ஞாயிறு, 24 பிப்ரவரி, 2013

மெல்ல மெல்ல விடியும் வைகறைப் பொழுது.


                                
                                        காலைப் பொழுது ---  நான் எடுத்த புகைப்படங்கள்
-



காலைப்  பொழுது மிகவும் ரம்மியமாய் இருக்கும்.  அதிகாலையில் எழுந்துகொள்வது கஷ்டம். ஆனால் எழுந்துகொண்டால் கிடைக்கும் நன்மைகள் ஏராளம்.அதிகாலை  நான்கு மணியிலிருந்து ஆறு மணிவரை பிரம்ம முகூர்த்த நேரம் என்பார்கள். அந்த நேரம் செய்யும் பிரார்த்தனைகள் , ஜப, தவங்கள்,  உடலுக்கு சக்தி அளிக்கும் உடற்பயிற்சிகள் என்று எல்லாமே நன்மை பயக்கும்.

 ஆனால் காலையில் எழுந்து கொள்ள வேண்டுமே!

 காலை எழுந்துகொள்ள வேண்டும் என்றுஅலாரம் வைத்துக் கொண்டு படுப்பவர்கள் கூட அது அடிக்கும் போது அதன் தலையில் தட்டிவிட்டு மறுபடியும்  போர்வையை முகம்  முழுதும் மூடிக் கொண்டு  தூங்குவது உண்டு. 




இப்போது செல்போனில் அலாரம்  வைத்துக் கொண்டு படுப்பவர்கள், அது அடிக்கும் போது கை அனிச்சையாக  அணைத்துவிட்டு சுகமாய் தூங்குவது உண்டு.

என் மகன் காலையில் எழுப்பிவிடு அம்மா என்று சொல்லிப் படுப்பான்,
காலையில் எழுப்பினால்,  ’ அம்மா!   கொஞ்சம் நேரம் கழித்து ,
கொஞ்சநேரம் கழித்து ” என்பான். “ நீ தானே எழுப்ப சொன்னாய்!” என்றால் ,
நீங்கள் எழுப்பும் போது இன்னும் கொஞ்சம் தூங்க ஆசையாக இருக்கிறது,
அப்போதுதான் சுகமாய் தூக்கம் வருகிறது ” என்பான். அவன் எழுந்து
கொள்ளவேண்டிய நேரத்திற்கு முன்பே அவனை எழுப்ப
ஆரம்பித்துவிடுவேன்.  அவன்  எந்த நேரம் எழுந்து கொள்ள நினைத்தானோ
அந்த நேரம் சரியாக இருக்கும். அவனுக்கும் அது தெரிந்துவிட்டதால்
சிறிது நேரம் படுத்துக்கொண்டுவிட்டுதான் எழுந்துகொள்வான்.

முன்பு குழந்தைகள், கணவர் எல்லோரும்  எழுந்துகொள்வதற்கு முன், நான்
எழுந்து   தியானம், உடற்பயிற்சி, மற்றவேலைகள் என்று பம்பரமாய் சுற்றிய   உடம்பு கொஞ்சம்  மக்கர் செய்கிறது. செல்லில் நாலுமணிக்கு அலாரம் வைத்தால்,  அதைக் கேட்டு எழுந்து கொள் என்கிறது மனம்,  கொஞ்சம் படுத்துக் கொள் என்கிறது உடல்.  சில நேரம் மனம் சொல்வதை கேட்டு சுறுசுறுப்பாய் எழுந்துகொள்வேன். சில நேரம் உடல் சொல்வதை கேட்டுப் படுத்துக் கொள்வேன். எப்படி என்றாலும் ஐந்து மணிக்கு மேல் படுத்திருக்க முடியாது.  தொட்டில் பழக்கம் என்பார்களே அப்படி .என் அம்மா காலை எழுந்து கொள்ளும் பழக்கத்தை ஏற்படுத்தி விட்டார்கள்.

காலையில் மொட்டை மாடியில் என் வரவுக்குக்  புள்ளினங்கள் காத்திருக்கும்., காக்கா, புறா, தவிட்டுக்குருவி, புல்புல், மைனாவுடன் மற்ற ஜீவராசிகள் அணில், எறும்பு எல்லாம் காத்து இருக்கும்.  முதல்நாள் உணவை ஒரு கிண்ணத்தில் போட்டு வைத்து இருப்பேன்.  அதை விடியற் காலையில் பறவைகளுக்கு வைப்பேன். விடியற்காலையில் பறவைகள்  கூட்டில் தன் குஞ்சுகளை விட்டுவிட்டு, அதற்கு இரை தேடிப் பறந்து வரும்- அந்தநேரம்  உணவு அதற்கு மிகவும்  மகிழ்ச்சி அளிக்கும் .






ஒரு மண் பாத்திரத்தில் தண்ணீரும் வைத்து இருக்கிறேன். காலையில் கொஞ்சம் நடந்து கொண்டே பறவைகள் உண்ணும் அழகைப் பார்ப்பேன். அண்டங் காக்கா வந்தால், மற்ற பறவைகள் அது சாப்பிட்டுப் போகும் வரை பக்கத்தில் வராது,  காக்கா சாப்பிட்டு முடித்தால் புறா வரும். 


அதுவும் எந்த பறவையையும் பக்கத்தில் விடாது. கீழே சிந்துவதை சாப்பிடலாம் என்றால் அதையும் விடாது .கீழேயும்  வந்து துரத்தும். இக்காட்சியை என் கணவர் வீடியோ எடுத்துத் தந்தார்கள்.



                                           


 அப்புறம் அணில் , தவிட்டுக்குருவி, மைனா வந்து சாப்பிட்டது  போக மீதி இருக்கும் பருக்கைகளை எறும்பு இழுத்துப் போகும். சிறிது நேரத்தில் அந்த இடம் சுத்தமாகி விடும் !

மெல்ல மெல்ல சூரியன் வெளிக் கிளம்பும் அழகைப் பார்ப்பது மிகவும்
மகிழ்ச்சியாக இருக்கும்.  வானம் விடியல்காலையில் பார்க்க மிக ரம்மியமாய் இருக்கும்.

வானம் எனக்கு ஒரு போதி மரம் !
 நாளும்எனக்கு ஒரு செய்தி சொல்லும்” 

காலை இளம் கதிரில் உந்தன் காட்சி தெரியுது -நீலக்
 கடல் அலையில் மயில் எழுந்து நடனம்புரியுது”

என்ற பாடல்கள் என் மனதில் ஓடும்.    கிளிக்கூட்டம் பறக்கும் ’கீச் கீச்’ என்ற சத்தத்துடன், கொக்கு வரிசையாய் பறக்கும்.  கிருஷ்ணபருந்து பறக்கும்,  மீன் கொத்தி, மரக்கொத்தி, வாலாட்டும் குருவி, கறுப்புக்குருவி., தேன்சிட்டு எல்லாம் பறக்கும். காலைப் பொழுது அருமையானது. அதை எல்லாம் பார்த்து மகிழ கொடுத்த இறைவனுக்கு நன்றி சொல்லவேண்டும் நாளும்.
மாணிக்கவாசகரும், ஆண்டாளும் பாடிய காலைப் பொழுதுப் புள்ளினப் பாடல்கள் எல்லோருக்கும் தெரியும், மாறுதலாய் காலை அழகைப்பற்றிய வாணிதாசன்  கவிதை ஒன்றை இங்கு பகிர்கிறேன்.

       காலை அழகு

வெள்ளி முளைப்பினிலே - அழகு

துள்ளுது வான்பரப்பில்!-சிறு
புள்ளின ஓசையிலே - அழகு
பொங்கி வழியுதடி!

காலைப் பிறப்பினிலே - அழகு

கண்ணைக் கவருதடி! - சிறு
சோலைக் கலகலப்பில் - அழகு
சொரியுது உள்ளத்திலே!

சேவல் அழைப்பினிலே - அழகு
சிந்தையை அள்ளுதடி! - மன
ஆவல் அழித்துவிட்டால் - அழ
கானது நம்முடைமை!

