செவ்வாய், 28 பிப்ரவரி, 2017

அந்திப்பொழுதினிலே!




மாலைச்சூரியன்  காட்சி - மொட்டை மாடியில் எடுத்த படம்.
நிலாப் போல் காட்சி அளிக்கிறது அல்லவா?


எங்கள் வீட்டு மொட்டை மாடியில், மற்றும் பயணத்தில் கண்ட  மாலை நேர சூரியனை  இங்கு பகிர்வாய்.

வியாழன், 16 பிப்ரவரி, 2017

தவிப்பு!

காலை தினம் பறவைகளுக்கு தண்ணீரும், உணவும் வைப்பது வழக்கம். மாயவரத்தில் மொட்டை மாடி மதில் சுவற்றில் வைப்பேன். இங்கு மதுரையில்  கீழே மதில் சுவற்றின் மேல் வைப்பேன். அது என்னைவிட  உயரம் என்பதால் எட்டி வைக்கும் போது சில நேரம் தண்ணீர் என் மேல் கொட்டி விடும், உணவு என் மேல் பாதியும்,   மதில் மேல் கொஞ்சமும் கொட்டி  விடும். அதனால் அந்த உணவு, தண்ணீர் வைக்கும் வேலையை  என் கணவரிடம் கொடுத்து விட்டேன்.

இன்று அவர்கள் வெளியில் போய் இருந்தால் நான் வைக்கப் போனேன்,   பெரிய பிளாஸ்டிக் குவளையில் உணவு எடுத்துப் போனேன்.   வைக்கும் போது உணவு, வழக்கம் போல் கொஞ்சம் என் மேலும் கொஞ்சம் மதில் மேலும் விழுந்தது, அதுமட்டும் இல்லாமல் குவளை, மதிலைத் தாண்டி அந்தப் பக்கம் விழுந்து விட்டது. ( நான் எடுத்து போனால் தட்டில் தான் எடுத்து போவேன் , கணவரிடம்  பிளாஸ்டிக் குவளையில்  கொடுத்து விடுவேன்)

அங்கு இருந்த  குடியிருப்பை பார்த்துக் கொள்பவரிடம் பறவைக்கு வைக்கும் தொட்டியில் தண்ணீர் வைத்து விடுங்கள் என்று  சொன்னேன், அவர் உதவி செய்தார், முதலிலேயே அவரிடம் உதவி கேட்டு இருந்தால் உண்வையும் அவரே  வைத்து இருப்பார்.  என் கவனக் குறைவால் பறவைகள், அணில் பட்ட தவிப்பை   ஜன்னல் வழியாகப் பார்த்து மிகவும்  வேதனையாகப் போய் விட்டது.

நடைபாதை உணவை எடுக்கலாமா? வேண்டாமா என்று பறவைகள் மதில் மேலிருந்து எட்டி எட்டி பார்த்தது வேதனை அளித்தது.


தண்ணீரில் ஒருகாலும், கீழ் இருக்கும் உணவை சாப்பிட வெளியே ஒருகாலும் வைத்து ஆயத்தமாகிறது.

எட்டிப்பார்த்து கொண்டு  இருக்கிறது புறா


கீழே வந்து   பயந்து பயந்து உணவைச் சாப்பிட ஆரம்பித்து  விட்டது
 
சுவற்றில் ஒட்டி இருக்கும் பருக்கைகளை  இரண்டு அணில்கள் ஒன்றை ஒன்றை விரட்டி விட்டுச் சாப்பிட்டது.


அணில் மதில் சுவற்றில் ஒட்டி இருந்ததை  கீழே குனிந்து சாப்பிட்ட காட்சி பார்க்கவே மனது கஷ்டப்பட்டது.



அண்டங் காக்கை ஒன்று  மதில் தாண்டி புற்களுக்கு இடையே விழுந்த சோற்றுப் பருக்கைகளை வாயில் அடக்கிக் கொண்டு தன் குஞ்சுகளுக்கு கொடுக்கப் போனது .


