புதன், 6 டிசம்பர், 2017

இயற்கையை அறிவோம் (படித்ததில் பிடித்தது)







திரு. என். கணேசன் அவர்கள் சிறுகதைகள், ஆன்மீகக் கட்டுரைகள்,தன்னம்பிக்கைக் கட்டுரைகள் எழுதி உள்ளார். ஆழ்மனத்தின் அற்புத சக்திகள்,  வாழ்ந்து படிக்கும் பாடங்கள் என்று நிறைய எழுதி இருக்கிறார். புத்தகங்கள் போட்டு இருக்கிறார். ஆங்கிலத்திலும், தமிழிலும் வலைத்தளம் வைத்து இருக்கிறார்.



இவர் பதிவுகள் எல்லாம் நன்றாக இருக்கிறது,  அதில் படித்ததில் பிடித்ததை இங்கு பகிர்ந்து இருக்கிறேன்.



 இந்த காணொளி பிடித்து இருந்தால் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்களேன், என்று காணொளியின்  நிறைவில் சொல்லி இருந்தார். அதனால்  இங்கு பகிர்ந்தேன்.



அவர் சொல்வதைக்  கேட்கும்போது நன்றாக இருக்கிறது, ஆனால்

அந்த குழந்தையின் பக்குவத்தில் ஆனந்தமாய்  இருப்போமா  என்பதே நம்முள் கேள்வி. தோல்வியை, துயரத்தைத் தாங்கும் மனவலிமை, மீண்டும் உயிர்த்தெழும் தன்னம்பிக்கை இருந்தால் அவர் சொல்வது சாத்தியம்.  நடப்பது எல்லாம் கடவுள் செயல் என்றாலும் துவளாமல்இருக்கலாம்.



மார்கழி வரப்போகிறது 'மார்கழியில் ஆன்மீகமும் ,ஆரோக்கியமும்,'  என்ற கட்டுரை.

ஆன்மீகத்தையும், ஆரோக்கியத்தையும் வளர்க்கும்  மார்கழி மாதவழிபாட்டில் நாமும் ஈடுபட்டு இரட்டைப் பலன் அடைவோம் என்கிறார்.





"உடல்நலம் தரும் விரல் முத்திரைகள்" என்ற  பதிவு செயல்முறை விளக்கங்களுடன் இருக்கிறது.



மருந்துகள் இன்றி, பக்கவிளைவுகள் இன்றி  இருப்பதால்  உடல் ஆரோக்கியத்திற்கு செய்து பார்க்கலாம்.



"ஆறாத மனக்காயங்களை ஆற வைப்பதெப்படி?" இந்த பதிவில் வரும் கடைசி வார்த்தை மிகவும் பிடித்தது:-



   //நமது ஆறாத காயங்களின் வலியும், நமது பொருமல்களும் நம்மை காயப்படுத்தியவர்களை எந்த விதத்திலும்  பாதித்து விடுவதில்லை. மாறாக நம் மகிழ்ச்சியைத் தான் குலைத்து விடுகிறது என்பதையும் மறந்து விடாதீர்கள். உண்மையாகவே  இதெல்லாம் புரியும் போது அதுவரை ஆறாத காயங்களும் ஆற ஆரம்பிக்கும்.?/



"முதுமையிலும்  மூளையின் ஆற்றல் குறையாதிருக்க" என்ற பதிவு



முதுமையிலும் ஆற்றலைச் சிறப்பாகத் தக்க வைத்துக் கொள்ள முடியும் என்று ஆணித்தரமாகச் சொல்லும் கட்டுரை.



"வயதில்லா உடலும் காலமறியா மனமும்" என்ற பதிவு என் போன்ற வயதானவர்களுக்குத்  தன்னம்பிக்கை தருவது.



வளமான "வாழ்விற்கு  வழிகள் பத்து" எல்லாம் நன்றாக இருக்கிறது. படித்துப் பாருங்கள்.



'எனக்கு வயதாகவில்லை, எனக்கு எதற்கு' என்று நீங்கள்

 கேட்பது கேட்கிறது.  வயதாகும்போது பயன்படும் கட்டுரைகள் படிக்கலாம் ஒருமுறை.



நான்  பின் தொடரும் வலைத்தளம்  . உங்களுக்கும் பிடித்து இருந்தால் தொடரலாம்.



                                                                      வாழ்க வளமுடன்.!

---------------------------------------------------------------------------------------------------------------------------

சனி, 2 டிசம்பர், 2017

ஜோதி வழிபாடு, தீபத்திருநாள்

அண்ணாமலை உறை அண்ணா போற்றி!

கண்ணார் அமுதக் கடலே போற்றி!

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்சோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி


அக்னிஜுவாலை சொரூபமாகிய இறைவனை வழிபடும் நாள் கார்த்திகைத் தீபத்திருநாள்.  ஐசுவரியம், வீரம், தேஜஸ், செல்வம், ஞானம், வைராக்கியம் எனும்    ஆறுகுணங்களும்   ஆறுமுகங்களாய்  கார்த்திகைப்  பெண்களால்  வளர்க்கப்பட்ட முருகப் பெருமானை வணங்கும் நாளும் இந் நாளே.  கார்த்திகை நட்சத்திரத்தில் சரவணனை விரதமிருந்து  வணங்குவோர் நலம் பல பெற்று நற்கதி அடைவார்கள் என்று கந்த புராணம் சொல்கிறது.

அறிவை ஒளிக்கு உதாரணமாய் சொல்கிறார்கள். ‘சித்தமிசை குடி கொண்ட அறிவான தெய்வமே, தேஜோமய ஆனந்தமே!’ என்று தாயுமானவர் குறிப்பிடுகிறார்.