தாமரை மொட்டுக்குள்ளே - அழகு
தங்கிக்  கிடக்குதடி! - கதிர்
சாமரை வீச்சினிலே - விரிந்து  
சஞ்சலம் போக்குதடி!

வீடு துலக்கும்பெண்கள் - குளிர்முகம்
வீசும் ஒளியழகில் - வான் 
நாடு விட்டு நகரும் - முழுமதி
நாணி முகம் வெளுத்தே!

பாரதியார் ’காலைப் பொழுது’என்று   பாடியுள்ளார்.

பாரதிதாசன் அதிகாலை பற்றிப்பாடி இருக்கிறார்.

பாரதியார் அக்கவிதையில் ஒற்றுமையைக் காண்கிறார் . பாரதிதாசன்  தன் பாடலில் உழைப்பைப் பற்றி  பாடுகிறார்.

இப்போது பரீட்சைக்கு படிக்கும் குழந்தைகள் காலை எழுந்து படித்தால் நல்லது , இரவு சீக்கீரம் தூங்கப்போய் அதிகாலை எழுந்து படித்தால், படித்தவை நினைவில் நிற்கும்.  நான் நன்கு படிப்பேன், நான் படிப்பது என் நினைவில் நிற்கும் ,நான் சிறப்பாய்த் தேர்வு எழுதுவேன், நல்ல மதிப்பெண்கள் பெறுவேன்என்று நாளும் மனதுக்குள் சொல்லிவிட்டுக் காலையில் படித்தால் படித்தவை  நினைவில் நின்று நன்கு தேர்வு எழுதமுடியும். எல்லா குழந்தைகளும் நன்கு படித்து நல்ல குழந்தைகளாய் வளர வாழ்த்துக்கள். குழந்தைகள் எல்லாம் அன்பும் கருணையும் நிறைந்து வாழ வேண்டும்.

நல்ல எண்ணத்தைக் காலையில் நினைத்தால் அது அப்படியே பலிக்கட்டும் என்று வானத்தில் உள்ள தேவதைகள் வாழ்த்துவார்களாம்!  நாமும் நாளும் வாழ்க வையகம்! வாழ்க வளமுடன் ! என்று நினைக்கலாம். வையகம் அமைதியாய் அன்பாய் இருந்தால் நாமும் அப்படியே இருக்கலாம் இல்லையா!.

                   
                                               வாழ்கவளமுடன்.


                                                    ---------------------

வியாழன், 14 பிப்ரவரி, 2013

மின்சாரமே ! மின்சாரமே !!


சாத்தூர் பஸ்நிலையத்தில் ஒரு  அறிவிப்புப் பலகை பார்த்தேன்.  அதை
உங்களுடன் பகிர எழுதி வைத்துக் கொண்டேன்.  போட்டோ எடுக்க காமிரா
அப்போது கையில் இல்லை.

காணவில்லை
ஊர்- தமிழ்நாடு
வயது- 200 ஆண்டுகள்
பெற்றவர்- பெஞ்சமின் பிராங்களின்
அடையாளம்- - மிகவும் பிரகாசமாக இருப்பார், தொட்டால் ஷாக் அடிப்பார்.
அருமை மின்சாரமே! உன்னை காணாமல் நாங்கள் வெகு நாட்களாய் அல்லல்
படுகிறோம். எப்போ நீ வருவாய் ? கண்ணில் நீரோடு காத்திருக்கிறோம்.
--இப்படிக்கு தமிழ்நாட்டு மக்கள்.

-எப்படி இருக்கு அறிவிப்பு!
நிலமை இப்படி ஆகிவிட்டது!

பூம்புகார் கல்லூரி முன்னாள்  முதல்வர் பேராசிரியர் ஆர்.எஸ்.மூர்த்தி அவர்கள் , தான்  எழுதிய ’வலைகள்’ என்ற புதுக்கவிதை தொகுப்புப் புத்தகத்தை என் கணவருக்குப் பரிசளித்தார்கள்.  (கவிதைத்  தொகுப்பு வெளியிட  பட்ட  ஆண்டு 1979) அந்தத் தொகுப்பில் மின்சாரத்தைப்பற்றி எழுதிய கவிதையை இங்கு உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். .  அவர் கல்லூரி அருகில் மேலையூரில்தான் வசித்து வந்தார். மின்சாரம் இல்லாமல் ஒருநாள் யார் உதவியுடன் வீடு வந்து சேர்ந்தார் என்று கவிதை எழுதி இருக்கிறார் பாருங்கள்!

உதவி
----------
மின்சாரக் கோளாறால்
மேலையூர் முழுவதும்
முக்காடு போட்டது போல்
இரவு மூடிக் கொண்டது
இருளால்
விண்மீன்கள் தெரியாமல்
மேகத்திரை வானில்
விரிந்தது எங்கும்
வழி தெரியவில்லை                        
                                                      ஓவியம்- அரசு
ஒளித்துளி
ஒன்று
வேலி ஒரம்
உட்கார்ந்திருந்தது
பனித்துளிப்போலப்
பளிச்சிட்டது
பக்கத்தில் சென்றுபார்த்தேன்
மின்மினிக் கண்மணி
மெல்லநகைத்தது
அன்னை இயற்கை
அளித்த மின்மினி அதனால்
மெல்ல நடந்து
இல்லம் அடைந்தேன்
மின்மினியின்
உதவிக்கு
                                                                                      என்னவிதம் நன்றி சொல்வேன்!

இன்னொரு பாட்டில்  மின்மினிகளைப் பாடுகிறார்:

மின்மினிகள்
மின் மினிகள்
மினி மின்னல்கள்
இரவை அலங்கரிக்க
இறைவன் செய்த
சின்னஞ் சிறிய
சீரியல் பல்புகள்!

என்று சொல்கிறார்.


பேராசிரியர்.ஆர்.எஸ். மூர்த்தி


சார் சொல்வது போல் மின்மினி பூச்சிகள் நாங்கள் முன்பு இருந்த திருவெண்காட்டிலும் நிறைய பறக்கும். சில சமயம் வீட்டுக்குள் வந்து விடும்.
நியூஜெர்சி போனபோது தோட்டத்தில் மின் மினி பூச்சியை பார்த்தபோது எனக்கு  திருவெண்காடு நினைவுக்கு வந்து விட்டது.  அங்கு ,இரவு  வீட்டுக்கு வெளியே தோட்டத்தில் கூட்டம் கூட்டமாய் அழகாய்ப் பறந்தது  இருட்டில் அந்த சின்ன சிறிய  மின் மினி பூச்சிகள் பறந்தது கண் கொள்ளாக்காட்சிகள்.

 ’நட்சத்திர இரவு’என்ற  பாடலில் மின்வெட்டைப் பற்றி அவர் கவிதை  பாடுகிறார்.

