திங்கள், 30 ஆகஸ்ட், 2010

நீ பாதி நான் பாதி

மனைவி என்பவள் சரி சமம் ஆனவள் என்பதைக் காட்டவே அர்த்த நாரீஸ்வர் தோற்றத்தை இறைவன் காட்டினார் என்று சொல்வார்கள் நம் முன்னோர்கள்.

ஒரு மனிதன் தனது வாழ்நாள் முழுவதும் பெற்ற தாய்,உடன்பிறந்த சகோதரி, கட்டிய மனைவி,பெற்றெடுத்த மகள் என்று பெண்ணைச் சார்ந்தே வாழ்கிறான்.ஒருவனுக்கு உயிரையும்,உடலையும் தந்து உலவ விடுபவள் தாய்.அந்தத் தாய் தன்னை மாதிரி தன் மகனைப் பாதுகாத்துப் பேண இன்னொரு தாய் போன்ற பெண்ணைத் தன் மகளுடன் இணைக்கிறாள். ’மனைவி அமைவது எல்லாம் இறைவன் கொடுத்த வரம்’ என்பது போல் வரும் பெண் வாழ்க்கையைச் சொர்க்கமாகவும் மாற்றலாம்,நரகமாகவும் மாற்றலாம்.

அதனால் தான் தெய்வப்புலவர் திருவள்ளுவர் வாழ்க்கைத் துணை நலம் என்றார். நல்ல பெண் வாழ்க்கைத் துணையாக அமைந்தால் நலம். அல்லாவிட்டால் பிணி.

ஒரு ஆணின் வாழ்க்கையில் பெண் வாழ்க்கைத் துணையாக வந்த பிறகே வாழ்க்கைப் பயணம் அர்த்தமாகிறது.

குடும்ப வாழ்க்கையிலே,இன்ப,துன்பங்களில் பங்கு கொண்டு வாழ்வை நல்லபடியாக நடத்த கணவன் மனைவி உறவு சீராக இருக்க வேண்டும்.இருவரும் ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்து வாழ வேண்டும்.கருத்து வேறுபாடு பிணக்கு இருந்தால் ஒருவருக்கு ஒருவர் பேசி அவர்களே தீர்த்துக் கொள்ள வேண்டும்.இருவரும் நல்ல நட்போடும் மாறாத அன்போடும் இருந்தால் வாழ்க்கை நலமாக இருக்கும்.

தரமில்லாத மனிதனை சரிபடுத்தி,நிலையில்லாத மனிதனை நெறிப்படுத்தி கணவனை நல்லவனாக,வல்லவனாக ,எல்லாம் உள்ளவனாக மாற்ற நல்ல மனைவியால் தான் முடியும்.

இயற்கை தனக்களித்த பொறுமை,தியாகம்,இரக்கம்,தாய்மை போன்ற குணங்களால் கணவனுக்கு எல்லாமே தானாகி அவனுக்குச் சிறப்பையும் மகிழ்ச்சியையும் நல்ல மனைவியால் தான் அளிக்க முடியும்.இல்லறமாகிய நல்லறத்தைச் சிறப்பிக்க முடியும்.


இப்படி எல்லாமாகிய மனைவியைக் கணவன் போற்ற வேண்டும். அதற்கு ஒரு நாள் தான்
‘ மனைவி வேட்பு நாள்’என்கிறார் அருள் தந்தை வேதாத்திரி.

சுமார் 20 ஆண்டு காலமாக வளர்த்து ஆளாக்கிய பிறந்தகத்தை சுற்றத்தாரை,பிறந்த ஊரைப் பிரிந்து, தன்னை நம்பி இல்லறம் ஆற்ற வந்த மனைவியை என்றென்றும் போற்ற வேண்டும். அவர்களின் பெருமையை உணர வேண்டுமென்று அருட்தந்தை அவர்கள் தன் மனைவி அன்னை லோகாம்மாள் அவர்களின் பிறந்த நாளான ஆகஸ்ட் 30ம் தேதியை மனைவி வேட்பு விழாவாக-Wife's Appreciation Day- அறிவித்தார்கள்.