காலை நேரம் மட்டும் தான் பறவைகள் உணவு எடுக்க வரும். (காலை உணவைத் தவிர்க்கக் கூடாது என்பதும் அவற்றுக்கும் தெரியும் போல! )
காலையில் குஞ்சுகளுக்குக் கொடுக்கவும் எடுத்துப் போகும்.  வெயில் வந்து விட்டால் மரங்களில் தஞ்சம் அடைந்துவிடும்.

விரத நாட்களில் , விசேச நாட்களில்   அதுக்குத் தெரியும்   அதற்குப் பிடித்த உணவுகள் வைப்பார்கள் , வருந்தி அழைப்பார்கள்   அதனால் வந்துவிடும்.

அணில் காலை முதல்  அது தூங்க போகும் வரை உணவைக் கொறித்துக் கொண்டே இருக்கும்.
கீழே சிதறிய உணவை  உண்ட பின் தண்ணீர் அருந்திச் செல்லும் மைனா.

வெயில் காலம் வருகிறது. பறவைகளுக்கும், விலங்குகளுக்கும் தண்ணீர் வையுங்கள் என்று பத்திரிக்கைகளிலும் , சமூக வலைத்தளங்களிலும் பகிர ஆரம்பித்து விட்டார்கள்.



அடுப்பில் வைத்த பாலை மறந்து ஜன்னல் வழியாகப் பறவைகளைக் கவனித்ததால், பால் பொங்கி  அடுப்பில் வந்து மணம் மூக்கை தொட்டவுடன்
போய் அடுப்பை அணைத்தேன்.

கீழே இறைந்து கிடக்கும் உணவைச் சேகரித்து வைக்கலாம் என்றால்  கீழே உள்ள மண் ஒட்டி இருக்குமே என்று வைக்கவில்லை.

பறவைகள் மண்  ஒட்டினாலும் உதறி உதறி சாப்பிடுகிறது. காக்கா தண்ணீரில் கழுவி சாப்பிடும் மண் ஒட்டி இருந்தால் .

இன்றைய காலைப் பொழுது தவிப்பும்  வருத்தமுமாய்ப் போச்சு.

                                                வாழ்க வளமுடன்.
                                                        -----------------




திங்கள், 13 பிப்ரவரி, 2017

அந்த நாளும் வந்ததே

பிப்ர்வரி 13  உலக வானொலி நாள்


தமிழகத்தில் மின்சாரம்த் தட்டுப்பாடு ஏற்பட்ட போது வானொலிப் பற்றி கட்டுரை எழுதி இருந்தேன் , அதை இன்று உலக வானொலி தினத்தில் மீள் பதிவாய் பதிவிடுகிறேன்.


  படம் - கூகிள்

தமிழகத்தில் தற்போது நிலவிவரும் மின் வெட்டால் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்க்க முடியவில்லை. இணையதளத்தில் இணைய முடியவில்லை. இன்வெர்ட்டருக்கோ, சார்ஜ் ஆகும் அளவு மின்சாரம் இல்லை. இப்படி இருக்கும் போது நமக்கு கை கொடுப்பது பாட்டரி போடும்வசதி உள்ள   டிரான்ஸ்சிஸ்டர்தான்..

நவீன தகவல் தொடர்பு சாதனங்கள் ஏற்படுத்தும் இடையூறுகளால் , முன்பு நாம் தெளிவாக கேட்டுக்கொண்டு இருந்த மத்திய அலை வரிசை, சிற்றலை வரிசையில் வானொலி நிகழ்ச்சிகளை சரிவர கேட்க முடியாமல் இருந்தது. பண்பலையில் மட்டுமே கேட்க முடிந்தது. இப்போது மின்சாரத் தடையால் மற்ற மின்சாதனங்கள் இயங்காததால் மத்திய அலை வரிசையை நன்கு கேட்க முடிகிறது. மின் பற்றாக்குறையால் கிடைத்த ஒரு வரப்பிரசாதம் இது !