நட்சத்திர இரவு
இரவு மணி பத்து
மின்வெட்டால்
மின்விசிறி ஓடவில்லை
இயற்கை காற்றும்
இயங்கமறுத்தது
வெளியில் வந்து
விண்ணை நோக்கினேன்
என்ன அழகான
நட்சத்திர இரவு!
நீலமலையில்
வணண  மலர்காட்சி  போல்
வானமெங்கும்
நட்சத்திரங்கள்
பூத்துக் கிடந்தன
அப்பொழுது
ராக்கெட்டு ஒன்று
விரைந்துசென்று
மறைந்தது
நட்சத்திரங்களைப் பார்த்து
நான் கேட்டேன்;
“விஞ்ஞானிகளைப் பற்றி
நீங்கள்
என்ன நினைக்கிறீர்கள்/ என்று
பிரதிநிதியாக
ஒருநட்சத்திரம் பேசிற்று:
“நவீன  விஞ்ஞானிகளா
அந்த ராக்கெட்டு ரவடிகளா?
அவர்கள் அரசியலுக்கு
அடிமைகளாகி
சுதந்திரமில்லா
துரும்புகளானார்கள்
அழிவுத் தொழிலுக்கு
ஆயத்தமான
ஆற்றல்கள் பெற்றார்
மக்களை மக்களால்
மக்களுக்காகப் பெருக்கி
மண்ணுலகை வீணாக்கிய
மனிதர்களை
விண் வெளிக் கோளங்களுக்கு
ஏற்றுமதி செய்ய
இந்த விஞ்ஞானிகள்
இறுமாப்போடு முயன்றதை
முன்னதாகவே உணர்த்த
இறைவன்
‘மக்களுக்கு வேண்டிய காற்று
மற்றக் கிரங்களுக்கு
இல்லாமல் போகக் கடவது’
என்றார்.
இனிமேல்
மண்ணுலகிலும் காற்று
மலிவாக கிடைக்காது
மின்சாரவிசிறிகளே மிஞ்சும்1
மெஷின்களின் அடிமைகள்
ஆண்டவனுக்கு எதிராக்
ஆர்ப்பாட்டம் செய்வதை
நாங்களும் விரும்பவில்லை
நாங்கள் நடத்தும்
நட்சத்திர இரவு
நன்கொடைக்காக அல்ல
தெய்வீக நன்மைக்காக’

மீண்டும் வந்தது

மின்சாரம்

நட்சத்திரங்களுக்கு
நன்றி சொல்லி
வீட்டிற்குள்  வந்து
விழுந்தேன் படுக்கையில்
நான்
நீரோடையில்
மிதப்பது போல்
நிம்மதியாக
உறங்கினேன்.
                                                                             ***

திருவெண்காட்டில் இருக்கும் போது அடிக்கடி மின்சாரம் போகும் இரவு
மின்சாரத்தை விவாசாயத்திற்கு மாற்றி விடுவார்கள் என்பார்கள். நான் 11வது
படிக்கும் போது அடிக்கடி மின்சாரம் தடை படும். மெழுகுவத்தி, சிம்னி
விளக்கின் உதவியுடன் படிக்க வேண்டும்.

திருவெண்காட்டிலில் இருந்து மேலையூர் 4 கிலோ மீட்டர். நகரத்திற்கு மாலை
முதல் இரவு  ஒரு குறிப்பிட்ட நேரம் வரை வயலுக்கு பம்புசெட்போட மின்சாரம் கொடுத்து விடுவார்கள். அப்போது கிராமத்து பெரியவர்கள் கரண்ட்
மாற்றுவதற்குள் வேலைகளை பார்த்துக் கொள்ளுங்கள் என்பார்கள். 1981ல்
மாயவரம் வந்தோம் அப்போது தான் மின்சாரம் தட்டுப்பாடு இல்லாமல் இருந்தது.  இங்கும் மழை விடாமல் பெய்யும் காலங்களில் மின்சாரத்தை தடை செய்து  விடுவார்கள். இப்போது மறுபடியும் மின்வெட்டு!  மின்சார தேவைகள் நமக்கு  அதிகமாக அதிகமாக இதைத் தவிர்க்க முடியாமல் போய் விடுகிறது.

முன்பு எல்லாம் நெல் குத்தி புடைத்து சமைத்து சாப்பிட்டு இருக்கிறார்கள் ஆட்டுக்கல், அம்மிக்கல் ஓரளவு  பயன்பாட்டில் இருந்தது, இப்போது அவை எல்லாம் காட்சி பொருட்கள்.

வைத்திஸ்வரன் கோவிலில் ஓட்டல் சதாபிஷேகத்தில் கல்வெட்டு மாதிரி செய்து உரலில் குத்துவது திருகைக் கல்லில் அரைப்பது எல்லாம் ஓவியமாய் வரைந்து வைத்து இருக்கிறர்கள்,இக்காலக் குழந்தைகள் பார்க்க.







எங்கள் வீட்டிலும் ஒருநாள் மிக்ஸியில் தேங்காய் சட்னிக்கு அரைத்துக் கொண்டு இருந்தேன் ,கரண்ட் போய் விட்டது. வெகு நேரம் ஆகியும் வரவில்லை. மிக்ஸியில் உள்ளதை எடுத்து சின்ன ஆட்டுக்கல்லில் (இடிப்பதற்கு வாங்கியது) அரைத்தேன் சரி வரவில்லை   பிறகு சின்ன அம்மிக்கல்லில் ஒருவழியாக அரைத்து முடித்தேன்.





 பழைய காலத்து  மனிதர்கள் எப்படித்தான் மின்சாரம் இல்லாமல் சந்தோஷமாய் வாழ்ந்தார்கள் என்று தெரியவில்லை.
மின்சாரம் இல்லையென்றால் கண் போனது போல- கை ஓடிந்து போனது போல - எல்லோரும் தவித்துப் போகிறோம். தேவை இல்லாமல் மின்சாரம் வீணாவதைக்  குறைத்து மின்சாரத்தைச் சிக்கனமாய்ப்  பயன்படுத்தி மகிழ்வோம்.

                                                             வாழ்க வளமுடன்!

                                                       _______________________

ஞாயிறு, 10 பிப்ரவரி, 2013

அபிராமி அன்னைக்கு ஓர் அழகிய அங்கி




திருக்கடவூர்த் தலச்சிறப்பு:
சிவபெருமானது அஷ்ட வீரட்டானத்தில் ஒன்றாக திகழ்வது திருக்கடவூர். இப்போது திருக்கடையூர் என்கின்றனர். இக் கோவில் தருமபுர ஆதீனத்தை சேர்ந்த்து.  திருஞானசம்பந்தர், நாவுக்கரசர், சுந்தரர் ஆகி மூவரால் தேவாரம் பாடப்பட்ட சிறப்பு உடைய பாடல் பெற்ற ஸ்தலம்.பிஞ்சிலம்,(ஒருவகை முல்லைகொடி) ,வில்வமரம் ஆகியவற்றைத் தல விருட்சமாக கொண்டது. தேவர்களும்அசுரர்களும்  பாற்கடல் கடைந்த போது வினாயகரை வழிபடாத காரணத்தால் வினாயகர் இந்த தலத்தில் அமிர்தகுடத்தை மறைத்து வைத்துவிட்டாராம். அந்த அமிர்தகுடமே சிவலிங்கமான காரணத்தால் இங்குள்ள மூலவருக்கு அமிர்தம்+ கடம்= ”அமிர்தகடேஸ்வரர் ‘ என பெயர்.

அமிர்தகுடத்தை மறைத்தவிநாயகர் கள்ளவாரண பிள்ளையார் என்று
அழைக்கப்படுகிறார். இவர் மீது அபிராபி பட்டர் பாடல் பாடி இருக்கிறார்.

மஹாவிஷ்ணுவின் தியானத்தில் உண்டான சக்தியே அபிராமி அம்மை.

சிவபக்திக்காக தனது பக்தன் மார்க்கண்டனுக்கு என்றும் 16 வயது சிரஞ்சீவி வரம் அளித்து தனது இடது பாதத்தினால் எமனை உதைத்து சமஹ்காரம் செய்தார், பின்   பூமாதேவிக்காக எமனை அனுக்ரஹம் செய்த சிறப்பு ஸ்தலம்.

காலன் எமனை சம்ஹரித்த சிறப்பால், மிருத்யுஞ்ஜெயமூர்த்தியாக விளங்கும்இந்த சுவாமியை தன் 59 வயது பூர்த்தி 60 வயது ஆரம்பமான “உக்ரரத சாந்திக்கும் “60 வய்து பூர்த்தி 61 வயது ஆரம்பமான “சஷ்டியப்தபூர்த்தி” வைபவத்திற்கும் 69 வயது பூர்த்தி 70 வயது ஆரம்பமான “பீமரதசாந்தி” வைபவத்திற்கும் , 80 வயது  ஆரம்பமன “சதாபிஷேகம் “மற்றும் “ஆயிஷ்ய ஹோமம்”  ஜாதகரீதியான  மிருத்யுஞ்ஜெய ஹோமங்களுக்கு கலசங்களில் பூஜை செய்து ஹோமங்கள் செய்து  நலம் பெறுவது சிறப்புடையது.