’அருளானோர்க்கு அகம்புறம் என்று உன்னாத
பூரண ஆனந்தமாகி இருள் தீர விலங்கு பொருள் யாது? அந்தப்
பொருளினை யாம் இறைஞ்சி நிற்பாம்.’

‘தூய அறிவான சுகரூப சோதிதன்பால்
தீயில் இரும்பென்னத் திகழுநாள்எந்நாளோ?’ 

என்றெல்லாம் தாயுமானவர் ஜோதிமயமான இறைவனைப் பாடுகிறார்.
காயத்ரீ மந்திரம் :-  நம்முடைய உயிராற்றலாகவும் துக்கத்தை அழிப்பதாகவும்  இன்பமே வடிவமாகவும் உள்ள சூரியனைப் போன்ற ஒளிமயமானதும், தன்னை விட மேலாக ஒன்றும் இல்லாததும். நம் பாபங்களை அழிக்கக் கூடியதுமான தெய்வீகப் பரம் பொருள் நமது அறிவை நல்வழியில் ஈடுபடுத்தட்டும்.’என்று இறைவனை ஒளிக்கடவுளாய் உணர்த்துகிறது.

’எவர் நம் அறிவைத் தூண்டி பிரகாசிக்கச் செய்கின்றாரோ அந்த ஜோதிமயமான இறைவனைத் தியானிப்போமாக’ என்று அந்த மந்திரம் கூறுகிறது.

அருணகிரிநாதர் திருப்புகழில் ’தீபமங்கள ஜோதி நமோ நம’ என்று 
முரு கனைப்பாடுகிறார். 

வள்ளலார் தீப வழிபாடு செய்தார். 

’ஏகாந்த மாகிய ஜோதி--என்னுள்
என்றும் பிரியா திருக்கின்ற ஜோதி
சாகாத வரந்தந்த ஜோதி--என்னைத்
தானாக்கிக் கொண்டதோர் சத்திய ஜோதி!

அருட்பெருஞ் ஜோதி! அருட்பெருஞ் ஜோதி!
அருட்பெருஞ் ஜோதி! அருட்பெருஞ் ஜோதி!

அருள் ஒளி என் தனி அறிவினில் விரிந்தே 
அருள் நெறி விளக்கெனும் அருட் பெருஞ் ஜோதி ’


’அருள் விளக்கே அருட்சுடரே அருட்சோதிச் சிவமே
அருள் அமுதே அருள் நிறைவே அருள் வடிவப் பொருளே
இருள்கடிந்தென் உளமுழுதும் இடங்கொண்ட பதியே
என் அறிவே என் உயிரே எனக்கினிய உறவே 
மருள் கடிந்த மாமணியே மாற்றறியாப் பொன்னே
மன்றில் நடம் புரிகின்ற மணவாளா எனக்கே 
தெருள் அளித்த திருவாளா ஞான உருவாளா
தெய்வநடத் தரசே நான் செய்மொழி ஏற்றருளே.’

என்று கூறி வள்ளலார் இறைவனை வழிபட்டார்

அறியாமை இருளைப் போக்கி அறிவு ஒளியைத்  தந்த இறைவா எனப் பாடுகிறார்.

கருங்குழியில் வீட்டில் ஒருநாள் இராமலிங்க அடிகள் எழுதிக் கொண்டு இருக்கும் போது விளக்கு மங்கவே, எண்ணெய்ச் செம்பென நினைத்துத்  தண்ணீர்ச் செம்பை எடுத்து விளக்கில்  ஊற்றினார். விளக்கு இரவு முழுவதும் நன்கு எரிந்தது. தண்ணீரில் விளக்கெரிந்த இந்த  அற்புதத்தை ஒரு பாடலில் குறிப்பிடுகிறார் வள்ளலார்.

அப்பாடல்:-:

’மெய் விளக்கே விளக்கல்லால் வேறுவிளக்கில்லை என்றார் மேலோர் நானும்
பொய்விளக்கே விளக்கென உட் பொங்கிவழி கின்றேன் ஓர் புதுமை அன்றே
செய்விளக்கும், புகழுடைய சென்னநகர் நண்பர்களே செப்பக் கேளீர்!
நெய்விளக்கே போன்றொருதண்ணீர் விளக்கும் எரிந்தது சந்நிதியின் முன்னே.’

அறுபத்து மூன்று நாயன்மார்களில்  ஒருவரான கணம்புல்லர் கார்த்திகை மாதம் கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்ததால் தான் என்னமோ அவர் தான் பிறந்த இருக்குவேளூர் இறைவனுக்கு விளக்கெரித்துத் தொண்டு செய்தார்.வறுமை வந்த போதும் கணம்புல் என்னும் ஒருவகைப் புல்லை அறுத்து விலைக்கு விற்றுத் திருவிளக்கு ஏற்றி வந்தார்.ஒரு நாள் புல் விற்கவில்லை அதையே திருவிளக்குக்கு இட்டு எரிக்கமுற்பட,அதுவும் போதாமையால் தம் திருமுடியை விளக்கில் மடுத்து எரித்து மகிழ்ந்து இறைவனின் அருள் பெற்றார்.

நமி நந்தி அடிகள் என்னும் நாயனார் தண்ணீரில் விளக்கு எரித்து இருக்கிறார்.

