ஞாயிறு, 30 மார்ச், 2014

நட்சத்திர மரக்கோயில் பகுதி - 2

நட்சத்திர மரக்கோயில் என்ற முதல் பதிவின் தொடர்ச்சி. இந்த பதிவு.

வசந்தகாலம் என்பது மிகவும் ரம்மியமாய் பூத்து செழித்து விளங்கும் காலம். மனம்  எங்கும் பசுமையை கண்டு மகிழ்ச்சி அடையும்.  நம் இருதயமாகிய பூந்தோட்டம்   இறைவனை நினைத்து செய்யும் தியானத்தால் நிகழும் அற்புதத்தை  சொல்கிறார் சங்கரர்:-

இருதயமாகிய பூந்தோட்டம்.

//சிவத்தியானம் என்னும் வஸந்த ருதுவின் சேர்க்கையால் இருதயமாகிற 
பூந்தோட்டத்தில் பாபமாகிற பழுத்த இலைகள் உதிர்ந்துபோகின்றன . 
பக்தியாகிற கொடியின் சமூகங்கள்  அழகாகப் பிரகாசிக்கின்றன. 
புண்ணியமெனும் துளிர்கள் தோன்றுகின்றன. நற்குணங்கள் எனும் 
அரும்புகளும் ஜபமந்திரங்களாகிற  புஷ்பங்களும் நன்மையாகிற வாசனையும் ஞான ஆனந்தமாகிற அமுதமெனும் தேனின் பெருக்கும் 
ஞானானுபவமாகிற பழத்தின் உயர்வும் பிரகாசிக்கின்றன.//
                                                                                                        --சிவானந்த லஹரீ.
இப்படி சிவத்தியானம் வஸந்தருதுவைப்போல இன்பமளிக்கிறது என்கிறார் 
ஆதிசங்கரர்.


கந்தபுராணத்தில் சூரபத்மன் மாமரமாய் மாறி மாயங்கள் செய்தான், 
கந்தனுடன் போர் புரியும் போது. இதைக் கச்சியப்ப சிவாசாரிய சுவாமிகள் 
சொல்லும் போது ஒரு பாட்டில், ’முருகனின் வேல் இருகூறாய் பிளக்க 
மாவை(மாமரம்) போல நாம் இல்லையே என மற்ற மரங்கள் ஏங்கின’ என்று சொல்கிறார்.

அந்தப் பாடல் :

அத்தியின் அரசு பேர ஆலமும் தரிக்கில் ஏங்க
மெய்த்திறல் வாகை வன்னி மெலிவுற வீரை யாவுந்
தத்தம திருப்பை நீங்கத் தாதவிழ் நீபத் தாரோன்
உய்த்திடு தனிவேல் முன்னர்  ஒருதனி மாவாய் நின்றான்.
---கந்தபுராணம்.

இந்திரன் சூரபத்பனுக்குப் பயந்து சீர்காழியில் மூங்கில் மரக்காட்டில் 
மூங்கிலோடு மூங்கிலாக வசித்து வந்தார் என்றும்,

முருகப்பெருமான்  வள்ளியிடம் காதல் மொழி பேசிக் 
கொண்டு இருக்க, அப்போது வள்ளியின் தந்தை வர முருகன்
வேங்கைமரமாய் உருமாறினார் என்றும் கந்தபுராணம் கூறுகிறது.

திருவிளையாடல் புராணத்தில் மாணிக்கவாசகருக்கு குருந்தமரத்தின் 
அடியில் சிவபெருமான் உபதேசம் செய்தார் என்று கூறப்படுகிறது.

திருவிளையாடல் புராணத்தில் திருமணத்திற்கு சாட்சியாக வன்னிமரம் 
இருந்து இருக்கிறது. திருஞானசம்பந்தரின் சொற்படி ஒரு வணிகர் வன்னிமரம், கிணறு, இலிங்கம் ஆகியவற்றைச் சாட்சியாக வைத்து தன் அம்மான் மகளை மணம்புரிந்து சென்றார்.  அந்த பெண்ணுக்கு இடர் வந்த போது சோமசுந்தரப் பெருமானது திருவருளால் மீண்டும் அவை வந்து சாட்சியாகத் தோன்றின.  