சரபோஜி அரசர் காலத்தில் தனது பக்தனுக்கு தை அமாவாசை அன்று முழு
பெளர்ணமியாக்கி “அபிராமி அந்தாதி “ அருளச் செய்த சிறப்புடையது.
63 நாயன் மார்களில் குங்கிலிய நாயனார் காரிநாயனார் சிவத்தொண்டு ஆற்றி
அருள் பெற்ற ஸ்தலம்.

கார்த்திகை மாதத்தில்  வரும் (திங்கள்கிழமை) சோமவாரத்தில் 1008 சங்குகளால்  அபிஷேகம் நடைபெறுவது மிகச்சிறப்புடையது.

சித்திரை மாதம் மகநட்சத்திரத்தில் கால் சம்ஹார பெருவிழாவும், சித்ரா
பெளணமியில் தீர்த்த வைபவமும் இத் தலத்தில் நடைபெறும்.

ஒருமுறை சரபோஜி அரசர் கோவிலுக்கு வந்தாராம், அபிராமி அம்மனை தரிசிக்க. அப்போது அம்மன் கோவிலில் இருந்த அம்மன் மேல் மிக பிரியம் உள்ள அபிராமி பட்டர் என்பவர் இந்த உலகை மறந்து அம்மன் நினைவில் கண்மூடி இருந்தார். அப்போது ராஜா தான் வந்ததுகூட தெரியாமல் இப்படி இருக்கிறாரே என்று கோபப்பட அங்குள்ளவர்கள் அவர் அம்மன் நினைவில் தியானத்தில் இருக்கிறார் என்று சொல்ல, இன்று என்ன திதி என்று அரசர் கேட்க, அதற்கு அவர் மெய் மறந்த நிலையில் பெளர்ணமி என்று சொல்ல, அவர் இன்று அமாவாசை அல்லவா இவர் பெளர்ணமி என்கிறரே இன்று பெளர்ணமியைக் காட்டவில்லை என்றால்  தண்டனை என்ற போது அபிராமி பட்டர் தன்னை சொல்லவைத்தது  அன்னைதான் அவளே கதி என்று அபிராமி அந்தாதி பாட, தாய்  காட்சி கொடுத்து தன் காது தோட்டை எடுத்து வானத்தில் வீசி அமாவாசையை பெளர்ணமி ஆக்கினார் என்பது வரலாறு.




 தன் குழந்தைக்கு ஒரு கஷ்டம் என்றால் அன்னை இறங்கி வருவாள்
இல்லையா? வந்தாள்  அருளும் தந்தாள். ஒவ்வொரு ஆண்டும் தை அமாவாசை  நாளன்று அனனை  அற்புதம் செய்த அந்த நாள் இங்கு கொண்டாடப்படுகிறது.

அன்னையின் நந்தவனம்


அன்னையின் நந்தவனம்


நேற்று. (09/02/2013) தை அமாவாசை ஆனதால் அந்த விழா அங்கு நடைபெற்றது. நேற்று மாலை நாங்கள் அங்கு சென்றிருந்தோம்.

அபிராமி சந்நிதியில் மலர் விதானம் அமைக்கும் பணி

அந்த விழாவில் 1000 குடத்திற்கு மேல் மக்கள் பால் குடம் எடுத்து அம்மனுக்கு
அபிஷேகம் செய்தார்கள். விளக்கு பூஜை நடந்தது. நவசக்தி அர்ச்சனை, இரவு
நடைபெறும் என்றார்கள். அம்மன் சன்னதியில் மலர் விதானம் அமைக்க பட்டது.நேற்று அற்புத காட்சியாக  அபிராமிஅம்மைக்கு  நவரத்தின அங்கி புதிதாக   செய்திருந்தார்கள். அம்மன் போன்ற உருவம் செய்து அதற்கு அந்த நவரத்தின  அங்கியை அணிவித்திருந்தார்கள். கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது.
நவரத்தின அங்கி அலங்காரம்-புறப்படுமுன்


நவரத்தின அங்கியுடன் புறப்பாடு

கண்கொள்ளாக் காட்சி

திருவீதி உலா

பலகோடி ரூபாய் மதிப்புடையதானதால் பலத்த போலீஸ் பாதுகாப்பு. அம்மனுக்குச் சாற்றுமுன் இத்திருவுருவத்தை திருக்கோயிலினுள்ளும் திருவீதிகளிலும் எழுந்தருளி திருஉலா செய்தனர். அதுவும் கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. ஆதீனகர்த்தர்கள்,பக்தர்கள் முன்னிலையில் அம்மனுக்கு அங்கி சார்த்தும் வைபவம் நடைபெற்றது.

வாழ்க வளமுடன்.


சனி, 9 பிப்ரவரி, 2013

டிக் டிக் கடிகாரம் , அன்பைக்கூறும் கடிகாரம்!


                                                                                                                                                                                             
ஆசியா அவர்கள் தொடர் பதிவுக்கு  அழைப்பு விட்டு இருந்தார்கள்.
-நீங்கள் வெகு காலமாய் பாதுகாத்து வைத்து இருக்கும்  பொருளைப்பற்றி -என்று கூறியிருந்தார்கள்.  அந்த பொருளின் படமும் போடவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்து இருந்தார்கள். என் அப்பாவைப் பற்றிக்கூற எனக்கு நல்ல வாய்ப்பு வழங்கிய ஆசியாவிற்கு நன்றி.

நான் எட்டாவது படிக்கும்போது என் அப்பா வாங்கி கொடுத்த பாரின்
வாட்சைப்பற்றி பகிர்ந்து கொள்கிறேன்.




\

                                                        அப்பா வாங்கி தந்த வாட்ச்

அப்பாவிற்கு நாங்கள் எல்லோரும் செல்ல குழந்தைகள்தான்.  இருந்தாலும் என் தங்கைகள் சிறுமியாக இருந்ததால் என் அக்காவிற்கும், எனக்கும் வாட்ச் வாங்கி தந்தார்கள்.  என் அக்கா பியூசி படித்துக் கொண்டு இருந்தார்கள்.  அப்பா வாங்கி வந்த  இரண்டு வாட்சில்  ஒன்று  வட்டம், மற்றொன்று சதுரம். அப்போது அந்த காலக்கட்டத்தில் - , சதுரம் தான் பேஷன்.  என் அக்கா சதுர வாட்சை எடுத்துக் கொண்டார்கள்.  எனக்கு வட்ட வாட்ச் வந்தது ஆனால் எனக்கு வட்டம்  பிடிக்கவில்லை.  அப்பாவிடம் எனக்கும்  சதுரமே வேண்டும் என்று கேட்டேன்.  இப்போது பாரின் சாமான்கள் எளிதாக கிடைப்பது போல் அப்போது கிடைக்காது. அப்பாவின் நண்பர்- பாரினுக்கு போனவரிடம் சொல்லி வைத்து வாங்கி  கொடுத்தார்கள். அதை மாற்ற முடியாது என்பதால் அதற்கு அப்பா. என் மனம் நோகாமல்  அந்த வாட்சை சந்தோஷமாக ஏற்றுக் கொள்ளுமாறு  எனக்கு நிறைய ஐஸ் வைத்து என்னிடம் கொடுத்து விட்டார்கள்.  அது என்னவென்றால் உன் கைக்கு இந்த வட்டம் தான் நன்றாக இருக்கும்,  அக்கா கைக்கு அந்த சதுரம் தான் நன்றாக இருக்கும்,  உன் வாட்ச் எல்லா  காலங்களிலும் போட்டுக் கொள்ளலாம், அக்கா வாட்ச் இந்த சதுர பேஷன்  இருக்கும் போது மட்டும் தான் போட முடியும்.  அப்புறம் வேறு மாடல் பேஷனாகி  விட்டால் இது பழைய பேஷனாகி விடும். வட்டம் அன்றும், இன்றும், என்றும் நீ போட்டுக் கொள்ளலாம் என்று எல்லாம் சொல்லி என்னை சமாதானப்படுத்திவிட்டார்கள்.