மசூதியில் விளக்கேற்றி அது விடிய விடிய எரிவதைப் பார்ப்பதில் ஷீரடி சாய்பாபாவிற்கு மகிழ்ச்சி. அதற்காக பக்கத்தில் உள்ள இரண்டு கடைகளில் இலவசமாக எண்ணெய் பெற்று வந்தார். ஒருநாள் அந்த வியாபாரிகளின் எண்ணம் மாறியது. ‘நாம் இலவசமாக எண்ணெயைக் கொடுத்து பக்கிரி என்ன விளக்கேற்றுவது? இனி நாம் எண்ணெய் கொடுக்கக் கூடாது. எண்ணெய் இல்லை என்று சொல்லிவிடவேண்டும்’என்று அவர்கள் பேசி வைத்துக் கொண்டார்கள். வழக்கம் போல் எண்ணெய் வாங்கும் தகரக் குவளையை எடுத்துக் கொண்டு
பாபா அக் கடைகளுக்குப் போனார்.’ஒரு துளி எண்ணெய் கூட இல்லை. இனி மேல்தான் வர வேண்டும்’ என்று அந்த வியாபாரிகள் கூறினார்கள்.

பாபா கிணற்றடிக்குச் சென்று நீர் இறைத்து அந்த குவளையில் ஊற்றி நன்றாகக் கழுவினார். பின்,அதில் தண்ணீரை எடுத்துக் கொண்டு மசூதிக்குச் சென்றார். அந்த தண்ணீரை விளக்கில் ஊற்றி ஏற்றினார்.

முன்னிலும் பிரகாசமாய் விளக்கு எரிந்ததாய் சாயி சரிதம் கூறுகிறது. 

இசை மேதை தான்சேன் தன் இசையால் விளக்குகளை ஏற்றியதாக வரலாறு உள்ளது.


தீபத்திருநாள், 

தீபங்கள் ஒளி வீசும் நாள். கார்த்திகை மாதத்தில் மாலையில் சீக்கீரம் இருட்டி விடும். மாலை  நேரத்தில் வீட்டு வாசலில் இரண்டு விளக்கு வைத்து இருளை நீக்கினார்கள். மார்கழி மாதத்தில் அதிகாலை நேரத்தில் வாசலில் இரண்டு விளக்கு வைப்பார்கள். தை மாதம் பொங்கல் வரை விளக்கு வைப்பது தொடரும். தீப வழிபாடு இங்கு மிகவும் போற்றப் படுகிறது. 


சர்வாலய தீபம்:

சிவபெருமானின் சன்னதியில் இருந்த ஒரு விளக்கின் ஒளி குறைந்த போது,எண்ணெய் உண்ண வந்த ஒரு எலி தன்னை அறியாமல் திரியைத் தூண்டி,விளக்கை பிரகாசப்படுத்தியது. இந்த சிவ புண்ணியத்தால் அந்த எலி மறு பிறவியில் மாவலி (மகாபலி)சக்கரவர்த்தியாக, அந்த மாபலி சக்கரவர்த்தி சிவால யத்தில் ஒரு சமயம் செருக்குடன் வலம் வந்த போது அவன் மீது தீபம் விழுந்து உடம்பு புண்ணாகி வருந்தினான்.சிவபெருமான் அசரீரியாகி “நீ செருக்குற்றதால் இப்படி செய்தோம் இன்று முதல் எல்லா சிவாலயங்களிலும், இருள் சூழ்ந்த மற்ற இடங்களிலும் நீ தீபம் ஏற்றினால் சாயுச்சய பதவி அடைவாய்” என்று கூறினார். அவ்வாறு ஏற்றி வரும் போது, கார்த்திகை மாதம் வளர் பிறை கிருத்திகை நட்சத்திரத்தில் உக்கிர வடிவத்தில் சிவன் பேரொளியாகத் தோன்றினான். அஞ்சிய திருமால் முதலியோர் உக்கிரம் தணிய, பொரி, அவல் முதலியவற்றை நிவேதனம் செய்து வழிபட்டனர் என்று அபிதான சிந்தாமணி கூறுகிறது.

இந்த நிகழ்வை நினைவுகூரும் படியாக எப்போதும் திருக்கார்த்திகை விழாவாக மக்கள் கொண்டாடி வருகின்றனர்.பொரி அவல் முதலியவற்றைப் படைத்து வழிபடுகின்றனர்.இந்த கார்த்திகைத் திருவிழாவை 1000 ஆண்டுக்கு முன்பே கொண்டாடி இருக்கின்றனர்.திருஞானசம்பந்தர் எலும்பிலிருந்து பூம்பாவையை மீண்டும் பெண்ணாக்கிய போது ’விளக்கீடு காணாது போதியோ பூம்பாவாய்’ என்று பாடினார்.அந்தக் காலத்தில் கார்த்திகை தீப விழாவை விளக்கீடு என்று வழங்கினார்கள்.




விஷ்ணுதீபம் :-



விஷ்ணு ஆலயங்களில் இவ் விழா நடப்பதற்கு காரணம் விரதமகாத்மியத்தில் பின் வருமாறு கூறப்படுகிறது: திருமகள் ஒரு அசுரனுக்கு பயந்து ஒரு காட்டில் ஒளிந்து இருக்க அவ் அசுரன் அக் காட்டை கொளுத்தினானாம் அப்போது திருமகள் அந்தரத்தில் சென்று மறைந்தாளாம் அதனை நினவுபடுத்தும் வகையில் தீ ஏற்றுவார்கள்.



ஒளி படும் இடங்களிலெல்லாம் மகாலட்சுமி தேடி வந்து நின்று அருள் புரிவாள்.அந்த வீட்டில் லட்சுமி கடாட்சம் ஏற்படும் என்று கூறப்படுகிறது.



கார்த்திகை விரதம்:

முருகனைக் குறித்து மேற்கொள்கின்ற விரதங்களில் கார்த்திகை விரதமும் ஒன்றாகும். பரணி நாளில் முருகனின் பெருமையை கேட்டுக் கொண்டும் பாடிக்கொண்டும் இருந்து, மறுநாள் முருகனை வழிபடுவது இந்த விரதமாகும்.கார்த்திகைப் பெண்கள் ஆறு பேரும் முருகக் கடவுளுக்குப் பாலூட்டி விரத பலத்தை அடைந்ததை இவ் விரதம் குறிக்கும்.

