருக்கிறேன். போன வருடம்.

இனி, பதிவில் வந்த மாலைச்சூரியனைப் பற்றிப் பார்ப்போம்.

அதிகாலை சூரியன்  அழகு என்றால், மாலைச்சூரியன்  அதைவிட அழகு.
மலை வாயிலில் மறையும்  போது இன்னும் அழகு. கடற்கரையில் அஸ்தமனமாகும் போது அழகு .

காலை உதயத்தையும்,   மாலை அஸ்தமனத்தையும் பார்க்கக் கடற்கரையில் கூடும் கூட்டம்  உண்டு. பலரும் பார்த்து இருப்பீர்கள் தானே!


மனித வாழ்விற்கு  சூரிய ஒளியும் தேவை என்கிற  கவிதையை இன்று கே.பி. ஜனா சார் தன் முக நூலில் பகிர்ந்து இருந்தார்.  சூரியனைப்பற்றிய இந்த பதிவுக்கு  நன்றாக இருக்கும் என்று எடுத்துக் கொண்டேன் .

நன்றி: ஜனா சார்.


//சும்மா வாழ்வது மட்டும் போதாது. ..
சூரிய ஒளியும் சுதந்திரமும் 
சின்ன மலரொன்றும் வேண்டும் 
ஒரு மனிதனுக்கு.//

<>...
- Hans Christian Anderson
('Just living is not enough... one must have 
sunshine, freedom and a little flower.')

மெல்ல விடியும் பொழுது பதிவில் காலைச்சூரியன் காட்சி இருக்கிறது.



மெல்ல மெல்ல விடியும் வைகறைப்
 பொழுதில்    காலைச் சூரியன் இருக்கிறது
அதனால் இந்தப் பதிவில் மாலைச்சூரியன் மட்டும்.



Image may contain: sky, outdoor and nature
மாலைச் சூரியன் காட்சிகள்
தம்பிவீட்டு மொட்டை மாடியில் எடுத்த படங்கள்.


Image may contain: sky, twilight, outdoor and nature
மாலைச்சூரியன் உடலுக்கு  'டி விட்டமின் தரும்.  டி விட்டமினை எந்த மருந்து மாத்திரைகளும் தராது. மாலை நேரம் சூரிய ஓளியில், விளையாடுவது நல்லது.   மாலைச் சூரிய ஒளியில் நடப்பதும் நல்லது.
Image may contain: sky
மெல்ல மெல்ல கீழே இறங்கிக் கொண்டு இருக்கும் சூரியன்

No automatic alt text available.

Image may contain: sky, twilight, outdoor and nature
No automatic alt text available.
மாடியிலிருந்து மாலைச்சூரியன் மறையும் வரை எடுத்த படங்கள்.


மயிலாடுதுறையில் இருந்தபோது அந்த வீட்டு மொட்டை மாடியிலிருந்து மாலைச்சூரியனை எடுத்த படங்கள்.







வானமெங்கும் பரிதியின்  சோதி (பாரதி)

மாலைச் சூரியன் தென்னை மரத்திற்கு அலங்கார விளக்கு போட்டு இருக்கிறது.


தருக்களின்  மீதும் பரிதியின் சோதி (பாரதி)


மலைகள் மீதும் பரிதியின் சோதி (பாரதி)

மலைவாயில் போகும் மாலைச்சூரியன் (நார்த்தா மலை)

திருமதி .இராஜராஜேஸ்வரி அவர்கள்   மணிராஜ் என்ற வலைத்தளம் வைத்து  தெய்வீக பதிவுகளை எழுதிக் கொண்டு இருந்தார்கள்.

பண்டிகைகள்  ஒன்றையும் விடாமல் பதிவு செய்து விடுவார், பண்டிகைகள் வரும் போது அவர் நினைவு வந்து விடும்.

அவர்கள்  எழுதிய 'ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும்' பதிவை படித்துப் பாருங்கள்.  படித்து இருப்பீர்கள் இருந்தாலும் மீண்டும் படிக்கலாம் ஞாயிறின் சிறப்பை.

ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும்  திருமதி .ரஞ்சனி நாராயணன் அவர்கள் பதிவில்  சிலப்பதிகாரத்தில்  இளங்கோவடிகள்  மங்கலமாய் இயற்கையை. சூரியனை, மழையைப் பாடிப் பின் கதையைச் சொல்வதைச் சொல்கிறார்.

பின் சூரிய சக்தியை நம் நாட்டில் நல்ல முறையில் பயன்படுத்தி மின்சாரத் தட்டுப்பாட்டைப் போக்கலாம். மின்சாரப் பற்றாக்குறையைப் போக்க ஓரே தீர்வு  சூரிய சக்தி மூலம் மின்சாரம் எடுப்பது தான்.