அக்காவின் வாட்ச் கறுப்பு ஸ்ட்ராப், என் வாட்ச் தங்ககலர் ஸ்ட்ராப்.
அம்மாவின் சிங்கப்பூர் வாட்ச் சில்வர் கலரில் வெள்ளைகல் சுற்றி பதித்த , மூடி
போட்டது. அந்த வாட்சை பெரும்பாலும் நான் தான் கட்டி செல்வேன்.

பள்ளியில் தோழிகள் மணி கேட்டால் பெருமையாக அதை திறந்து மணி சொல்வேன். எல்லோரும் அதை திறந்து மூட ஆசைப்பட்டு மணி கேட்பார்கள்.
ஒரு பொருட்காட்சிக்குச் சென்றிருந்த போது அந்த வாட்ச், கூட்டத்தில் எங்கோ விழுந்துவிட்டது.  பொருட்காட்சி முழுவதும்  நானும் என் அண்ணனும் தேடினோம்.








 போகிறவர்,  வருகிறவர்கள் மிதித்து ,மூடி உடைந்து வாட்ச் மட்டும் கிடைத்தது.  அம்மாவிடம் திட்டு வாங்கினேன். வாட்சை பத்திரமாக வைக்க தெரியாதவளுக்கு எதற்கு வாட்ச் என்று  அம்மா வேறு அப்பாவிடம் சொல்லிக்  கொண்டு இருந்தார்கள்.  அது ஒரு காரணம் அப்பா வாங்கி கொடுத்த வட்ட வாட்சை நான் சத்தமில்லாமல் ஏற்றுக் கொண்டதற்கு.

 என் திருமணத்தின் போது நல்ல தங்க கலர் ஸ்ட்ராப் வாங்கி அதில் மாட்டி வைத்துக் கொண்டேன்.  குடித்தன்ம் வைக்க திருவெண்காட்டிற்கு காரில் அழைத்துப் போகும்போது திருவெண்காட்டை சேர்ந்த  நண்பர் வீட்டு சிறு பெண் மடியில் படுத்துக் கொண்டு வந்தாள்/  அவள் தலை மேல் என் கையை வைத்துக் கொண்டு இருந்தேன் நான்.  அவள் திடீரென்று எழுந்ததில் அவள் தலைமுடியில் வாட்ச்  ஸ்ட்ராப் மாட்டிக் கொண்டு அறுந்து போனது.  எனக்கு அழுகை ஒருபக்கம் . அதை வெளிக்காட்டக் கூடாது அல்லவா புகுந்த வீட்டார் முன் ? அடக்கிக் கொண்டேன்.  என் கணவர் அப்புறம் கலர் கலராய் ஸ்ட்ராப்  வாங்கித் தந்தார்கள், மாற்றி மாற்றி போட்டுக் கொள்ளலாம் என்று. சென்னை பர்மா பஜாரில் அரக்கு கலர், கறுப்பு கலர் ஸ்ட்ராப்புகள்  வாங்கித் தந்து தங்ககலர் ஸ்ராப்பை விட இதுதான்  உனக்கு நன்றாக இருக்கும் என்று வேறு சொல்லி கொடுத்தார்கள். என்ன செய்வது? வாங்கி கொண்டேன்.

இரண்டு முறை அப்பா வாங்கித் தந்த வாட்ச் ரிப்பேர் செய்யப்பட்டது. ஒருமுறை வாட்ச் கடைக்காரரின் மகன், இது மிகவும் பழைய மாடலாய் இருக்கே . இதை ரிப்பேர் செய்ய முடியாது என்றார். அதைக் கேட்டுக் கொண்டிருந்த  அவருடைய  அப்பா,  கொடுங்கள் . என்ன வாட்ச்? டிட்டோனியா ?நல்ல வாட்ச் அல்லவா ! என்று சொல்லி, நான் ரிப்பேர் செய்து தருகிறேன் என்று ரிப்பேர் செய்து தந்தார், பழைய ஆட்களுக்கு தான் பழமையின் மதிப்பு தெரியும். இப்போது குழந்தைகள் இத்தனை வருடம் உழைத்து விட்டதா? ரிப்பேர் எல்லாம் செய்ய வேண்டாம் வேறு வாங்கி கொள்ளுங்கள் என்கிறார்கள்.


எனக்கு, மருமகன் அவர்கள் சிங்கப்பூர் சென்ற போது தங்க கலரில் கறுப்புடயல் வாட்ச் வாங்கி வந்தார் -ஓவல்ஷேப்பில்.  அது ஒரு முறை டெல்லியில் ஒருகடையில் சாமான் வாங்கப்போனபோது  பர்ஸோடு அந்த வாட்சையும் அந்த கடைமேசையில்  மறந்து வைத்து விட்டேன். (வாட்ச் செல் மாற்ற வேண்டும் என்பதால் பர்ஸில் வைத்து இருந்தேன். ) டெல்லியிலிருந்து சென்னை கிளம்ப ரயிலுக்கு போகும் போதுதான் நினைவு வந்தது. மகளிடம் சொன்னேன். அது எங்கே இருக்க போகிறது பார்க்கிறேன் என்றாள். நாங்கள் ஊருக்கு வந்து விட்டோம்.

மகளிடமிருந்து போன்.-- வாட்ச் கிடைத்து விட்டது என்று.

டெல்லியில் வெயிலினால் எனக்கு  அலர்ஜி வந்த போது ஒரு ஹோமியோபதி டாக்டரிடம் போயிருந்தோம். அந்த டாக்டர் கொடுத்த மருந்து  சீட்டு எனது பர்சில் இருந்திருக்கிறது. அந்த மருந்து சீட்டைப் பார்த்த கடைக்காரர் அதில் குறித்திருந்த டாக்டருக்கு  போன் செய்து கேட்டு இருக்கிறார். டாக்டர் தெரியாது என சொல்லிவிட்டார்.  ,இப்படி கடைக்காரர்  உடைவர்களிடம் பொருளை சேர்த்துவிட முயற்சிப்பது பெரிய விஷயம் இல்லையா!  எனது மகள் கடைக்குச் சென்று பர்சையும் வாட்சையும வாங்கி வந்து விட்டாள். கடைக்காரருக்கு நன்றி சொல்லி.

நல்ல மனம்வாழ்க என்று வாழ்த்த தோன்றுகிறது அல்லவா!

அவள் வாங்கி வந்த அந்த வாட்ச் மறுபடியும் என்ன ஆச்சு என்பதை   சொல்கிறேன் . என்னாச்சு!     அடுத்த பாராவுக்கு வாருங்கள்.

 மகன், மருமகள், உறவினர்களுடன் கங்கைகொண்ட சோழபுரம் போவதற்கு
கிளம்பினோம் .  என் மாமியார் நான் வீட்டில் இருக்கிறேன்.  நீங்கள் எல்லோரும் போய் வாருங்கள் என்று சொல்லி விட்டார்கள்.  போகும் வரை வேலை சரியாக இருந்தது . வளையல், வாட்ச்  எல்லாம் காரில் போகும் போது மாட்டிக் கொள்ளலாம் என்று எடுத்து சென்றேன். காரில் வளையலை மாட்டிக்கொண்டு வாட்சை கட்ட ஆரம்பிக்கும் போது போன் வந்தது வீட்டிலிருந்து அத்தை காலில் வெந்நீரை விட்டுக் கொண்டார்கள் என .
அப்புறம் பாதியிலேயே திரும்பி டாகடர்  இருக்கிறாரா என்று பார்க்க காரை விட்டு இறங்கி போய் பார்த்து வந்தேன். அவர் இருந்தார், வீட்டிற்கு வந்து அத்தையை டாகடரிடம் காட்டி மருந்து போட்டு வீட்டில் கொண்டு வந்து விட்டோம். பின் , அத்தை எங்களிடம் நீங்கள் கோவிலுக்கு என்று கிளம்பிவிட்டு போகாமல் இருக்க வேண்டாம் போய் வாருங்கள். என்று சொன்னார்கள்

 மறுபடியும் காரில் ஏறும்போதுதான் நினைவுக்கு வந்தது -வாட்ச்.  காரைவிட்டு இறங்கி டாக்டர் இருக்கிறாரா என்று பார்க்கும் போது மடியில் இருந்த வாட்ச் விழுந்து  விட்டிருக்கிறது . நான் கவனிக்கவில்லை.  மறுபடியும் டாகடர் வீட்டு வாசலில் போய் பார்த்தால் கிடைக்கவில்லை. அங்கு போக்குவரத்து அதிகம் உள்ள இடம்.  யாரோ அதிர்ஷ்டசாலிக்கு அன்று இறைவன் அதைப் பரிசளித்து விட்டார்.