விளக்கு வழிபாட்டின் பயன்:



கள்ளன் அறிவூடுமே மெள்ள மெ(ள்)ள வெளியாய்க்
கலக்க வரு நல்ல உறவே.
-தாயுமானவர்

விளக்கு எரியும் வீட்டுக்குள் திருடர் புகத்துணியார். மனத்தினுள்ளே தெய்வத்தின் ஞான விளக்கேற்றி வைத்திருக்கும் பொழுது புல்லிய எண்ணங்கள் என்ற கள்ளர் புகுவதில்லை. 

கார்த்திகை விளக்கேற்றி இறையருள் பெறுவோம்.
அக இருளை விலக்கி அங்கு ஒளி பொருந்திய இறைவனைக் குடியேற்றினால் வாழ்வில் வளம் பெருகும்.




 எல்லோருக்கும் தீபத்திருநாள் வாழ்த்துக்கள் !

எல்லோருக்கும் கார்த்திகைத் திருநாள் வாழ்த்துக்கள் !
                                                                     வாழ்க வளமுடன் !


=========================================================================

புதன், 29 நவம்பர், 2017

நீலவண்ண கண்ணா - ரசித்த பாடல்





இன்று மருதகாசி அவர்களின் நினைவு நாள்.





எனக்கு மிகவும் பிடித்த பாடல் -  நீலவண்ண கண்ணா வாடா- பாடல். கிருஷ்ணஜெயந்தி சமயம் வானொலியில்ஒலிக்கும் பாடல். இப்போது தொலைக்காட்சியிலும் கிருஷ்ணஜெயந்திக்கு வைக்கிறார்கள்.

பாலசரஸ்வதி அவர்களின் குரலில் குழைந்து, இழைந்து வரும் அன்புப் பாடல்.

 இந்தப் பாடலுக்காகத் திரைப்படத்தைப் பார்த்தேன்  அன்பு நிறைந்த கதை.



//÷மெட்டுக்கு விரைந்து பாடல் எழுதும் ஆற்றல் பெற்றவர் மருதகாசி.//





//"நீலவண்ண கண்ணா வாடா'' என்று மங்கையர் திலகம் படத்தில் இவர் எழுதிய பாடல் குழந்தைகளுக்கான தமிழ்த் திரைப்படங்களில் தீட்டப்பட்ட பாடல்களுக்கெல்லாம் மகுடம் எனக் கூறலாம். குழந்தைகளுக்கான திரைப்பாடல்களை அதிகம் எழுதியவரும் இவராகத்தான் இருக்கும்.

 ÷"சத்தியமே லட்சியமாய் கொள்ளடா', "சமரசம் உலாவும் இடமே', "முல்லை மலர் மேலே மொய்க்கும் வண்டு போலே', "ஏர் முனைக்கு நேர்முனை எதுவுமே இல்லை', "மணப்பாறை மாடுகட்டி', "ஆனாக்க அந்த மடம்', "வருவேன் நான் உனது மாளிகையின் வாசலுக்கே', "காவியமா? நெஞ்சின் ஓவியமா?' - முதலிய இவர் எழுதிய திரைப்பாடல்கள் நெஞ்சை விட்டு என்றும் அகலாதவை.//





                                               



"திரைக்கவித் திலகம் ' மருதகாசி பற்றி

ஆர். கனகராஜ் அவர்கள் எழுதியதை   பசுபதிவில் படித்தேன்  மருதகாசி அவர்களைப் பற்றி விரிவாக இருக்கிறது. படித்துப் பார்க்கலாம்.
பசுபதிவு அவர்களுக்கு நன்றி.
யூடியூப்பில் பகிர்ந்த அன்பருக்கும் நன்றி.



வாழ்க வளமுடன்.





செவ்வாய், 21 நவம்பர், 2017

மனமகிழ் விழா





அரிசோனா தமிழ்ச் சங்கத்தில் "தீபாவளி விழா"  போனவாரம்  நடந்தது. அந்த விழா நடத்திய நாடகத்தில் பேரன் கவின் ஓநாய் வேடத்தில் நடித்தான். நாங்கள் கலந்து கொண்டோம்.

                                       பேரன்

ஞாயிறு, 19 நவம்பர், 2017

விதி வலியது



இதற்கு முந்திய பதிவில் அழகுரதம் பொறக்கும்

 எல்லோரும் விதி வலியது என்று ஏற்றுக் கொண்டு கருத்து கொடுத்து இருந்தார்கள்.
அதனால் எனக்கு பிடித்த பழைய பாடலை இங்கு பகிர்ந்து இருக்கிறேன்.
இதில் வரும் வார்த்தைகள் எல்லாம் மிக உண்மையான வார்த்தைகளாய் இருக்கும்.


S.C.கிருஷ்ணன் பாடிய மிகச் சிறந்த பாடல்.

வாழ்க வளமுடன்.


வெள்ளி, 17 நவம்பர், 2017

அழகு ரதம் பொறக்கும்


எங்கள் பிளாக் ஸ்ரீராம் கதை கேட்ட போது  என்ன எழுதுவது என்று மிகவும் யோசித்தேன். ஒரே ஒரு கதைதான் எழுதி இருந்தேன்., அதுவும் குட்டிக் கதை.
அதுவும் எங்கள் ப்ளாக்கில் இடம்பெற்று இருக்கிறது.