//உலகில் இதுவரை ’தந்தைநாள்’ ,தாயார் நாள், தனித்தனியே கொண்டாடுகிறார்கள்.
சுமங்கலி பூஜை என்ற அளவிலே கணவன் வேட்பு நாளும் கொண்டாடுகிறார்கள்.
மனைவி வேட்பு நாள் எந்த ஊரிலேயும் இல்லை. இது ஒரு நன்றி கெட்டதனம் இல்லையா?
இது என் மனதை உறுத்தி கொண்டே இருந்தது.ஆனாலும் ஒருவர் தலையிட்டு செய்தால் மட்டும் போதாது. இது நாடு முழுவதும் ஆண் மக்கள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும் பெண்மையின் பெருமையை உணர வேண்டும் என்ற மனதோடு ஆராய்ச்சி செய்த போது இந்த ஆண்டு என் மனைவியினுடைய (அருள் அன்னை லோகாம்பாள்) பிறந்த நாள் 30.8.ல் வந்தது. அன்பர்களிடம் சொன்னேன். என் மனைவியின் பிறந்த நாளையே வைத்து தொடங்கி மனைவி நல வேட்பு நாள் கொண்டாடலாம். இதையே வைத்துக் கொண்டு,இது முதல் கொண்டு ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 30ஆவது நாளை மனைவி வேட்பு நாளாகக் கொண்டாடுவது நம் சங்கத்தின் வழக்கமாக வரட்டும். பிறகு உலக நாடுகளில் பரவட்டும் என்றேன். ஆண்களும், பெண்களும் அதை ஏற்றுக் கொண்டு பல இடங்களில் கொண்டாடுகிறார்கள்.நீங்களும் உங்கள் வாழ்க்கைத துணையை நன்றியோடு வாழ்த்தி இக் கவியைச் சொல்லி மகிழுங்கள்:-

பெற்றோரைப் பிறந்தகத்தைப் பிறந்த ஊரை விட்டுப்
பிரிந்து வந்து, பெருநோக்கில் கடமையறம் ஆற்றப்
பற்றற்ற துறவியெனக் குடும்பத் தொண்டேற்றுப்
பண்பாட்டின் அடிப்படையில் எனைப் பதியாய்க் கொண்டு என்
நற்றவத்தால் என் வாழ்க்கைத் துணையாகிப் பெண்மை
நல நோக்கில் அன்போடு கருணை இவை கொண்டு
மற்றவர்க்கும் தொண்டாற்றும் மாண்புமிக்க எந்தன்
மனைவியை நான் மதிக்கின்றேன் வாழ்த்தி மகிழ்கின்றேன்.

-அருள் தந்தை.//

இந்த மனைவி வேட்பு நாளில் இக் கவிதையைக் கணவன் கூறி,மலர் போன்ற மென்மையான மனத்தையுடைய மனைவிக்கு மலரினை அளிக்கிறான்.தியாக உள்ளம் படைத்த மனைவி உள்ளப் பூரிப்போடு உவகையோடும் உள்ளக் கனியாகத திகழ்கின்ற கணவனுக்கு ‘கனியைக்’ கொடுக்கிறாள்.இப்படி இந்த ஒரு நாள் மட்டும் அல்லாமல் என்றென்றும் மனைவியை மதித்து போறற வேண்டும் என்பது தான் அருட் தந்தை அவர்களின் மனைவி நல வேட்பு விழாவின் நோக்கமாகும்.


இன்ப துன்பத்தில் சரிபாதியை ஏற்றுக்கொள்ளும் மனைவியைப் போற்றிப் பாதுகாத்து வந்தால் வீடு நலம் பெறும்.

பெண்களுடைய முன்னேற்றம் தான் குழந்தைகள் முன்னேற்றம்.பெண்களுடைய முன்னேற்றம் தான் குடும்ப முன்னேற்றம்.பெண்களுடைய முன்னேற்றம் தான் நாட்டு முன்னேற்றம்.

எந்த வீட்டில்,நாட்டில் பெண் மதிக்கப் படுகிறாளோ அந்த நாடும்,வீடும் முன்னேறும் எங்கெல்லாம் பெண் இழிவு படுத்தப் படுகிறாளோ அங்கு முன்னேற்றம் தடை படும்.

உயிரில் கலந்து,உணர்வில் உறைந்து,நினைவில் நிறைந்து,இதயம்புகுந்த உறவே மனைவி.