பட்டினத்தாருக்காகத் திருவிடைமருதூரில் மருதமரத்திற்கு கீழ் குழந்தையாக வந்தார். (குழந்தைக்கு பெயர் மருதவாணர்)

ஒளவைக்கு நாவல் மரத்தில் முருகன் மாடு மேய்க்கும் சிறுவனாக வந்து 
சுட்டபழம் வேண்டுமா? சுடாதபழம் வேண்டுமா? என்று கேட்டார்.

அத்தி மரத்தில் வரதராஜ பெருமாள்  - காஞ்சிபுரத்தில்

கோழிகுத்தியில் உள்ள வானமுட்டி பெருமாள் -அத்திமரத்தில் வந்தவர். 
இங்கு பெருமாளின் காலின் அடியில் வேர்கள் இருப்பதாய் சொல்கிறார்கள்.

புராணங்களில், வரலாறுகளில் மரம் நிறைய இடம் பெற்று இருக்கிறது.
வரலாறு பாடத்தில் சாலையில் இருமருங்கும் அசோகர்  மரம் நட்டதை 
படித்துக் கொண்டு இருக்கிறோம். 

நமக்கு சந்திரனை காட்டி சோறு ஊட்டும் அன்னை நிலவில் மரம்- 
அதனடியில் பாட்டி வடை சுட்ட கதையின் காட்சி இருப்பதைச் சொல்லி 
இருக்கிறார்கள்.

துர்வாசர் சாபத்தால் கடல் அடியில் சென்ற - கேட்பதை எல்லாம் தரும் 
கற்பகவிருட்சம்-  பாற்கடலை கடையும்போது வந்த கதை நமக்கு தெரியும்.
விண்ணுலகத்தில் உள்ள ஐந்து மரங்கள் சந்தானம், அரிசந்தனம், மந்தாரம், 
பாரிசாதம், கற்பகம் என்பன.

இப்படி மரங்களின் பெருமையைக் காலம் காலமாக புராணங்களில் உணர்த்தி வந்துள்ளனர்,அதை உணர்ந்து நாம் மரங்களை வெட்டாமல் 
வளர்த்து வளம் பெறுவோம்!

11.பூரம்
தெய்வீக மரம்-பலாசம்
பிரார்த்தனை தெய்வம்-அம்பிகை
12.உத்திரம்
ஆத்தி
சிவன்,சக்தி
13.ஹஸ்தம்
அத்தி
சந்திரன்

14. சித்திரை
வில்வம்
முருகன்,வள்ளி,தெய்வயானை
15.சுவாதி
மருது
சரஸ்வதி
16.விசாகம்
விளா
பைரவர்
சாஸ்தா

அனுஷம்
மகிழமரம்
சனீஸ்வரன்,
அனுமான்
கேட்டை
பராய்
குபேரலட்சுமி


19.மூலம்

மா
விநாயகர்
                                                                                           20பூராடம்
                                                                                               வஞ்சி
                                                                                            அம்பிகை

21.உத்திராடம்
பலா
சிவன்,சக்தி
22.திருவோணம்
எருக்கு
பார்வதி
23.அவிட்டம்
வன்னி
ராஜ அலங்கார முருகன்
24 சதயம்
கடம்பு
துர்க்கை
25.பூரட்டாதி
தேவா
தெக்ஷ்ணாமூர்த்தி
உத்திரட்டாதிக்குரிய படம் சரியாக அமையாததால் அப்படம் இடம் பெறவில்லை.
                                                                   26.உத்திரட்டாதி
                                                                                                 மலைவேம்பு
                                                                                          விநாயகர்,பெருமாள்
27. ரேவதி
இலுப்பை
திருமால்

அவரவர் நட்சத்திர மரங்களை நட்டு வணங்கலாம். முடிந்தவர்கள் அதுபோல் செய்யலாம். ஆனால் நாம் இருக்கும் அடுக்குமாடிக் குடியிருப்புகளில் செய்ய முடியாது. அதனால் கோவில்களில் நட்டு வளர்த்து வழிபட்டும் அதை பராமரிக்கும் பொறுப்பையும் ஏற்றுக் கொள்ளலாம். சில கோவில்களில் நந்தவனங்களை வங்கிகள் அமைத்து பராமரித்து வருகிறார்கள்.