அவர் தளத்தில்   எனக்கு முன்பு கதை எழுதியவர்கள் கதை எல்லாம் மிக அருமையாக இருந்தது. என்ன கதையை எழுதுவது என்ன எழுதுவது என்று யோசித்தபோது என் அன்பு மதினியின் நினைவு வந்தது அவர்களைப் பற்றிய கதையை எழுதி  அனுப்பினேன், முடிவை மாற்றி.

ஸ்ரீராம் அப்பா கேட்டுக் கொண்டபடி  சீதை ராமனை மன்னித்தாள் என்று முடித்து மகிழ்ச்சியாக வலம் வந்தாள் என் அன்பு மதினி.

'எங்கள் ப்ளாக்'  தளத்தில் கடந்த முப்பது நாட்களில்  அதிகம் படித்ததாக இடம்பெற்ற பதிவுகளில் என் கதையும் இடம் பெற்றது மகிழ்ச்சியைக் கொடுத்தது.

தமிழ்மண வாக்கும் அதிகம் கிடைத்தது மகிழ்ச்சி.
வாக்கு எங்கள் ப்ளாக்கில் எழுதியதால் கிடைத்தது.

 என் கதை 24 வது கதையாக இடம்பெற்றது.

என் எழுத்தைப் படித்து ஆதரவு அளித்து வரும் அனைத்து வலை  நட்புகளுக்கும் நன்றி.
கேட்டு வாங்கிப் போட்ட ஸ்ரீராமுக்கும் நன்றி.


எங்கள் ப்ளாக் தளத்தில் படித்து இருப்பீர்கள்.  இங்கு பகிர்ந்த கதையில் சின்ன மாற்றம் கதை முடிவில் - படித்துப் பாருங்கள்.

ஸ்ரீராம்! உங்கள் தளத்தில் கதை வந்ததால் நீங்கள்  கருத்து சொல்லவில்லை.
படித்துவிட்டு கருத்து சொல்லுங்கள்.



பத்மா, பழனி இருவரும் மிக  மகிழ்ச்சியாக தங்கள் மணநாளைக் கொண்டாடினர். பத்மாவின் மாமியார் ஆசிர்வாதம் செய்யும் போது சீக்கிரமாய்ப்  பேரனைப் பெற்றுக் கொடு பத்மா என்று ஆசீர்வாதம் செய்தார்கள்.


பழனிக்கும் பத்மாவிற்கும் அந்த ஆசை இருந்தது . திருமணம் ஆகி இரண்டு வருடங்கள் ஆகிவிட்டன.


ஒரு பெண் குழந்தை பிறந்து வளரும் போதே, எதிர்பார்ப்புகளும் சேர்ந்தே வளர்கின்றன.  குழந்தைப் பருவம் மாறி,  கன்னியாக மாற வேண்டும் என்ற எதிர்பார்ப்பு, அப்புறம் அவளை நல்ல வாழ்க்கைத் துணையிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு. தன் குலம் தழைக்க   அவர்களின் அன்பின் அடையாளமாய் ஒரு புது மலரை எதிர்ப்பார்ப்பது     என்று தொடரும் எதிர்பா ர்ப்புகள்  மனித இயல்பு. 


இப்படித்தான் பத்மாவிடம் எல்லோரும் எதிர்பார்த்தனர்.



பத்மாவின் பெற்றோர்  அவள் குழந்தையாக இருக்கும் போதே இறந்து விட்டார்கள். பத்மா  தாத்தா, பாட்டி, சித்தப்பா, அத்தையின் அன்பான வளர்ப்பில் வளர்ந்தாள்.  அத்தை வீட்டு மாமாவுக்கு ஊர் ஊராக மாற்றல் ஆகும்.   விடுமுறைக்கு அத்தை வீடு போவாள்,  மாமா அந்த ஊரில் உள்ள சிறப்பான இடங்களை அவளுக்குச் சுற்றிக் காட்டுவார்.  விடுமுறை நாட்களை அத்தை குழந்தைகளுடன் கழித்து வந்த அனுபவங்களைத் தாத்தா, பாட்டி, சித்தப்பாவிடம் சொல்லிச் சொல்லி மகிழ்ந்து, அடுத்த விடுமுறையை எதிர்பார்த்துக்  காத்து இருப்பாள் , அத்தை குழந்தைகளும் பத்மா மதினி வரும் நாளை எதிர்பார்த்து இருப்பர்.



தாத்தாவும், பாட்டியும்  இறைவனிடம் சென்றுவிட்டார்கள், பத்மா பள்ளிப் படிப்பை முடித்த சமயம்.   அதன் பின் அத்தை வீட்டிலேயே இருந்து தட்டச்சு கற்றுக் கொண்டு அத்தைக்கு உதவியாக இருந்தாள்.
அத்தை வீட்டு மாமாவும் பத்மாவைத் தன் மூத்த மகளாகப் பாசத்தைக் காட்டி வளர்த்தார்.


 அத்தையும், மாமாவும் நல்ல வரன் பார்த்து  திருமணம் முடித்து வைத்தார்கள். பத்மாவின் சித்தப்பாவிற்கும், பத்மாவிற்கும்  ஒரே நாளில் திருமணம் நடந்தது. சித்தி கருவுற்றாள் பத்மா மாமியாரின்  எதிர்பார்ப்பும் வளர்ந்தது . இரண்டு பேருக்கும் ஒண்ணா திருமணம் ஆனது -உன் சித்திக்குக் குழந்தை பிறக்கப் போகிறது, உனக்கு ஒன்றும் காணோம்  என்று பேசினார்கள். , வீட்டுக்கு வரும் உறவினர்களும்  கேட்க ஆரம்பித்து விட்டார்கள்.