’வாட்சை பத்திரமாக வைக்கத் தெரியவில்லை அவளுக்கு எதற்கு வாட்ச். என்று என்  அப்பாவிடம் அம்மா கேட்டது  நினைவுக்கு வந்தது.


எனது மகன் எங்கள் 60 கல்யாணத்திற்கு இரண்டு பேருக்கும் ஒரே மாதிரி  சில்வர் கலர் வாட்ச் பரிசு அளித்தான். அது இருக்கிறது ,இப்போது.






அமெரிக்கா போன போது  மறுபடியும் கறுப்பு டயல்  உள்ள தங்க கலர் வாட்ச் வாங்கி தந்தார் கணவர்.  உனக்கு தங்கத்தில் வாட்ச் வாங்கி தருகிறேன் என்று சொல்லி இருந்தார்கள் .  பார்ப்போம் எப்போது வரும் என்று.

 எத்தனை இருந்தாலும் என் அப்பா முதல் முதலில் வாங்கி கொடுத்த வாட்ச் போல்  ஆகுமா! அந்த வாட்ச என்றும்   அப்பாவின் நினைவை சொல்லிக் கொண்டு என்னுடன் இருக்கும்..

யாருக்கு விருப்பமோ அவர்கள் இந்த தொடரில் பங்கு கொள்ளுங்கள்.
பாதுகாத்து வரும் பொருளைப்பற்றி பகிர்ந்து கொள்ளுங்கள்.
========================================================================                                                                    
                                                    வாழ்க வளமுடன்!




புதன், 6 பிப்ரவரி, 2013

வாழ்க்கைப் பயணம்





இன்னாருக்கு இன்னார் என எழுதி வைத்தானே தேவன் அன்று என்று சொல்வார்கள்.  திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயக்கப்படுகின்றன என்பார்கள்.
இவளுக்கு என்று ஒருவன் பிறக்காமலா இருப்பான் என்பார்கள், யாருக்கு மாப்பிள்ளை யாரோ அவர் எங்கே பிறந்து இருக்கிறாரோ என்பார்கள்.

சமீபத்தில் ஒரு இல்லத்தில் நடந்த திருமணவிழாவில் ஒரு புத்தகத்தை திருமணத்திற்கு  போனவர்களுக்கு தாம்பூல பையில் போட்டுக் கொடுத்தார்கள்.

என். பாலச்சந்திரசிவாச்சாரியார் என்பவர் தன் அன்பு மகள் இந்திரா பிரியதர்ஷினியின் திருமணத்தின் போது  இதை வெளியிட்டு எல்லோருக்கும் கொடுத்தார். புத்தகம் வேதகாலம் முதல், தற்காலம் வரை உள்ள திருமணங்களை ஆய்வு செய்து இனிய இல்லறம் என்று தலைப்பிட்டு இல்லறத்தின் மேன்மையை பல கட்டுரைகளாகச் சொல்கிறது.  எல்லா  மத திருமணங்களும், சடங்கு முறைகளும்,  எல்லாபிரிவு திருமணங்களும் இந்த புத்தகத்தில் இடம் பெற்று இருக்கிறது.


1.வேதம் சொல்லும் திருமணம் -- தி.ஸா.ஷண்முக சிவாசார்யர்
2. தமிழகத்தின் திருமணச்சடங்குகள் ---- பூசை. ச. அருணவசந்தன்
3.  தமிழர் திருமணம் -- புலவர் ஷேக் அலாவுதீன்
4. சமண பெளத்தத் திருமணங்கள் ----- புலவர் கோ. தட்சிணாமூர்த்தி
5. கிறிஸ்தவத் திருமணம் ------ பேரா. டாகடர். மு. ஆல்டெபனஸ் நதானியேல்
6. இஸ்லாமிய மணக் கோட்பாடுகள் ------- அ.ஹொலால் முஸ்தபா
7. இந்திய இல்லற்ச்சட்டவிதிகள் ------- இந்திராணி செல்வகுமார்

                             இல்லறம் நல்லறமாக

1. இல்லறம் சிறக்கத்  தியானம் செய்!--------- Dr. விஜயலட்சுமி பந்தையன்
2, எவருக்கு எவர் துணை?----- தமிழ்வாணன்
3. தாம்பத்திய தந்திரங்கள் ------  லேனா தமிழ்வாணன்
4. மனநலமும் ,தேகபலமும் ---- குருபர தேசிக வைத்தியர்
5. காலநிலை மாற்றமும் , கவனிக்கவேண்டிய பிரச்சினைகளும் --- தேன்தமிழ்
6. இல்லறத்தில் ஆன்மீகம் === புலவர் தில்லை. கலைமணி
7. திரைப்படங்களில் இல்லறக் கண்ணோட்டம் --- வீ. நா. பகவத்சிங்
8. குடும்பம் ஒரு கோயில் --- தமிழ்ப் பொறியாளன்
9,  இல்லறத்தில்மூவர் சாதித்த இனிய நல்லறங்கள் === கா. விஜயராகவன்
10. இல்லறத்தில் காதல் ---- கிருத்திகா.
 இவ்வளவு பேர் எழுதியதை தொகுத்தது தான் இந்த புத்தகம்.

’இனிய இல்லறம்’   புத்தகம் பெயர்.
தொகுப்பாசிரியர் பெயர் தேன்தமிழ், M.A. M.Phil.,
பதிப்பாசிரியர்  லேனா தமிழ்வாணன் , M.A., (Dip.in.journalisam)
மணிமேகலைப் பிரசுரம்.
இலவசமாக வெளியிட்டதால் விலை போடவில்லை.

புத்தகத்தில் படித்ததில் சில  பகுதி :

//நாம் ஒரு ஊரிலிருந்து வேறொரு ஊருக்கு செல்வதானால் நாம் பயணம் செய்ய வேண்டிய நாள், நேரம் பயணிக்கும் வழி, எதில் பயணம் செய்கிறோம் போன்றவற்றை அறிந்தே புறப்படுகிறோம் இவற்றில் ஏதேனும் ஒன்றில் குறை இருந்தால் கூட நாம் பயணிக்க மாட்டோம். திருமணம் ஒரு மிகப்பெரிய வாழ்க்கைப் பயணம். அதனால் இந்நிகழ்வுக்கு அபரிமிதமான தெய்வபலமும், நன்னெறிகளும்  தம்பதிகளுக்கு மிக அவசியம். திருமணம் என்பதை விவாஹம் எனக்கூறுவர்.  ’வஹ்’ எனில் தாங்குதல், தெரியப்படுத்துதல், ப்ரயாணம் செய்தல் என்று பொருட்களில் பயன்படுத்தப்படுகிறது.’வி’என்னும் எழுத்தை முன்னர் சேர்த்தோமானால் “விவாஹகம்” அதாவது நன்றாக தாங்குதல், நன்றாக பயணித்தல் என்று பொருட்படும். ஆம் இல்வாழ்க்கை சுகம் துக்கம் இரண்டும் கொண்டது. இதைக் கடப்பதற்கு நமக்கு ஒரு நல்ல துணையை நமக்கு அமைத்துக் கொடுக்கும் நிகழ்வே , நல்வாழ்க்கை எனும் பயணத்தின் முதல் அடியே திருமணம். இதையே பெரியோர்கள் “இல்லறமே நல்லறம் எனக்கூறினர்.