இறை நம்பிக்கையை வளர்க்கவும்,  இயற்கையை பாதுகாக்கவும் நம் முன்னோர்கள் இப்படி மரம் நட்டு வளர்க்க சொல்லி இருக்கலாம்.

நாம் இந்த சமுதாயத்திற்கு செய்யும் தொண்டு  முடிந்த அளவு மரத்தை வெட்டாமல் வளர்த்து பராமரித்தால் போதும் நாடு நலம் பெறும்.

இந்த கோவில் அறங்காவலர்  திரு பாஸ்கரன் அவர்களின் போன் நம்பர்--- 
9715352496 .
கோவில் சாம்பசிவக் குருக்களின் நம்பர் -  9443392 176.

உங்களை அவ்வூர் வரும்படி அழைக்கிறது!


                                              வாழ்க வளமுடன்!
-----------------------------------------

சனி, 29 மார்ச், 2014

நட்சத்திர மரக்கோயில் - பகுதி- 1

நட்சத்திரமரக் கோயில்-பகுதி-1

அருள்மிகு கற்பகாம்பாள் உடனுறை கண்காணாதீஸ்வரர் திருக்கோயில்,பெருஞ்சேரி.

மயிலாடுதுறையிலிருந்து திருவாரூர் செல்லும்வழியில் வழுவூர்ப் பிரிவைக்கடந்து தொடர்ந்து சாவடி என்னும் இடத்தில் கிழக்கு நோக்கித் திரும்பவேண்டும். மயிலாடுதுறையிலிருந்து சுமார் 9 கி.மீ தொலைவில் உள்ளது.

இக்கோயிலின் பிரகாரத்தில் ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் உரிய மரம் வைக்கப்பட்டுள்ளது. அந்தந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ,தங்களுக்குரிய மரத்தை மாலையில் விளக்கு வைத்து வழிபடுகிறார்கள். நன்மை பெறுகிறார்கள்.(பஞ்சாங்கங்களில் 27 நட்சத்திரங்களுக்குரிய மரங்களின் பெயர்களைக் காண்லாம்.)




  
விநாயகர்
லிங்கோத்பவர்
முருகன்



இத் திருக்கோயிலுக்கு 5/6/2009-ல் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
சுவாமி சந்நிதி
அம்மன் சந்நிதி
பிரதோஷ வேளை


நந்திக்கு அபிஷேகம்

நந்தி தீபாராதனை
அறங்காவலர் திரு.பாஸ்கரன்
திரு.சாம்பசிவக்குருக்கள்
விருட்சத்துக்கு இட்ட  வேண்டுதல் விளக்கு
ஸ்வர்ண பைரவர்
மார்சு 22ம் தேதி  ”உலக காடுகள்  மற்றும் மரநாள் ”அன்று ”இயற்கையைப்போற்றுதும்” என்ற பதிவு போட்டு இருந்தேன்.
அப்போது அதில் மரங்களை வழிபடுவது பற்றியும் மரங்கள் கோவில் ஸ்தலவிருடசமாய் வணங்கப்படுவதையும் குறிப்பிட்டு இருந்தேன்.
பெருஞ்சேரி எனும் ஊரில் 27 நட்சத்திரங்களுக்கும் ஒரு கோவில் இருப்பதை கூறி இருந்தேன்.  அவரவர் நட்சத்திரங்களுக்கு வணங்க வேண்டிய மரங்களாவது வெட்டப்படாமல் இருக்கும் என்று எழுதி இருந்தேன்.
சகோதரர் துரை செல்வராஜூஅவர்கள் அந்த ஊரைப்பற்றி  விரைவில் பதிவிடுங்கள் என்று கேட்டு இருந்தார். இதோ பதிவிட்டுவிட்டேன்.