பத்மா தன் அத்தையிடம் சொல்லி வருந்தினாள் . அத்தை,  "உனக்கு   குழந்தை பிறக்கும்...  மகிழ்ச்சியாக இரு, மனதில் கவலையுடன் இருக்கக் கூடாது,  இறைவனுக்கு எப்போது கொடுக்க வேண்டும் என்று தெரியும் அப்போது கொடுப்பார்" என்று ஆறுதல் படுத்தினார்.


 அவள் அத்தைக்கு  அடுத்து அடுத்து குழந்தைகளைக் கொடுத்த ஆண்டவன் அவளுக்கு ஒன்றைத் தர மறுப்பது ஏன் என்றே தெரியவில்லை பத்மாவிற்கு.  வேண்டும் வேண்டும் என்பார்க்குக் கொடுக்காமல், வேண்டாம் என்பவர்களுக்குக் கொடுப்பது  இறைவனின் விளையாட்டு தானே!


ஆண்டுகள் சென்றது, யார் என்ன பிரார்த்தனை செய்யச் சொன்னாலும், செய்தாள்.  பக்கத்துவீட்டு  அனுபவம் மிக்க  பெண்மணி வாழைப்பழத்தில் பிள்ளைப் பூச்சியைப் பிடித்து உள்ளே விட்டு அது வெளி வந்தவுடன் அந்த பழத்தை உண்ணச் சொன்னார், முகம் சுளிக்காமல் அதையும் செய்தாள் பத்மா. சஷ்டி விரதம் இருந்தாள் "சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும் " -இது பழமொழி ." சஷ்டி விரதம் இருந்தால்  கருப்பையில் கரு உருவாகும் என்பதை அப்படி முன்னோர் சொல்லி வைத்து இருக்கிறார்கள்.


 வேண்டுதல்களும், பிரார்த்தனைகளும், பலித்துக்   கருவுற்றாள் பத்மா உற்றார், உறவினர் அக்கம் பக்கம் எல்லோரும் மகிழ்ந்தனர் .
பதமாவிற்கும், பழனிக்கும்  ஒரு  சினிமாப் பாடல் பிடித்துப் போனது. அது;-
 'அழகு ரதம் பொறக்கும், அது அசைந்து அசைந்து நடக்கும் ' 
கற்பனையில், திளைத்தனர், ஆனந்தக் களிப்பில் மிதந்தனர்.


 தகுந்த காலத்தில் பெண் குழந்தை  பிறந்தது, தனக்குச் சாந்தி அளிக்கப் பெண் பிறந்தாள் என்று 'சாந்தி' என்று பெயர்  சூட்டினாள்.  குடும்பவழக்கப்படி மாமியார் பேர் வைத்தாள். அவள் பெரியவர்கள் பேர் சொல்லி அழைக்க முடியாதே(மரியாதைக் குறைவு ஆகிவிடும்) அதனால்   சாந்தி  என்று அழைத்து மகிழ்ந்தாள்.


 மலடி என்ற பேரை கொடுக்காமல்  குழந்தையைக் கொடுத்துப் பின் குழந்தைக்குக் கடுமையான காய்ச்சலையும்  கொடுத்து அந்தப் பிஞ்சுக் குழந்தையைத்  தன் பக்கம் எடுத்துக் கொண்டார் இறைவன். பத்மா, துடித்தாள்! துவண்டாள்!  'குழிப் பிள்ளை மடியில்' என்று  வந்தவர்கள் ஆறுதல் சொன்னார்கள்.


அத்தை குழந்தைகளைத் தன் குழந்தைகளாக நினைந்து ஆறுதல் அடைந்தாள்.  இரண்டு மூன்று வருடங்களில்  மீண்டும் கருவுற்றாள்.  அவள் கணவர் பிரவசத்திற்குப் பத்மாவை  அத்தை வீட்டுக்கு அனுப்பும் போது, "பத்மா! இந்த முறை  மகன் பிறப்பான்.நான் பட்டுப்புடவையுடன் வருகிறேன்" என்று வழி அனுப்பினான்.


 அத்தை , மாமா, அவர்கள் குழந்தையிடம் தன் அத்தானின் எதிர்பார்ப்பைச்
சொல்லிச் சொல்லி மகிழ்ந்தாள்.


 பிரசவ அறைக்குப் போகும்முன் "குழந்தை பிறந்தவுடன் அத்தானுக்குப்   போன் செய்து விடுங்கள்" என்று அத்தை மாமாவிடம்  சொல்லி மலர்ந்த முகத்துடன் சென்றாள்.


குழந்தை பிறந்தான் பழனியின் எதிர்பார்ப்புப்படி, ஆனந்த வெள்ளத்தில் அத்தை, மாமா, பத்மா அகம் மகிழ்ந்தனர். பழனிக்குச் செய்தியைச் சொல்லி விட்டு  அனைவருக்கும்   தனக்குப் பேரன் பிறந்து இருக்கிறான் என்று இனிப்பு வழங்கி மகிழ்ந்தார். பத்மாவை தன் மூத்த  குழந்தையாக நினைத்த மாமா.


பழனி பத்மாவையும்  குழந்தையையும் பார்க்கத் துடித்துக் கொண்டு இருந்ததில்  பத்மாவிற்கு கொடுத்த வாக்கை மறந்தான் , பட்டுப்புடவை வாங்கவில்லை. வெறுங்கையுடன்  வந்தான்.  


ஆனால் பத்மா  வருத்தப் படவில்லை, கோபப்படவில்லை,  அவளுக்கு  மகன் பிறந்த பூரிப்பில் முகம் மலர்ந்து இருந்தது.   தனக்குக் குழந்தை பிறந்த  மகிழ்ச்சியைவிட பட்டுப்புடவை ஒன்றும் பெரிதல்ல என்ற மன நிலையில் இருந்தாள்.  " சீதை ராமனை மன்னித்து விட்டாள்" .