முன்பெல்லாம் ,வானொலியில் காலை ‘வந்தே மாதரம்’, ‘மங்கள இசை’, ‘பக்தி பாடல்’, ‘நேயர் விருப்பம்’, சினிமா பாடல், நாடகம், ‘இசை விருந்து’ என்று, தூங்கும் நேரம் தவிர மற்ற நேரங்களில் ஒலித்துக் கொண்டே இருக்கும். அந்த நாளும் இப்போது மீண்டும் வந்து விட்டது மின்சாரப் பற்றாக்குறையால.

வெகு நாட்களுக்குப் பிறகு டிரான்ஸிஸ்டருக்கு சென்ற வெள்ளிக்கிழமை யன்று பேட்டரி போட்டு காலை நிகழ்ச்சியை ஆரம்பித்து வைத்தேன்.

படம் -கூகிள்

குறள் அமுதம், சான்றோர் சிந்தனை, மங்கள இசை ஆங்கிலத்தில் செய்திகள் முடிந்து பக்தி இசை தொடங்கியது. எனக்கு பிடித்த பாடல்கள் ‘முருகனுக்கு ஒருநாள் திருநாள் ‘ என்ற சூலமங்கலம் சகோதரிகள் பாடிய பாடல், எல்.ஆர். ஈஸ்வரியின் ‘இயேசு ரட்சகர் பெயரைச் சொன்னால் எதுவும் நடக்குமே ! அவர் இதயத்தோடு கலந்து விட்டால் எல்லாம் கிடைக்குமே! எல்லாம் கிடைக்குமே!’ என்ற பாடலும் ,பி. லீலாவின் ‘வரவேண்டும் எனது அரசே! அருணோதய ஒளி பிரகாசா!’ என்றபாடலும், ‘யா அல்லா!ஈடில்லா ஏகாந்தம் நீயே அல்லா! யார் இங்கே வேறே கதியே! மாமறையே போற்றும் நீதியே! நாடியே வேண்டினேன்’ என்று உருகி பாடினார் நாகூர் ஹனிபா. தென்றல் காற்றே கொஞ்சம் நில்லு கொஞ்சம் நில்லு எங்கள் திருநபியிடம் போய் சொல்லு சலாம் சொல்லு , என்ற பாடலும் நாகூர் ஹனீபா பாடினார். இந்த பாடலும் மிக நன்றாக இருக்கும். எனக்கு தெரியாத இன்னொரு பாடகர் ‘இறை தூதர் நபியே! மறை தூதர் நபியே! ‘என்று பாடினார். 

எல்லா மதத்திற்கும் உள்ள பாடலை வானொலிதான் இன்றும் இணைத்துத் தந்துகொண்டு இருக்கிறது.

வானொலி நிலயம்.டில்லி படம் - கூகிள்

பாடல் முடிந்து ‘விவசாய நிகழ்ச்சி’, ‘நலம் நேரம்’ என்று டாக்டரின் ‘ஆலோசனை நேரம்’, மாநிலச் செய்திகள்:
அடுத்து ‘பாடும் பண்பலை’,அடுத்து ‘தகவல் நேரம்’,என நிகழ்ச்சிகள் தொடர்ந்தன.

மீடியம் அலை வரிசையும் நன்கு கேட்பதால் அதில் 
வெள்ளிக்கிழமை வைக்கும் ‘காந்திய சிந்தனை’யை கேட்க முடிகிறது. ‘வைஷ்ணவ ஜனதோ தேனே கஹியே ! ‘பாடலை இசை அரசி எம்.எஸ் சுப்புலட்சுமி அவர்களின் தேன்குரல் இழைய இழைய பாடிய பாடலைக் கேட்டு ரசித்தேன். சத்திய சோதனையிலிருந்து சிலபகுதிகளைப் படித்தார்கள். அன்று காந்தி மூன்றாம் வகுப்பு ரயில் பயணம் செய்யும் அனுபவத்தை பெற அதில் பயணித்து காசி சென்றதை காசி பயணம் என்ற தலைப்பில் எழுதியதைப் படித்தார்கள்.