பெருஞ்சேரி என்னும் ஊரில் உள்ள நட்சத்திர கோவிலுக்குப் போனோம். அன்று பிரதோஷம். அதனால் மாலை ஐந்துமணிக்கே சென்றோம். சிறிய கோவில்தான். ஆனால் மரங்களால் சிறப்பு பெற்று இருக்கிறது. மாலை குருக்கள் வந்தபோது நாங்களும் இன்னும் இரண்டு பேர்கள்தான் இருந்தோம், அதனால் இன்னொரு கோவில் அவருக்கு இருக்கிறதாம். அந்த கோவில் பூஜையை முடித்துவிட்டு வருவதாய்ப் போய் விட்டார். இரண்டு மூன்று பெண்கள், அவர்களின் குழந்தைகள், இரண்டு வயதான ஆட்கள் இவ்வளவு பேர்தான் பிரதோஷ பூஜைக்கு இருந்தவர்கள்.

நாங்கள் பால், பன்னீர் அபிஷேகத்திற்கு கொண்டு போய் இருந்தோம். ஒரு பெண், பள்ளியில் ஆசிரியர்பணியில் இருப்பவர். பிரதோஷவிரதம் இருப்பவராம்.  அவர் ஸ்வாமிக்கு பொங்கல் பிரசாதம் எடுத்துவந்திருந்தார், மற்றொருவர் கொண்டைக்கடலை சுண்டல்(வெள்ளை) செய்து கொண்டு வந்திருந்தார். மற்றொரு பெண்,  வெல்லம் கலந்த அரிசியும் பஞ்சாமிர்த சாமான்களும் , கொண்டுவந்து  அதை தயார் செய்தார். குழந்தைகள் அபிஷேகசாமான்களை அதன்அதன் பாத்திரங்களில்  பிரித்துக் கொட்டி உதவிசெய்தார்கள். இடை இடையே குழந்தைகளுக்கே உள்ள விளையாட்டு  என்று கோவிலைச் சுற்றிச்சுற்றி வந்துகொண்டு இருந்தார்கள். அங்கு கொட்டிக்கிடந்த மணலில் மகிழ்ச்சியாக விளையாடினார்கள். ஒரு  சிறுவன் பள்ளியில் நடக்கும் திருவருட்பா ஒப்பித்தல்  போட்டியில் கலந்துகொள்கிறானாம், அதைத் தன் அம்மாவிடம் ஒப்பித்தான். நன்றாகச் சொன்னான்.  வெற்றிபெற வாழ்த்தினோம் நாங்கள்.
1.அசுவினி
ராசி-மேஷம்
தெய்வீகமரம்- எட்டி
பிரார்த்தனை தெய்வம்-விசாலாட்சி,
சித்திரகுப்தன்

2. பரணி
ராசி-மேஷம்
மரம்- நெல்லி
தெய்வம்- வல்லபகணபதி,விஷ்ணு

3.கார்த்திகை
மேஷம்,ரிஷபம்
அத்திமரம்
சூரியன்,முருகன்



4.ரோகிணிநாவல்மரம்
கண்ணன்

5.மிருகசீரிஷம்-
கருங்காலி
முருகன்
6.திருவாதிரை
செங்கருங்காலி
நடராஜர்,துர்க்கை
                                                          
7.புனர்பூசம்
மூங்கில்
ராமர்
                                                              மனித தெய்வங்கள்                                                          
8.பூசம்
அரசமரம்
பெருமாள்,லட்சுமி,சனீச்வரர்
9.ஆயில்யம்
புன்னை,
விஷ்ணு
10.மகம்
ஆலமரம்
விநாயகர்
நாங்கள் இருட்டுவதற்குள் நட்சத்திர மரங்களைப் படம்பிடித்துக் கொண்டு எங்கள் குடும்பத்தில் உள்ளவர்களின்  நட்சத்திர மரங்களுக்கு  விளக்கு வைத்து வழிபட்டோம்.

சற்று நேரம்கழித்து சாம்பசிவக்குருக்கள் வந்தார், வயதாகி விட்டாலும் சுறு சுறுப்பாய் அனைவரிடமும் அன்பாய்ப் பேசிக் கொண்டே   நந்தி, அம்மன், சுவாமிக்கு விரைவாய் அபிஷேகம் செய்து பூஜைகளை நிறைவு செய்து அனைவருக்கும் பிரசாதங்களை வழங்கினார்.