சோலார் பெனல்களை அமைப்பது எப்படி?
சோலார் சக்தியின் நிறைகள்:
சோலார் சக்தியின் குறைகள்:

என்று அனைத்தையும் பற்றி விரிவாக சொல்லி சூரியனை வாழ்த்தி நிறைவு செய்கிறார், படிக்க வில்லை என்றால், நேரம் இருந்தால் படிக்கலாம்.


நாங்கள் கைலாயம் போனபோது நிறைய இடங்களில் சூரிய சக்தியால் இயங்கும் தெருவிளக்குகள் இருந்ததையும், விடுதிகளில் விளக்குகள் இருந்ததையும் பார்த்தோம். மாலை ஆறுமணியிலிருந்து இரவு ஒரு மணிவரை அந்த விளக்குகள் எரியும். அப்புறம் நாம் கொண்டு போய் இருக்கும் டார்ச்சு தான் நமக்குத் துணை. 

அந்த இடத்தின் பெயர் தார்ச்சென் 
   



குளிர்ப் பிரதேசங்களில் குறைவான நேரம் தான் சூரிய ஓளி கிடைக்கும் அதை அவர்கள் முறையாகப் பயன்படுத்தும் போது வெப்ப நாட்டில் இருக்கும் நாம் அதிகம் பயன்படுத்தலாம்.

கற்கை நன்றே என்ற வலைத்தளம் வைத்து இருக்கும் கபீரன்பன் அவர்கள் 


சோலார் பவரும் என் அனுபவங்களும் - என்று நாலு பதிவுகளும் எழுதி இருக்கிறார்.



'கபீரின் கனிமொழிகள்' என்ற வலைத்தளத்தில் ஆன்மீகப் பதிவுகளும் எழுதுவார் அருமையாக.


இதில்  கபீர்தாஸ், சிவ வாக்கியர், பகவத்கீதை  இவற்றிலிருந்து
 சிலவற்றைப் பகிர்ந்து இருப்பார். நன்றாக இருக்கும். படித்துப் பாருங்களேன்.


நான் எடுத்த சூரியனின் படங்களுடன்  சூரியனைப் பற்றி அருமையாக  நிறைய பேர் எழுதிய பதிவுகளில்  நான் படித்த பதிவுகளையும்  இங்கு கொடுத்து இருக்கிறேன்.

                                              வாழ்க வளமுடன்!

----------------------------------------------------------------------------------------------------

செவ்வாய், 15 ஆகஸ்ட், 2017

கண்ணா நீ வாழ்க !

திருக்கண்ணபுரம்

நித்திய புஷ்கரணி, நிமிர்ந்த கோபுரம்.

கண்ணபுரம் செல்வேன் கவ்லையெல்லம் மறப்பேன்
கண்ணனின் சன்னிதியில் எந்நேரமும் இருப்பேன் - திரு
கண்ணபுரம் செல்வேன் கவ்லையெல்லம் மறப்பேன்
கண்ணனின் சன்னிதியில் எந்நேரமும் இருப்பேன்

வண்ண வடிவழகை கண்குளிரக் காண்பேன்
எண்ணமெல்லம் அவனின் இணையடியே என்பேன்
நித்திய புஷ்கரணி நீரினிலே குளிப்பேன்
நிமிர்ந்த கோபுரத்தை கண்டு கைகள் குவிப்பேன்
உத்பலா பதக விமானத்தையே நினைப்பேன்
உள்ளத்தில் அள்ளி வைத்தே உவகையிலே திளைப்பேன் ( )

கருட மண்டபத்தை கடந்து தொடர்ந்திடுவேன்
கண்ணாடி சேவை கண்டு கண்கள் கசிந்திடுவேன்
பெருமாள் சன்னிதிமுன் பித்தாகி நின்றிடுவேன்
பிறவிப்பிணி அறுத்து உலகை வென்றிடுவேன்
எட்டெழுத்தைக் சொல்லி கிட்டே நெருங்கிடுவேன்
ஒம் நமோ நாராயணா என்ற
எட்டெழுத்தை சொல்லி கிட்டே நெருங்கிடுவேன்
என்னை தெரிகிறதா என்றே கேட்டிடுவேன்
கட்டியணைத்தெனக்கு கைகொடுப்பான் கண்ணன்
கற்பூரம் மணக்கின்ற கால்பிடித்தே உய்வேன் ( )

காற்றினிலே வரும் கீதம்  வலைத்தளத்தில் பாடல்  எடுத்தேன்.  கண்னன் பாட்டுக்களை ஒரே இடத்தில் படிக்கலாம்.