வெள்ளிக்கிழமை அன்று மகளிர் சங்கத்தின் பல்சுவை நிகழ்ச்சி, வைத்தார்கள். கஸ்தூரிபாய் மகளிர்சங்கம் தொகுத்துஅளித்த பல்சுவை நிகழ்ச்சி. பாரதியார் பாட்டு, ஹோலி பண்டிகை பற்றிய செய்தி, நாடகம் முதலியவை இருந்தன. நாடகத்தில் கொடுக்கப் பட்ட சிறிது நேரத்தில் படிப்பினை ஊட்டும் கதை ஒன்றைச் சொல்லி விட்டார்கள், நாடகத்தைக் காட்சி காட்சியாய் விவரித்த போது மிக நன்றாய் இருந்த்து.

மீரா பஜன், சமையல் குறிப்பு, குழந்தைப் பாதுகாப்பு என்று பல நிகழ்ச்சிகள் இருந்தன. வெயிலில் குழந்தைகளுக்கு வேர்க்குரு வாராமல் பாதுகாப்பது, பரீட்சை நேரத்தில் குழந்தைகளை நன்கு சாப்பிட வைத்துச் சரியான நேரத்தில் தூங்கவைப்பது, சரியான நேரத்தில் படிக்கவைப்பது என்று நிறைய டிப்ஸ்கள் வழங்கி அசத்தி விட்டாட்கள்.

மகளிர் தின வாரத்தை முன்னிட்டு சிறப்பு நிகழ்ச்சி ஒன்று. . அதில் கணினி சாதனையாளர் கே. புவனேஸ்வரி அவர்கள் பேசினார்கள். கணினியின் சேவை குறித்து பேசினார். 
“கண் தெரியாதவர்களும் கணினியை இயக்கி திருக்குறளை படிக்கலாம் ; தமிழில் எழுதுபவர்கள் நிறைய நல்ல கட்டுரைகள எழுதுகிறார்கள், அதைப் படிக்கலாம் ; குழந்தைகள் கணினியில் யாரோடு பேசுகிறார்கள் என்ன பார்க்கிறார்கள் என்பதை கவனமாய் பார்த்து அவர்களை வழி நடத்த வேண்டும். பெண்கள் ஐ.டி துறையில் முன்னுக்கு வந்து கொண்டு இருக்கிறார்கள். தங்கள் வேலையை மனபூர்வாமாக் செய்யவேண்டும்.அழுகை, கோபம் இரண்டையும் பெண்கள் விட வேண்டும், மென்மை தனமையை வளர்த்துக் கொள்ளவேண்டும்” என்று பெண்கள் முன்னேறுவதற்கான சில வழிகளைக் கூறினார்கள். 

மகளிர் தின சிறப்பு நிகழ்ச்சியில் பாண்டிச்சேரி அரசின் தலமைச் செயலர் சத்தியவதி அவர்கள் ‘பெண்மையைப் போற்றுதும்’ என்ற தலைப்பில் பேசினார்கள். 

“பெண் சிசு கொலையைத் தடுக்க வேண்டும், வறுமை காரணமாய் சிசுக்கொலையை செய்கிறவர்களை விட செல்வந்தர்கள் தான் இந்த செயலை அதிகமாய் செய்கிறார்கள். கீழ் மட்டத்து மக்களை விட உயர் மட்டத்து மக்கள், படித்த பணக்காரர்கள் தான் பெண்சிசுக் கொலையைச் செய்கிறார்கள். இதற்கு உதராணம் பஞ்சாப் என்றார்கள். அங்கு அதிகமாய் பெண் சிசுக் கொலை நடை பெறுகிறது ” என்றார்கள்..