--------------------------------------------------------------------------------------------------------------------------


ஸ்ரீராம் கேட்ட கதைக்கு மகிழ்ச்சியான முடிவாய் முடித்து கொடுத்து விட்டேன்.
இந்த கதையின் உண்மை கதாநாயகி  பிரசவ அறையில் ஜன்னி கண்டு இறந்து விட்டாள். 

அந்த விஷயம் கேட்டதும் தான் பத்மாவின் கணவர் பட்டுபுடவை வாங்காமல் ஓடி வந்தார்.


//அப்பாவி அதிரா:-

ஹா ஹா ஹா ரொம்ப சீரியஸ் ஆக்கிக்கொண்டு போய் முடிவில் ஒரு சேலையை வத்து டுவிஸ்ட் வைத்து ... ராமனை மன்னிக்கப் பண்ணிட்டீங்களே.... 

எனக்கு படிக்கப் படிக்க நெஞ்சு பக்குப் பக்கென்றது... பத்மாவுக்கு ஏதும் ஆகியிருக்குமோ என... நல்லவேளை நல்ல முடிவு... 

இருப்பினும் கோமதி அக்கா, பேச்சுப் பேச்சா இருக்கோணும்:) எனக்கு வாக்குக் கொடுத்திட்டால் அதை மீறுவது பிடிக்காது:)... அதனால பட்டுச்சேலையை வாங்கி வந்துவிட்டுக் குழந்தையைத் தூக்கச் சொல்லுங்கோ:).. அல்லது சேலை வாங்காததுக்கு நியாயமான காரணம் சொல்லும்படி கேட்கச் சொல்லிப் பத்மாவிடம் சொல்லி விடுங்கோ..:).//

என்று பின்னூட்டம் போட்ட அதிராவிற்கு நான் அளித்த பின்னூட்டம் கீழே :-

வணக்கம் அதிரா, வாழ்க வளமுடன்.
கதையைப் படித்து அதன் முடிவையும் கண்டு பிடித்துவிட்டீர்கள் . அதி புத்திசாலி. குழந்தை மனம் கொண்ட அதிராவிற்குள் நடந்து இருப்பதை உணரும் தன்மையும் இருக்கிறது. 

ஶ்ரீராம் கேட்ட கதைக்கு இந்த முடிவு. ஶ்ரீராம் தளத்தில் மகிழ்ச்சியாக  இருக்கட்டும் பத்மா.

கருத்துக்கு நன்றி அதிரா.


என் தளத்தில் மீதியைப் போடுகிறேன் என்றேன். அந்த மீதி சோகக் கதை:-


அதிரா பத்மாவிற்கு ஏதும் ஆகி இருக்குமோ என்று   பயந்துவிட்டேன் நல்லவேளை நல்ல முடிவு என்றார். அப்படி நல்ல முடிவாய் இருந்து இருக்கலாம்.அப்படி இல்லாமல் போய் விட்டது.

தன் குழந்தையைப் பார்த்து  முகம் மலர்ந்து சிரித்த சிரிப்புடன்  அவள் கதையை முடித்து விட்டார் இறைவன் குழந்தையைக்  கொஞ்சக்கூட விடவில்லை.

எங்களை எல்லாம் சோகக் கடலில் மூழ்க வைத்து விட்டார் அன்பு மதினி பத்மா  .

பத்து நாட்களில்  பத்மா மதினி   குழந்தையும்  தன் தாயைத் தேடி போய்விட்டது. அங்கு தாயும் மகனும் மகிழ்ந்து இருப்பார்களோ!

                                                  வாழ்க வளமுடன்!







வெள்ளி, 10 நவம்பர், 2017

பரங்கிக்காய்த் திருவிழா பாகம் -2

முந்திய பரங்க்கிக்காய்த் திருவிழா பதிவு பார்க்காதவர்கள் ப்பார்க்கலாம்.


பூதத்தை ஏணிமேல் ஏறி கத்தியால் வெட்டுகிறது,  பக்கத்தில் பியானோ வாசிக்கிறது
காப்பியுடன் பேப்பர் படிக்கிறது

மேலும், கீழும்   முகம் காட்டும்  கலை
குத்துச்சண்டை

குத்துச்சண்டை செய்யும் போது முகபாவம்  எப்படி?

காத்துருப்பு எதற்கு என்று தெரிகிறதா?
விஞ்ஞானி
காட்டுவாசியிடம் மாட்டிக் கொண்டு வேகவைக்கப் படுகிறது தீயில்

ஜெயில் கைதிகள், உயர் காவலர் உள்ளே, வெளி காவலர்


தூக்குமேடை 
தூக்கில் போடுவதைப் பார்த்து பயந்து ஓடுபவர்கள்

சூனியக்காரனிடம் மாட்டிக் கொண்டது, வண்டி முன்னும் பின்னும் சிலதுகளை கட்டி இழுத்து செல்கிறான்.


நண்பர்களைக்  காப்பாற்ற சாகசம் செய்கிறது
நீச்சல் அடிக்க மேலே ஏறுகிறது

மேலே இருந்து குதிக்கிறது
மல்லாந்து படுத்து  நீச்சல்



                          நீச்சல் குளத்திலிருந்து குளித்து முடித்து ஏறுகிறது

இடுப்பில் ஒரு குழந்தை, தள்ளு வண்டியில் ஒரு குழந்தையுடன் திருவிழா
 பார்க்க வந்த தாய்



கரீபியன் பொக்கிஷத்தைப் பார்க்க டிக்கட் வாங்கிப் பார்க்க வேண்டும்.

குழந்தைகள் களித்து விளையாட இரண்டு விதமான சறுக்கு மரம்.
பார்க்கப் பார்க்கத் திகட்டாத காட்சிகள்.
வாழ்க வளமுடன்.