 ஆத்மார்த்தமாய் தங்கள் வீடுகளிலிருந்து பிரசாதங்கள் கொண்டுவந்து  பக்தியுடன்  அளித்து  சந்தோஷமாய் அங்கிருந்த அன்பர்களுக்கு கொடுத்து விரதங்களை முடித்தார்கள். 

அறங்காவலர் பாஸ்கர் அவர்களும் குருக்கள் வருமுன் அபிஷேகத்திற்கு நீர் எடுத்துவைத்து உதவிகள் செய்தார், சிவன் ராத்திரிக்கு வரும்படி எங்களை அழைத்தார். 

நடசத்திர மரங்கள் 10  பகிர்ந்து இருக்கிறேன், மீதி அடுத்த பதிவில் .
                                                            வாழ்க வளமுடன்.
                                                           -----------------------------

செவ்வாய், 25 மார்ச், 2014

வால்ட் விட்மன் நினைவில்லம்

நாங்கள் நியூஜெர்சியில் இருந்தபோது கேம்டனில் உள்ள வால்ட் விட்மனின் நினைவில்லத்திற்குச் சென்றிருந்தோம். 

நாளை 26/03/2014 அன்று கவிஞர் வால்ட்விட்மனின் (WALT WHITMAN) நினைவு நாளாகும்.

அதையொட்டி சில நினைவுகளைப் பகிர விரும்புகிறேன்.

மவுண்ட் லாரலில் உள்ள பொது நூலகத்திற்கு நாங்கள் அடிக்கடி செல்வது வழக்கம். 

 இணையத்தில் வேண்டிய பாடக் குறிப்புகளை எடுத்துப்போகும் மாணவர்கள்.
மவுண்ட் லாரல் -பொதுநூலகம்
ஒருமுறை அங்கு சென்றபோது என் கணவர் கவிஞர் வால்ட் விட்மனைப் பற்றி வால்டர் டெல்லர் எழுதிய நூலைப் படித்தார்கள். 
மவுண்ட் லாரல் -பொதுநூலகம் இங்கு இருந்து எவ்வளவு புத்தகம் வேண்டும் என்றாலும் எடுத்து வரலாம் படிக்க ,இரண்டு நாட்களுக்கு ஒருமுறை  புத்தகங்கள் -பேரனுக்கு கார்ட்டூன் சிடிகள், கதைப்புத்தகங்கள் எடுத்து வருவோம்.
வால்ட்விட்மனைப்பற்றி வால்டர்டெல்லெர் எழுதிய புத்தகம்

அருகில் உள்ள கேம்டனில் விட்மனின் நினைவில்லம் அமைந்திருப்பதை அந்நூலின் மூலம் அறியமுடிந்தது. 

மகாகவி பாரதியார் போன்றவர்கள் புதுக்கவிதைகள் எழுதுவதற்கு முன்னோடியாகத் திகழ்ந்தவர் அமெரிக்கக் கவிஞரான வால்ட் விட்மன் (மே 31, 1819 – மார்ச் 26, 1892)என்பார்கள்.

எனவே அங்கு சென்று பார்க்கவேண்டும் என்ற ஆவல் என் கணவருக்கு ஏற்படவே அதுபற்றி மகனிடம் கூற , அவன் அதற்கு ஏற்பாடு செய்தான். அங்கு செல்ல முன்கூட்டியே பதிவு செய்ய வேண்டும். 28/09/2013 அன்று காலையில்  மகன், மருமகள், பேரனுடன் நாங்கள் எல்லோரும் காரில் சென்றோம். முக்கால் மணி நேரப்பயணம். டெலாவேர் ஆற்றங்கரையில் கேம்டன் நீர் முகப்புக்கு (Camden Water Front) அருகில் உள்ளது.கேம்டனின் போக்குவரத்து அதிகமில்லாத ஓரிடத்தில் கார்பார்க்கிங்க் வசதியோடு கூடியஅமைதியான ஒருசூழலில் இல்லம் அமைந்திருந்தது. 
மிக்கிள் சாலை- விட்மன் வாழ்ந்தபோது
மிக்கிள் சாலை= இப்போது.