புது மணத் தம்பதியருக்கு ;  வாழ்வின் ஒவ்வொரு அடியையும் வாழ்க்கை துணையோடு நிதானத்தோடும் , நம்பிக்கையோடும் சந்தோஷத்தோடும் அடியெடுத்து வையுங்கள். இல்லற வாழ்க்கை தேனாக இனிக்கும்.

உணர்வுகளின் பரிமாற்றமும், புரிதலும், விட்டுக் கொடுத்தலும் கொண்ட காதல் இல்லறம் என்றும் வளம் பெறும் ,இனிய இல்லறம் என்றும் சிறக்கும்.

இளமை சக்தி மிக்கது. முதுமை அனுபவச் சாட்டையை கையில் பிடித்திருப்பது ,இரண்டும் அதனதன் பணியை சரியாக செய்தால் குடும்பத்தேர் உல்லாச வலம் வரும்.

வாழ்வு என்ற வண்டிக்கு இருவரும் சக்கரங்கள். அவற்றுள் எந்த சக்கரமாவது சரிவர ஓடவில்லை என்றால் வணடி ஓடாது! காதலிலும், கவர்ச்சியிலும் வாழ்வின் ஒவ்வொரு பகுதியிலும் ஒருவருக்கு ஒருவர் துணையாக இருந்து  சமபங்காளிகள் என்ற உணவர்வோடு குடும்ப வண்டியை உருளச் செய்ய வேண்டும்.
இருவரும் ஓருவருக்கொருவர் புரிந்து கொள்ளும் தன்மையில்தான் குடுமபம் நன்றாக நடைபெறும் விதம் அடங்கி இருக்கிறது.

விட்டுக் கொடுத்தலும், பகிர்தலும், அன்பின் எல்லையற்ற அரவணைப்பும் தம்பத்தியமும் சங்கமிப்பது தான் இல்லறம்.

அன்பகத்து இல்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண்
வற்றல் மரம் தளிர்த்து அற்று.//


இப்போது இதை ஏன் சொல்கிறீர்கள் என்கிறீர்களா?

எங்களுக்கு நாளை (07/02/2013) திருமண நாள். திருமண வாழ்வின்  40 வது ஆண்டு நிறைவடைகிறது.


                                                மலரும் நினைவுகள் - படங்கள்



















 40 ஆண்டு அனுபவத்தில் ஏற்பட்ட அனுபவங்களை சொல்லாமல் வேறு புத்தகத்திலிருந்து அனுபவம் சொல்கிறீர்கள்-  உங்கள் அனுபவம் என்ன? என்று கேட்பவர்களுக்கு :நாங்கள் இன்றும் குழந்தைகள் போல் சண்டையிட்டுக் கொள்வோம். பின் குழந்தைகள் போல் சமாதானம் ஆகி விடுவோம். கோபத்தை நமக்கு வேண்டியவர்களிடம் காட்டாமல் வேறு எங்கு காட்டுவதாம், அவர் வெளியில் கோபப்படாத நல்ல பண்பாளர், புன்னகை ததும்பும் முகத்தினர். நானும் அப்படித்தான்.   கருத்து வேற்றுமைகளை உடனுக்கு உடன் பேசி தீர்த்துக் கொள்ள வேண்டும்.  எங்களுக்கு ஏற்படும் கருத்து வேற்றுமை கேட்டால் சிரிப்பு வரும். காய்கறி  நன்றாக இல்லை, பார்த்து வாங்க தெரியவில்லை  என்றும் பொருட்களை எடுத்தால் எடுத்த இடத்தில் வைக்கவில்லை அது இது என்று தான். உறவினர் வீட்டு திருமணம், விசேஷங்களுக்கு (நல்லது கெட்டதுகளுக்கு) விடுமுறை இல்லை என்று பல்லவி பாடுவது அப்படி போனாலும காலில் வெந்நீரை ஊற்றிக் கொண்டது போல் ஓடி வருவது  அதுதான் எனக்குப் பிடிக்காதது, அவர்களிடம். அப்போது நேரமில்லை ஓய்வு பெற்ற பின்னாவது ஆற அமர போய் வரலாம் என்றால் இப்போதும் வேலையில் சேர்ந்து கொண்டு விடுமுறை இல்லை என்பது தான்., என்ன செய்வது! பள்ளிக் குழந்தைகள் போல் விடுமுறையை எதிர்பார்த்து காத்து இருந்து எங்கும் போக வேண்டும்.

காலம் ஓடுகிறது. நாங்களும் அதனுடன் ஓடுகிறோம். கடவுள் துணையோடும், பெரியவர்களின் ஆசிகளோடும்.

எல்லோரும் நலமாக வாழ்க்கைத்துணையோடு மகிழ்ச்சியாக வாழ வாழ்த்துக்கள்.

வாழ்க வளமுடன்.



வெள்ளி, 1 பிப்ரவரி, 2013

சித்தன்னவாசல்



அண்மையில் 'கழுகுமலை' பதிவு போட்ட போது- சமணர் படுக்கை பற்றி குறிப்பிட்டு எழுதிய போது,  அந்த பதிவுக்கு பின்னூட்டம் கொடுத்த G.M. பாலசுப்பிரமணியம் சார்,

 //புதுக்கோட்டைக்கு அருகில் ஓவியங்களுடனும் கல் படுக்கைகளுடனும் சிற்பங்களுடனும் ஒரு இடம் பார்த்திருக்கிறேன். பெயர் நினைவுக்கு வரவில்லை. வாழ்த்துக்கள் // 

என்று  சொல்லி இருந்தார்கள். அவர்களுக்கு நான் ”அந்த ஊர் பெயர் சித்தன்னவாசல் , அங்கு மகள் மருமகனுடன் சென்று வந்தோம், அதைப் பற்றியும் பகிர்ந்து கொள்கிறேன்”  என்று பதில் அளித்தேன். சாரால் மற்றொரு பதிவு போட வாய்ப்பு கிடைத்து விட்டது.

 தங்கை மகள்  புதுக்கோட்டையில் இருக்கிறாள்,  அவளுடைய குடும்பத்துடன் ஒருமுறை நான் மட்டும் சித்தன்னவாசலுக்கு சென்று இருக்கிறேன்,  மிகவும் அருமையான இடம்.  அப்போது நினைத்துக் கொண்டேன்,  மறுபடியும் குடும்பத்துடன் வர வேண்டும் என்று. போன ஜுனில் விடுமுறைக்கு வந்த  மகள், மருமகன் , பேத்தி, பேரனுடன் நாங்கள் காரில்  சித்தன்னவாசல் சென்றுவந்தோம்.







புதுக்கோட்டை மாவட்டத்தில் புதுக்கோட்டையிலிருந்து   அன்னவாசல் செல்லும் வழியில் 16 கிலோ மீட்டர் அருகில் சித்தன்னவாசல் உள்ளது.


சமணர்கள் ஊருக்கு ஒதுக்குப் புறமாக அமைதியான சூழல்களில் தங்கள் இருப்பிடத்தை வைத்திருந்திருக்கிறார்கள்







 இங்குள்ள மலை மீது சமணர்களின் படுக்கைகளும்,  குடைவரை ஓவியம் வரையப்பட்ட  இடங்களும் உள்ளன.  ஏழடி பாட்டம் என்ற இடத்தில் இயற்கையாக அமைந்த குகையில் 17 கல் சமணர் படுக்கைகள் உள்ளன. இப்படுக்கைகளில்  வழுவழுப்பாய் தலையணை போல உள்ளன





கி.மு 3 ஆம் நூற்றாண்டை சேர்ந்த பிராமி கல்வெட்டு இங்கு காணப்படுகிறது.  குடவரை ஓவியங்கள் மூலிகையால் தயார் செய்யப்பட்ட வண்ணங்களால் வரையப்பட்டது. இப்போது  கொஞ்சம் அழிந்து விட்டது. அங்கு முன் மண்டபத்தின் மேல் விதானத்தில் வண்ண ஓவியங்களில் தாமரைக் குளத்தில் மலர் பறிக்கும் துறவிகள்,   விலங்குகள் , அன்னம், மீன்கள் ,  அல்லி மலர்கள் எல்லாம் அழகாய் வரையப்பட்டு இருந்தது.  தூண்களின் மேல் புறம் ராஜா, ராணி  நடன் மங்கை ஓவியங்கள் உள்ளன.  முன் மண்டபத்தின் சுவரில் தீர்த்தங்கரர்களில் ஒருவரான பார்சுவநாதர் சிலை இருக்கிறது.  கருவறையில்  மூன்று சமண தீர்த்தங்கரர்களின் சிலைகள் உள்ளன.   படம் எடுக்க அனுமதி இல்லை.