வியாழன், 2 நவம்பர், 2017

பரங்கிக்காய்த் திருவிழா

இந்த இடத்தில் தான் பரங்கிக்காய்த் திருவிழா நடந்தது.அக்டோபர்  20  தேதியிலிருந்து 29ம் தேதிவரை (2017). பாலைவனப் பூங்காவில்  நடைபெற்ற பரங்கிக்காய்த் திருவிழாவிற்கு அழைத்து சென்றான் மகன்.  பீனிக்ஸிலிருந்து 20 நிமிடப் பயண தூரத்தில் இருக்கிறது இந்த இடம்.  
ரே பற்றிய தகவல் பலகை

 .
அக்டோபர் மாதம் ஆலோவின் கொண்டாட்டம் 31ம் தேதி.  அந்த சமயத்தில் நடந்த விழா.

அக்டோபர் மாதம் பறங்கிக்காய், ஆப்பிள் நிறைய காய்க்குமாம். அதனால் அதில் இனிப்புகள், உணவுகள் செய்து உறவினர், நண்பர்களுக்கு கொடுப்பார்களாம்.

இவர் தான் இந்த பரங்கிக்காய்ச் சிற்பங்களை   உருவாக்கியவர். இவர் பேர் ரேவில்லாஃபேன். பனியிலும் சிற்பங்கள்  செய்வாராம்.

பறங்கிக்காயைச் செதுக்கிச் சிற்பங்கள் செய்த கலைஞர் எல்லோரிடமும் உற்சாகமாகப் பேசிக் கொண்டு இருந்தார்.

அழகான் கள்ளிச் செடிகள்

பரங்கிக்காய் கண்காட்சி நடந்த இடத்தில் அழகான கள்ளிச் செடிகள்.  உயரமாய் அதைச் சுற்றி வண்ண விளக்குகள் ,மரத்தை சுற்றி வண்ணவிளக்குகள்.. மற்ற இடங்கள் எல்லாம் இருட்டு. ஒருவர் பின் ஒருவராகப் போய்ப் பார்த்தோம் கூட்டம் நிறைய . பார்வை நேரம் மாலை ஆறு முதல் இரவு 9 மணி வரை. எல்லோரும் அலைபேசியிலும், காமிராவிலும் படம் எடுத்து கொண்டு நகர்வதால் வரிசை மெதுவாக நகர்ந்து போனது.

  அதிகமாய் காய்த்த பரங்கிக்காயை வைத்து அழகான  கண்காட்சி.  உணமையான பரங்கிக்காயில் செய்தவை கள்ளிச்செடிக்குள் கண்ணாடிக் கூண்டுக்குள் பத்திரமாய் இருந்தது




மற்றவை  செயற்கை பரங்கிக்காய்கள். திறந்த  வெளியில் ஒருவாரத்திற்கு மேல் இருந்தால்  கெட்டுப் போய் விடும், காட்டுப் பன்றிகள் வந்து அவற்றைத் தின்று விடும் என்பதால்  செயற்கை பரங்கிக் காயில் கண்காட்சி.  கற்பனை திறனைக் கொண்டு  நிறைய காட்சிகள் அமைத்து இருந்தார்.செயற்கைப் பரங்கிக்காயிலும் உண்மையான பரங்கிக்காய் போல் செய்வதைப் பாராட்டத்தான் வேண்டும்

நம் நாட்டில் நிறைய சமையல்   கலைஞர்கள், கலைத்திறன் கொண்டவர்கள், கல்யாணம் விழா மற்றும் விருந்து விழாக்களில்  அழகாய் செய்வார்கள்.  


  


ஜெயில் காட்சி, தூக்குமேடைக் காட்சி, குத்துச் சண்டைக் காட்சி , பேப்பர் படிக்கும் காட்சி   நீச்சல்குளத்தில் குளிப்பது என்று இன்னும் நிறைய காட்சிகள்   இருக்கிறது. 

குழந்தைகள் விளையாட சறுக்கு மரம், நடந்து நடந்து களைப்படைந்து தாகம் , பசி எடுத்தால் உணவு விடுதி, ஐஸ்கீரிம் கடை என்று இருந்தது.  வீட்டுக்குப் பரங்கிக்காய் வாங்கிச் செல்ல கடை, பரங்கிக்காயில் வித விதமான பொம்மைகள் எல்லாம் இருந்தன. 


ஒற்றைக் காலில் தவம் செய்கிறார்
பத்மாசனத்தில் மரத்தடியில் தவம் செய்கிறார்

காலைத் தூக்கி யோகா
வியாபாரம் செய்யும் பரங்க்கியார்
நண்பர் வீட்டுக்குப் போகிறார்
வாசலில் வரவேற்பு
படியில் அமர்ந்து அரட்டை
எவ்வளவு பேர் நம்மைப் பார்க்க வந்து இருக்கிறார்கள்     வெளியில் வந்து பாரு 
குளிருக்கு இதமாய் மரவீடு வைக்கோல் மெத்தை


மாட்டு வாண்டி பூட்டிக்கிட்டு போவோம் திருவிழா பார்க்க


                                                     மர வேலை செய்யும் பெரியவர்

முகத்திற்கு அழகு செய்யும் அழகுக் கலைஞர்
 ராக் இசை பாட்டுக் கச்சேரி நடந்தது. பாடி முடித்த அழகான பெண் குழந்தைகளுக்குப்  பளபளக்கும் வண்ண பாசி மணி மாலைகளைக் கொடுத்தார். பேரனுக்கும் கொடுத்தார் 


அடுத்த பதிவில்  மீதி காட்சிகள்.

வாழ்க வளமுடன்.