எங்கள் வருகைக்காக நினவில்லத்தின் கியூரேட்டர் வாசலில் தயாராகக் காத்திருந்தார்.  ’எங்கிருந்து வருகிறீர்கள்  ஏன்  அவர் வாழ்ந்த வீட்டைப் பார்க்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள் ?’  என்றெல்லாம் எங்களின் ஆர்வத்தைக் கேட்டறிந்தார்.  பின் மகிழ்ச்சியுடன் உள்ளே அழைத்துச் சென்றார்.
விட்மனின் இல்லம்-அப்போது


உள்ளே புகைப்படம் எடுக்கக்கூடாது என்று முதலிலேயே கூறிவிட்டார்.
இல்லத்தில் உள்ளே உள்ளவைகளைப் பற்றிய படங்கள் அங்கு கொடுத்த ’கான்வர்சேஷன்’ பத்திரிகை, டெல்லரின் புத்தகம், ஆகியவற்றிலிருந்து  எடுத்தது.
விட்மனின் இல்லம்-இப்போது
           
இல்லத்தின் முன்புறம்
                                                                 
                                                  
வால்ட் விட்மன் வாழ்ந்த  அந்த    இல்லத்தை பார்க்கப்போகிறோம் என்ற பெருமிதத்துடன் நுழைந்தோம்.  இல்லத்தை பார்த்துக் கொள்ளும் கியூரேட்டர் இல்லத்தைச் சுற்றிக்காண்பித்துக்கொண்டே செய்திகளைத் தொகுத்துக்கூறிய வண்ணம் இருந்தார்.
நினைவில்லத்தின் கியூரேட்டர். தன்னை படம் எடுக்க வேண்டாம் என்றார், ஆனால் தோட்ட்டத்தை எடுக்கும் போது அவரும் அதில் வந்து விட்டார்.
விட்மன் அமெரிக்காவில் லாங் ஐலண்ட் என்ற இடத்தில் பிறந்தார். அடிமை முறையை எதிர்த்தார். சமத்துவத்தை ஆதரித்தார். அமெரிக்க உள்நாட்டுப் போரின்போது பாசறைகளில் காயமுற்றோருக்குத் தொண்டுகள் புரிந்தார். 

‘புல்லின் இதழ்கள் ’என்னும் இவரது கவிதைத் தொகுப்பு நூல் உலகப்புகழ்பெற்றது. எவரும் இதனைப்பதிப்பிக்க முன்வராத நிலையில் தானே அந்நூலை அச்சிட்டு வெளியிட்டார்.1855-ல் முதலில் அவர் தனது செலவில்  பதிப்பித்த புல்லின் இத்ழ்கள் நூலின் படிகளின் எண்ணிக்கை 795. முதலில் அவற்றில் ஒன்றுகூட விற்பனையாகவில்லை

1882-ல் புல்லின் இதழ்களில் மேலும் பல கவிதைகளை இணத்து மறுபதிப்புச் செய்தபோது பெரிய வெற்றி தந்தது

இந்நூலை விற்பனை செய்ததில் கிடைத்த இலாபத்தில் நியூஜெர்சி மாநிலத்தில் கேம்டன் நகரில் மிக்கல் தெருவில் 1884ல் ஒரு வீட்டினை 1750 டாலர் விலைக்கு வாங்கினார். 1892-ல் தமது 72 வயதில் இறக்கும் வரை இங்கு வாழ்ந்தார்.

’பிராங்க்லின் இவான்ஸ்’ என்னும் நாவலையும் இவர்எழுதியுள்ளார்.

ரிச்சர்ட் புக்( Richard buke )என்ற அவரது நண்பர் ’வால்ட்விட்மன்’ என்னும் நூலை எழுதியுள்ளார்.

புகழ்பெற்ற எழுத்தாளர்களான சார்லஸ் டிக்கன்ஸ், வில்லியம் தாக்கரே, ஆஸ்கார் வைல்டு ஆகியோர் இவரைக்காண இங்கு வருகை புரிந்தனர்.

கப்பல் தளபதியாக இருந்த  தன் கணவரை இழந்த மேரி ஓ டேவிஸ் என்பவர் விட்மனின் வேண்டுகோளுக்கு இணங்க அங்கேயே வாடகையின்றித் தங்கி அவரது வீட்டின் பாதுகாவலராக இருந்தார். அவரை விட்மன் தனது நண்பர் என்றே குறிப்பிடுவார்.