முக நூலில்  திருக்கண்ணபுரம் படம் போட்ட போது வல்லி அக்கா கண்ணபுரம் சேவித்தேன்
கவலை எல்லாம் மறந்தேன் என்று சொன்ன வுடன். சீர்காழி கோவிந்த ராஜன் அவர்கள் பாடிய பாடல் இங்கு  மிகவும் பிடிக்கும் என்றேன். உடனே  எனக்கு அந்த பாடலை அனுப்பி கேட்க வைத்து மகிழ்ச்சி படுத்தி விட்டார்கள்.

நான் வரைந்த கண்ணன் (மார்கழி கோலம்)

Image may contain: 1 person, smiling, sitting and indoor

Image may contain: 1 person, smiling, sitting and indoor
கோலங்கள் பல செய்யும் கண்ணன்
Image may contain: 1 person, smiling, child and closeup

Image may contain: 1 person, smiling, standing, hat and closeup
பால் வடியும் முகம் நினைந்து நினைந்தென் உள்ளம்
பரவசமிகவாகுதே.. கண்ணா
எங்கள் வீட்டுக் கண்ணன்
Image may contain: 1 person, sitting, standing and indoor

புல்லாங்குழல் கொண்டு வருவான் - அமுது
பொங்கித் ததும்புநற் கீதம் படிப்பான்:
Image may contain: 1 person, sitting and indoor
                                   சின்னஞ்சிறு பதங்கள் சிலம்பொலித் திடுமே – அதைச்
                                                      செவிமடுத்த பிறவி மனங்களித் திடுமே
Image may contain: table and indoor

Image may contain: people standing
போன வருடம் இந்த உறியின் படம் முகநூலில் பகிர்ந்த போது அதற்கு
 ஸ்ரீராம்   எழுதிய கவிதை.

//கிண்ணங்களில்
வைக்காதீர்கள்!பாலையும், வெண்ணெயையும்..
உறி போலச் செய்து
கட்டித் தொங்க விடுங்கள்..
ஓடோடியும் வருவான் கண்ணன்!
அவனுக்கும் தெரியும்
திருடுவதில் உள்ள சுகம்
தானாகக் கிடைப்பதில் இல்லை என்று!//

கண்ணனின் குறும்பு  .
மருமகள்  வரைந்த கண்ணாடி ஓவிய தவழும் கண்ணன்

முறுக்கு, இனிப்பு, உப்பு சீடை, தட்டை  செய்வதை விட்டு வெகுகாலம் ஆகி விட்டது. அப்பம், அவல் பாயசம், வெண்ணெய், தயிர் வைத்து வணங்கி விடுவேன். இந்த முறை குடியிருப்பு வளாகத்திற்கு ஒரு பெரியவர், முறுக்கு, சீடை, அவல், கடலை எல்லாம் பாக்கெட் போட்டு விற்றார், மழையும் மாலையில் கடைக்குப் போக முடியாமல் பெய்து கொண்டு இருந்தது.

எளிமையாக அவல் பாயசம் மட்டும் வைத்து கொண்டாடும் எண்ணத்தில் இருந்தேன். சார் ஊருக்கு போய் இருந்தார்கள்  வரும் போது கண்ணனுக்கு போளி வாங்கி வந்தார்கள் ,  வாழைக்காய் சிப்ஸ்  வாங்கி இருந்தார்கள் , தம்பி வீட்டுக்கு வந்தவன் பழங்கள் வாங்கி வந்தான். 

வீட்டிலிருந்த முந்திரி, திராட்சை, பாதாம், வெண்ணை இவற்றை  வைத்து சிறப்பாக்கிக் கொண்டார்  கண்ணன்.
No automatic alt text available.
மயிற்பீலிக் கண்ணன்

                                               
மாணவிகள் கொடியை உடையில் குத்திக் கொண்டு சுதந்திரதினத்தை கொண்டாடி விட்டு திரும்புகிறார்கள். (சிறு வயதில் பள்ளியில் சுதந்திர தினம் கொண்டாடியது நினைவுக்கு வந்தது.)
                                                   
சிறுபையன் தன் அப்பா பின்னால் தேசியகொடியை எடுத்து செல்கிறான். நான் அலைபேசியை எடுத்து படம் எடுப்பத்தற்குள் வேகம் எடுத்து விட்டது வண்டி.

அனைவருக்கும் சுதந்திரதினவாழ்த்துக்கள்.

                                                                    வாழ்க வளமுடன்.