குடவரைக்கு செல்லும்  முன் கீழே  தமிழ்நாடு அரசு நுழைவு டிக்கட்  வாங்க வேண்டும்.  மேலே தொல்பொருள் ஆராய்ச்சி துறை வழங்கும் டிக்கட் வாங்க வேண்டும்.

முன்பு நான் போன போது படிகளுக்கு கைப்பிடி கிடையாது. இந்த முறை போன போது அழகிய கைப்பிடிகள் வைத்து இருந்தார்கள்.   ஏறுவதற்கு மிக வசதியாக இருந்தது.

போகும் பாதையில் கல் ஆசனம், சோபா போல் இருந்தது.  அதில் நான், என் மகள், பேத்தி, பேரன் எல்லாம் உட்கார்ந்து போட்டோ எடுத்துக் கொண்டோம்.  என்னை பேத்தி மகாராணி போல் கால் மேல் கால் போட்டு அமருங்கள் என்றாள். நானும் அப்படியே உட்கார்ந்து,” மாதம் மும்மாரி பொழிகிறதா? ” என்று ராஜா கேட்பது போல்  கேட்டேன். ஒரே சிரிப்பு தான்.

 ஒரு குகை மாதிரி இருந்த பாறையின்  உள்ளே போய் வந்தோம்.  என் பேரன் அந்த சமயம் மொட்டை அடித்து இருந்தான்.  அவன் ஒரு பாறை மேல் அமர்ந்து தவம் செய்வது போல் அமர்ந்தான்.  “ஆஹா! சின்னம் சிறு  பாலகன்  தவம் செய்கிறானே என்று மகிழ்ந்து இவனுக்கு   வரம் தாருங்கள், சுவாமி!”  என்றதும்  அவனுக்கு  ஒரே சிரிப்பு !

 சமணர் படுக்கை இருக்கும் இடம் போகும் பாதை, மலையின் பின் பகுதியில்  கீழே இறங்கி குறுகலாய் போகிறது. அது திகைக்க வைக்கும்(திகில் ஊட்டும்) பாதைதான்.  அதில் கீழே விழுந்து விடாமல்  இருக்க தடுப்பு போட்டு இருக்கிறார்கள்.











மலை மீது இருந்து பார்க்கும் போது இயற்கைக் காட்சி அழகாய் இருக்கும். மயில் அகவிய ஓசை கேட்டுக் கொண்டே இருந்தது. ஆனால் மயில் கண்ணுக்கு தெரியவில்லை.





கல் படுக்கைகளை வேலி போட்டுத் தடுத்து வைத்து இருக்கிறார்கள் வெளியிலிருந்து தான் பார்க்க வேண்டும். சமணர் படுக்கை இருக்கும் மலை இடுக்குகளில் வவ்வால்கள் தொங்கி கொண்டு இருந்தது.






பின்பு கீழே இறங்கி இன்னொரு இடத்தில் இருந்த குடவரைக் கோயிலுக்குச் சென்றோம்

குடவரை ஓவியத்தை பார்க்க தனியாக அனுமதி சீட்டு வாங்க வேண்டும்.  அனுமதி சீட்டு பெற்றுக் கொண்டு உள்ளே முதலில் எங்கள் குடும்பத்தை மட்டும் விட்டார்கள்.

குடைவரை ஓவியங்கள் உள்ள இடம்

  உள்ளே சிறு இடம் தான்.  அங்கு இருந்த தொல்லியல் துறை கைடு நல்ல விளக்கம் சொன்னார். மேல் விதானத்தில் எத்தனை சாமியார் பூக்குடலை வைத்துக் கொண்டு பூப்பறிக்கிறார்கள், அன்னப்பறவை, மற்ற விலங்குகள் எத்தனை என்று நம்மிடம் கேள்வி கேட்டு, பின் அவர் தெரிவித்தார். நமக்கு அவர் சொன்னபிறகு  எல்லாம் பளிச்சென்று தெரிகிறது.

பிறகு உள்ளே மூன்று சமண தீர்த்தங்கரர்கள் சிலை இருக்கும் இடத்தில்  நம்மை நடுவில் நிற்க வைத்து விட்டு ,அவர் அந்த அறையின் மூலையிலிருந்து வாயை அசைக்காமல் தொண்டை வழியாக கைடு சத்தம் செய்கிறார் . அது அந்த அறை முழுவதும் எதிரொலிக்கிறது. மிக அருமையான அதிர்வு ஏற்படுகிறது. அதில் அவர் தேர்ச்சி பெற்றவர் என்பதை உறுதிப்படுத்த, நம்மையும் அதுபோல் செய்து பார்க்க சொல்கிறார், நம்மால் முடியவில்லை. உடனே முகமெல்லாம் பூரிப்பாய் மலர்ந்து சிரிக்கிறார்.

அங்கு அருகில் ஒரு பூங்கா இருக்கு. அங்கு கொண்டு போன உணவுகளை  சாப்பிட்டுவிட்டு ஓய்வு எடுக்கலாம் என்று பார்த்தால் அங்கு  உணவு உட்கொள்ளக் கூடாது என்று அறிவிப்புப் பலகை வைத்து இருக்கிறார்கள்.  பொது  இடத்தை நாம் சுத்தமாக் வைத்துக் கொண்டு இருந்தால் அப்படி அறிவிப்பு வைத்து இருக்க மாட்டார்கள்.

பார்க்கில் அழகான சிலைகள் வைத்து இருந்தார்கள். மகாவீரர் சிலை. புலியை முறத்தால் துரத்திய வீரப்பெண்மணி சிலை, மயிலுக்குப் போர்வை கொடுத்த பேகன், முல்லைக்கு தேர் கொடுத்த பாரி,   அன்ன ரதம் ஆகியவை இருந்தது.














அன்ன ரதத்தில் ஒவ்வொருவரும் அமர்ந்து படம் எடுத்துக் கொண்டோம்.



மாயாபஜார் படத்தில் அன்னப் படகில்,” ஆஹா இன்ப நிலாவினிலே, ஒஹோ ஜெகமே  ஆடிடுதே  - மகிழ்ந்து ஆடிடுதே என்ற பாடலை நினைத்துக் கொண்டேன்.



அங்கு குழந்தைகள் விளையாட  சறுக்கு , ஊஞ்சல், சீஸா பலகை எல்லாம்  இருந்தன.   குழந்தைகள் விளையாடினார்கள்.  மரங்களில் நிறைய  குரங்குகள் இருந்தன.





 தண்ணீர் தாகம் எடுத்த குரங்கு தண்ணீர் டியூப்பில் நீர் கசிவு இருந்த இடத்திலிருந்து நீர் பருகியது.  சரியாக வரவில்லை என்று  டியூபில் ஒட்டி இருந்த டேப்பை விலக்கி குடித்தது.

சித்தன்னவாசல்  புகைப்படங்கள் மகள் எடுத்தது. கார்ட்டூன் படம் கணவர்.
இருவருக்கும் நன்றி.

வேறு  இடத்த்தில் மரநிழலில் அமர்ந்து உணவை உண்டு ஓய்வு எடுத்து  ஊருக்கு வந்து சேர்ந்தோம்.
                                               ---------------------------------------