.*நினைவில்லத்தின் உள்ளே
இல்லத்தின் உட்புறம்

                                   
வெள்ளை வளையத்துள் இருப்பது சர் தாமஸ் மூர் என்ற சமய, தத்துவ, மனிதநேயப் பெரியாரின் படம்.

அவரது இல்லத்தில் விட்மனின் புகைப்படமும் அதன் வலது புறம் தந்தையாரின் படமும் இடது புறம் அவரது தாயாரின் படமும் இடம் பெற்றுள்ளது. ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கனுடன் அவர் எடுத்துக்கொண்ட படமும் உள்ளது.அவர் முதலில் வெளியிட்ட ’புல்லின் இதழ்கள்’ என்ற புத்தகப்பிரதி அங்கு உள்ளது.
அவர் அச்சிட்ட புத்தகப் பிரதி

அவரது கட்டில் படுக்கை விரிப்புடன் அழகாய் காட்சி அளிக்கிறது. கட்டிலுக்கு கீழ் அவர் குளிக்கப் பயன்படுத்திய பித்தளைத் தொட்டி இருக்கிறது.  கட்டிலுக்கு அருகில் உள்ள  மர அலமாரியில் அவர்  உடல் நிலை சரி இல்லாத போது அருந்திய இருமல் மருந்து பாட்டில்கள்  (ரப்பர் கார்க் அடைத்த கண்ணாடி மருந்து குப்பிகள் ) இருந்தன.

வால்ட் விட்மன் எழுதிய கடிதங்கள், 
அவருடைய உடைமைகள்,
அவர் இறக்கும்போது படுத்திருந்த படுக்கை, 
இறுதிக்காலத்தில் அவர் படுத்திருந்த கட்டில்

புகைப்படத் தொகுப்பு, 
ஆடும் மர நாற்காலிகள்-2,
சுவரோடு அமைந்த கணப்பு அடுப்பு,
அவர் பயன்படுத்திய காலணிகள்,
அவர் பயன்படுத்திய வட்ட சின்ன மேஜை, 
அதில் அவர் தொட்டு எழுதிய பேனா, மைகுப்பி, நிறைய நிப்கள்
எழுதிய புத்தகங்கள்

ஹார்ப்பெர்ஸ் வீக்லி மாகசின்
ஸ்க்ரிப்னர் மந்த்லி மாகசின்
அவரது  பயன்படுத்திய பத்திரிகைகளில் ஒன்று ஹார்ப்பர்ஸ் வீக்லி

குட்டி நாற்காலிகள். 
தேவையற்ற  காகிதங்களைப் போடும் பிரம்புக் கூடை. 
அவரின் கைத்தடி, 
முதலியவற்றை அழகாய் வைத்து இருக்கிறார்கள்

பித்தளை கிளிக்கூண்டு ஒன்று அழகாய் இருக்கிறது. குயில் ஒன்று
நிஜக்குயில் போல கண்ணாடி ஜாடியில் இருக்கிறது.

வீட்டைப்பாதுகாத்த அந்த பெண்மணியின் அறை அருகில் உள்ளது.

 மாடியிலுள்ள அறையில் அவரது கடைசிக்காலம் கழிந்தது.
அவருக்கு உடல் நிலை சரியில்லாமல் இருக்கும் போது உதவிக்கு கைத்தடியைத் தட்டிக் கீழே இருப்பவர்களை உதவிக்கு அழைப்பாராம். 

வீட்டின் சுவரில் பூவேலைப்பாடு உள்ள  பேப்பர் ஒட்டப்பட்டு அழகாய் இருக்கிறது. 

கீழ்த்தளத்தில் இரண்டு மூன்று மர அலமாரிகள் . ஏசுநாதரின் ’லாஸ்ட் சப்பர்’ என்ற  புகழ் பெற்ற  ஓவியம்  பெரிதாய் மாட்டப்பட்டு இருக்கிறது.
அவர் இறந்த போது அவர் இறந்து விட்டார் என்று அவரை கவனித்துக் கொள்ளும் மருத்துவர் அவர் கைப்பட எழுதிக் கொடுத்த  இறப்புச் சான்றிதழ்க் கடிதம் மரச்சட்டத்திற்குள் அடைக்கப்பட்டு இருக்கிறது.