பெண் பஞ்சாயத்துத் தலைவர்கள் சுதந்திரமாய் செயல் பட முடியாதவர்களாய் இருக்கிறார்கள். அவர்களின் கணவர், சுற்றம் சொல்படி நடக்க வேண்டி உள்ளது. அவர்கள் சுத்ந்திரமாய் செயல்பட வேண்டும் “என்றும் கேட்டுக் கொண்டார்கள்.

“பெண்கள் ஆண்களுக்கு சமமாய், ஐ.டி துறையில் வேலை பார்ப்பது மகிழ்ச்சி. ஆனால் வீட்டு வேலை, அலுவலக வேலை இரண்டையும் செய்யும் போது மன அழுத்ததிற்கு ஆளாகிறார்கள்.
அதற்கு ஆண்கள் அவர்களுக்கு ஆதரவாய் இருக்கவேண்டும் ” என்றார்கள் 

“ஆண்கள் வீட்டு வேலை செய்ய கூடாது என்ற மனநிலையை மாற்ற வேண்டும். இருபாலரும் மனமாற்றம் பெற வேண்டும். பெண்மை வாழ்க! என போற்றுவோம்” என்றார்கள்.

எல்லோருக்கும் மகளிர் தின வாழ்த்துக்களை இச்சமயத்தில் நான் சொல்லிக் கொள்கிறேன் 



வானொலி நிகழ்ச்சிகள் பற்றி மேலும் பார்ப்போம்:

முன்பு எல்லாம் வியாழக்கிழமைகளில் நாடகம், ஞாயிறுகளில் சினிமா ஒலிச்சித்திரம் என்று வானொலியில் நிகழ்ச்சிகள் தருவார்கள். 

‘மெரினா’வின் நாடகங்கள் நன்றாக இருக்கும், ‘தனி குடித்தனம்’ என்ற நாடகம் நன்றாக இருக்கும்.

படம் -கூகிள்

நல்ல இசை கச்சேரிகள், ‘விரும்பிக் கேட்டவை’ என்ற சினிமா பாடல்கள் தொகுப்பு, ‘ரேடியோ மாமா’, ‘வானொலி அண்ணா’ வழங்கும் குழந்தைகள் நிகழ்ச்சி, சேர்ந்திசை, நிலைய வித்வான் களின் வாத்திய இசை, எல்லாமே மறக்க முடியாதவை.
படம் - கூகிள்

வானொலியில் தர இருக்கும் நிகழ்ச்சிகளை ‘வானொலி’ என்ற பத்திரிகை மூலம் முன்னதாக அறிந்துகொள்ளலாம். அதை என் கணவர் வாங்குவார். நல்ல நிகழ்ச்சிகளை அடிக்கோட்டிட்டு வைத்து இருப்பார்கள் மறக்காமல் கேட்க.

இசைச்சாரலில்’ வெள்ளிக்கிழமை மாலை 5.30க்கு கர்நாடக இசை கேட்கலாம். டிரான்ஸ்சிஸ்ட்டரில் பாட்டு கேட்கும் போது என் இளமைக்காலம் நினைவுக்கு வந்தது விட்டது. 1970-ஆம் ஆண்டு. நானும் என் அண்ணனும் ‘விவிதபாரதி’யில் போட்டி போட்டுக் கொண்டு இந்திப் பாடல், ‘தேன் கிண்ணம்’ கேட்டு மகிழ்ந்த நினைவுகள் நெஞ்சில் நிழலாடுகிறது.கிரிக்கெட் நடக்கும் காலங்களில் கிரிக்கெட் நேர்முக வர்ணனையைக் கேட்டுக் கொண்டிருப்பார்கள்.