அமைதியான சுற்றுச் சூழலில் அமைந்த இல்லம்,இறையருளால் அமைந்த பெற்றோர்கள்,வாழ்நாள் முழுவதும் ஈருடல் ஓர் உயிராக இணைந்த நல்வாழ்க்கைத் துணை,
அறிவிலும் ஒழுக்கத்திலும் சிறந்த மக்கள் செல்வம்,இனிய நட்புடன் கூடிய உறுதியான,உண்மையான் குடும்ப உறுப்பினர்கள், நிறைவான வாழ்க்கை வசதிகள்,சுற்றத்தோடு கூடிய இனிய உறவினர்கள்,சமுதாயத்தில் நன்மதிப்பு இவற்றுடன்
இல்லறத்தில் கூடி மகிழ்ந்து,இறைநிலையோடு இணைந்து வாழும் குடும்பமே இனிய குடும்பமாகும்.

//எல்லையற்ற ஆற்றலுள்ள இறைவன் திருவுள்ள மென்ன
எவ்வுயிரும் தோன்றுவதற்கு ஏற்றதொரு திருவழியாய்
வல்லமையாய்ப் பெண்ணினத்தை வடிவமைத்தான் -அற்புதமே
வாழ்ந்து வரும் மக்களில் இவ்வளமறிந்தோர் எத்தனை பேர்?//

என்பது அருட்தந்தையின் கேள்வி.

கணவன் மனைவி சிறப்பை உணர்ந்து ஒருவருக்கு ஒருவர் மதித்து வாழ வேண்டும்.

வீட்டின் விரிவே வியனுலகம் ஆதலின்
வீட்டறத்தில் வெற்றி காண்-என்பர்.

கணவன் மனைவி உறவை உயிராக மதித்து அன்பை வளர்த்து அறவழியே வாழ்வோம்.

புதன், 25 ஆகஸ்ட், 2010

தட்டிக் கொடுக்கும் தேவதை











மாதம் இருமுறை வரும் பெண்கள் பத்திரிக்கை "தேவதையில்" என் வலைபக்கம் வந்துள்ளது.அந்த மகிழ்ச்சியை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.(ஆகஸ்ட் 16-31)

என் பதிவுகளை படித்து அதை அழகாக தொகுத்து வழங்கிய நவநீதன் அவர்களுக்கு நன்றி.

//வலைப் பதிவு எனப்படும் திறந்தவெளியில் தங்கள் எண்ணங்களை கொட்டி வைக்கும் பெண்களை தட்டிக் கொடுக்கும் பகுதி இது//

வலையில் எழுதும் என் போன்றவர்களுக்கு இது உற்சாகத்தை தரும்.மேலும் எழுத தூண்டு கோலாய் அமையும்.

ஒரு காலத்தில் குறிப்பிட்ட இரண்டு மாத ,வார இதழகள் வாங்கி படிப்போம்,அதன் பிறகு எல்லா மாத, வார இதழ்களை படிக்கும் ஆவலில் வீட்டுக்கு தினம் படித்து விட்டு திருப்பி கொடுப்பவர்களிடம் வாங்கி படித்தோம். இப்போது டீ.வி வந்த பின் பத்திரிக்கை படிப்பவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இருந்தாலும் புதிதாக பத்திரிக்கை வந்து கொண்டு தான் இருக்கு.அதில் ’வளம் பெற வரம் தரும் தேவதை’ என்று இந்த பத்திரிக்கை வந்துள்ளது.அதில் ’வலையோடு விளையாடு’ எனற பகுதியில் தான் நமக்காக் இரண்டு பக்கங்களை அளித்து நம்மை மகிழ்ச்சி படுத்துகிறார்கள்.

பலதரப்பட்ட விருப்புகளை கொண்டவர்களின் எண்ணத்தை பூர்த்தி செய்கிறது தேவதை.

குழந்தைகள்,இளம் வயதினர்,நடுவயதினர்,வயதானவர்கள் என்று எல்லோர்க்கும் நிறைவு அளிக்கிறது.

தேவதைக்கு ஆண்டு ஒன்றாம். அதை வாழ்த்துவோம்,மேலும் வளர.
நான் இந்த பதிவுலத்திற்கு வந்தும் 1 ஆண்டு ஆகிறது. உங்கள் எல்லோர் ஆதரவும்
எப்போதும் வேண்டும். என்னை உற்சாகப் படுத்தி எழுத தூண்டும் வலை உலக நண்பர்கள் அனைவருக்கும் நன்றி.

தேவதை இதழில் நான் வந்து இருப்பதை எனக்கு முதலில் சொன்ன வல்லி அக்காவிற்கு நன்றி.

தேவதையில் வந்த என் பக்கத்தை தெளிவாக்கி என் வலைபக்கத்தில் போடதந்த ராமலக்ஷ்மிக்கு நன்றி.