(விட்மனின் கல்லறை கேம்டனில் வேறு பகுதியில் இருக்கிறது.)

*அவரது உரையாடல்களிலிருந்து சில பகுதிகள்
(நன்றி: வால்டர் டெல்லரின் நூல்)
அறிவுரை கூறுவது பற்றிக் கூறியது:-                     
“ Iam always telling you not to take advice.I mean it – every word of it. But that don’t mean you are to yourself or take your own advice” may 27 1888.

 தனது படைப்புகள் பற்றி  :-                              
’My writngs has been clear from the start- almost from boyhood: not beautiful;but legible”  july 21 1888.
                                       
 இலக்கியவாதிகள் பற்றி
“Literary men learn so little from life – borrow so much from the borrowers” april 24 1888.p.103

* ’புல்லின் இதழ்க’ளில் இருந்து ஒரு புதுக்கவிதை.
(வானசாஸ்திரிகளின் பிரசங்கம் வால்ட் விட்மனிடம் ஏற்படுத்திய விளைவுகளைக் கூறுகிறது:-)

When I heard the learn’d astronomer;
When the proofs, the figures,were ranged in columns before me;
When I was shown the charts and the diagrams,to add,divide,and measure them;
When I, sitting, heard the astronomer,where he lectured with much applause in the lecture-room,
How soon, unaccountable, I became tired and sick;
Till rising and gliding out, I wander’d off by myself,
In the mystical moist night-air, and from time to time,
Look’d up in perfect silence at the stars.

போரினால் ஏற்படும் துயரங்களைத் தனது பல கவிதைகளில் வெளிப்படுத்தியுள்ளார்.
அவற்றில் ஒன்று:-

"When lilacs last in the dooryard bloom'd,
And the great star early droop'd in the Western sky 
in the night,
I mourned and yet shall mourn with 
ever returning spring .
Ever -returning spring , trinity  sure to me you bring,
Lilac blooming perennial and drooping  star
in the west,
And thought of him I love..."
                                              --Leaves of Grass

இன்று விட்மனின் இல்லம் தேசிய வரலாற்றுச்சின்னமாக விளங்குகிறது.உலகெங்குமிருந்து மக்கள் அவரது நினைவில்லத்தைக் காண வருகிறார்கள்

வால்ட்விட்மன் அசோசியேஷன்’  நிறுவனத்தினர், கான்வெர்சேஷன்
(conversation) என்னும் இதழை வெளியிட்டுவருகின்றனர்.

கேம்டன் நகரின் அருகில் உள்ள ஆற்றுப்பாலத்திற்கு ’விட்மன் பாலம்’ என்ப்பெயர் இடப்படுள்ளது.


*சில தகவல்கள்:

அமைந்திருக்கும் இடம்:328,மிக்கிள் சாலை கேம்டென், நியூஜெர்சி

திறந்திருக்கும் கிழமை-செவ்வாயிலிருந்து ஞாயிறு வரை.

தனியாகவோ குழுவாகவோ வருவோர் தங்கள் வருகையை தொலைபேசி மூலம் உறுதிசெய்து கொள்வது நல்லது.

தகவல் தொடர்புக்கு: (609)964-5383)

கவிஞரின் வீட்டுக்குள் போகும் போது நமக்கு இந்த கையேட்டைத் தருகிறார்.பத்திரிக்கையில் காணப்படுவது வால்ட் விட்மன் பாலம்.


விட்மன் இல்லத்தின் பின்புறத்தோட்டம்

இப்படி வால்ட்விட்மனின் இல்லத்தை பாதுகாத்து வருபவர்  நமக்கு அவரைப் ப்ற்றிய செய்திகளை அழகாய் சொல்லி  நம்மை  மலர்ந்த முகத்துடன் வாசல்வரை வந்து வழியனுப்பி வைத்தார்.  
வாழ்க வால்ட்விட்மனின் புகழ்!
வளர்க மனிதநேய இலக்கியங்கள்!
----------------------------------------