வானொலி என்றால் இலங்கை வானொலியைக் குறிப்பிடாமல் இருக்க முடியாது. வர்த்தக ஒலிப்பரப்பை எல்லோரும் விரும்பிக் கேட்பார்கள். தமிழ்நாட்டில் ஒலிக்காத இடம் இருக்காது. 
இலங்கை வானொலி என்றால் திரு. மயில்வாகனன் அவர்களை மறக்கமுடியாது என்று என் கணவர் கூறுவார்கள்.
படம் - கூகிள்

இலங்கை வானொலியில் தேசிய ஒலிபரப்பில் சிவன் ராத்திரி சமயம், கோயில் நிகழ்ச்சிகளை நேரடி ஒலிபரப்பு செய்வார்கள். கந்த சஷ்டி சமயம் சஷ்டி கவசம், ஒலிபரப்புவார்கள்.

அது ஒரு பொற்காலம் !

முன்பு மழைக்காலத்தில் டிரான்சிஸ்டருக்கு உடம்பு சரியில்லாமல் போய்விடும் , வெயில் வரும் போது டிரான்சிஸ்டரை காயவைத்து எடுப்போம். விடாத மழையால் மின்சாரம் தடைபடும் போது வானொலி கேட்க முடியாது. டிரான்சிஸ்டர்மட்டுமே கதி. அதனால் அப்போது வரும் பாட்டரி விளம்பரங்கள் வாரப்பத்திரிக்கையில்.






இந்த இரண்டு படங்களும் அம்மாவின் கதை சேமிப்பில் இடையில் வரும் விளம்பரங்க்கள்.


சென்னை, மதுரை, கோவை போன்ற நகரில் நிறைய எஃப் எம் ஒலிபரப்புகள் கேட்கிறது. எங்கள் மயிலாடுதுறையில் சில எஃப் எம் கள்தான் கேட்கும். காரைக்கால் பண்பலை நன்கு கேட்கும் அதில் இன்று ஒரு தகவல் அளித்து வந்த திரு.தென்கச்சி சுவாமி நாதன் அவர்களை மறக்க முடியாது.


தினம் ஒரு தலைப்பில் நேயர்களை பேச வைப்பது, விடுகதை நேரம் அது இது என்று 

இப்போதும் நாள்தோறும் காரைக்கால் வானொலி நிலையம் புதுச் செய்திகளை சொல்லிக் கொண்டு தான் இருக்கிறது. 


அம்பாளடியாள் அவர்கள் தொடர் பதிவுக்கு அழைத்து இருந்தார்கள்.  10 கேள்விகள் அதற்கு பதில் அளிக்க வேண்டும். மதுரைத் தமிழன் அவர்கள் அம்பாளடியாளை அழைத்து இருந்தார்கள்.

அதில் பத்தாவது கேள்வி தனியாக இருந்தால் என்ன செய்வீர்கள் ? என்று அதற்கு என் பதில் இனிய பாடலகள் கேட்பது தான் .


10.உங்கள் வீட்டில் நீங்கள் தனியாக இருந்தால் என்ன செய்வீர்கள் ?..

//தனியாக இருந்தால்  பாடல் கேட்பது பிடிக்கும்,  அதுவும் நல்ல பாடல்களை கேட்பது மிகவும் பிடிக்கும்.  தொலைக்காட்சியில் நல்ல நிகழ்ச்சிகள், அதில் பாடல்கள்,  கேட்பேன் தனிமையை இனிமை ஆக்குவது இசைதான். மன அமைதி தருவது இசை. தனிமையை போக்குவது இசைதான். எந்த வேலை செய்து கொண்டு இருந்தாலும் பாடல்கள் கேட்டுக் கொண்டு செய்வது எனக்கு பிடித்த ஒன்று.//




வானொலி கேட்பதையும்,. புத்தகம் வாசிப்பதையும், தொலைக்காட்சி பார்க்க ஆரம்பித்தவுடன் மக்கள் மிகவும் குறைத்துக் கொண்டார்கள். இப்போது மறுபடியும், வானொலி கேட்பதும், புத்தகங்கள் வாசிக்கும் பழக்கமும் வந்து கொண்டு இருக்கிறது. புத்தகக் கண்காட்சியில் விற்கும் புத்தகங்கள் அதற்கு சாட்சி. 

மின் வெட்டால் துன்பங்கள் நிறைய ஏற்பட்டாலும், வானொலி நிகழ்ச்சிகளைக் கேட்டதும் பழைய நினைவுகள் வந்து இளமை

திரும்பியதில் மகிழ்ச்சிதானே! 

                                                              வாழ்க வளமுடன்.







ஞாயிறு, 5 பிப்ரவரி, 2017

மீண்டும் மூவர் கோவில் (கொடும்பாளூர்)

போன ஆண்டு (2016) கடைசி மாதம் பதிவு எழுதியது , அதன் பின் இப்போது தான் எழுத நேரம் கிடைத்தது. டிசம்பர் மாதம்  மீண்டும் மூவர் கோவில் போகும் வாய்ப்பு கிடைத்தது.

 முன்பு  2015 ஆகஸ்டு மாதம் போனோம்  ஒரு வருடத்துக்குள்  நிறைய மாற்றங்கள். இந்த இடத்தின் வரலாறு சொன்ன பலகையைக் காணவில்லை, கிணற்றில் நீர் இல்லை. 


2015ல் எடுத்த படம்

2016ல் எடுத்த படம்

2015ல் எடுத்தபடம்


தண்ணீர் நிறைய இருந்தது அன்று 

இப்போது போனபோது ஒரு சொட்டுதண்ணீர்  இல்லை.

மூவர் கோவில் 


அப்போது பூக்கள் பூக்கவில்லை, இப்போது போனபோது பூக்கள் பூத்து இருந்தது.வண்ணத்துப் பூச்சிகள்  நிறைய சுற்றிக் கொண்டு இருந்தது  பூக்களை ,  நான் எடுக்கும் போது எல்லாம் பறந்து விட்டது. ஒன்று மட்டும் போனால் போகுது பாவம் என்று உட்கார்ந்து போஸ் கொடுத்தது.

கல்லில் பூத்த மலரில் வண்ணத்து பூச்சி, அதுவே பூ மாதிரி இருக்கிறது அல்லவா?

மகன் ஊரிலிருந்து வந்த போது  சில ஊர்களுக்குப் பயணம் செய்தோம் அதில்  மூவர் கோவிலும் உண்டு. மகன், மகள் அந்த கோவில் பார்க்கவில்லை என்பதால் அங்கு போனோம்.

 நான் முன்பே பார்த்து இருப்பதால்மூவர் கோவில் அழகை, அங்குள்ள கிணற்றின் அழகை எல்லாம் சொல்லிக் கொண்டே வந்தேன் ,. என் குழந்தைகளும், என் மருமகள், மருமகளின் அம்மா, எங்கள் பேரன் எல்லோரும் நன்றாக ரசித்துப் பார்த்தார்கள்.



பேரன் அங்குள்ள நந்தி மீது உட்கார்ந்து கொண்டு ஜல்லிக்கட்டுக் காளையை அடக்கியது போல் பெருமை கொண்டான்.




பக்கத்தில் உள்ள இடங்கழி நாயனார் கோவிலுக்கும் அழைத்து சென்றோம்,
முன்பு இடங்கழி நாயனார் கோவில் பதிவு படிக்கவில்லை என்றால் படிக்கலாம்.

அங்குள்ள ஆலமரத்தில் ஊஞ்சல் ஆடினார்கள். அங்கு நடந்த கபடி போட்டியைக் கண்டு களித்தார்கள்.





புது மடிக் கணினி . (மகன் வாங்கி தந்தது) அதில்  என் எச் எம்  செயல்பட மாட்டேன் என்பதால் அழகி பயன்படுத்துகிறேன் . பழைய மடிக் கணினி விண்டோஸ் -7 
இப்போது விண்டோஸ்- 10 கற்றுக் கொண்டு எழுதி வருகிறேன் பிழை இருந்தால் பொறுத்தருள வேண்டும்.

வாழ்க வளமுடன்.!