வெள்ளி, 31 டிசம்பர், 2010

புது வருட சிந்தனைகள்




ஆங்கில வருடத்தின் கடைசி மாதம் டிசம்பர் இன்றுடன் முடிந்து புது வருடம் ஜனவரி ஆரம்பிக்கிறது.தேவர்களின் இரவு எனப்படும் மார்கழி மாதத்தின் நடுவில், நள்ளிரவில் ஆங்கிலப் புத்தாண்டு பிறக்கிறது. ஒவ்வொர் ஆங்கில நாளும் நள்ளிரவில் தான் பிறக்கிறது. கடந்த வருடம் 2010 பலவித மாற்றங்கள், சாதனைகள், வேதனைகள், ஏற்றத் தாழ்வுகள் எல்லாம் நடந்து இருக்கிறது. வரும் 2011 எல்லாச் சிறப்பையும் பெற்றதாய் இருக்க வேண்டும். நம் நாடு பொருளாதாரத்தில் தன்னிறைவு பெறவேண்டும், பொருளாதார வளர்ச்சி எல்லோரையும் சென்றடைய வேண்டும். மக்கள் தன்னிறைவு பெற்றவர்களாய் இருக்க வேண்டும். உழைக்காமல் பணம் சேர்க்கும் மனிதர்களிடம் உழைத்த பொருள்களைக் கொடுத்து ஏமாறும் கூட்டம் விழிப்போடு இருந்து நல்ல வழியில் பொருட்களைச் சேமிக்க வேண்டும்.


//நினைக்கத் தெரிந்த மனமே உனக்கு மறக்க தெரியாதா// கவியரசர் கண்ணதாசன்.

நல்லதை நினைக்க வேண்டும்.கெட்டதை மறக்கத் தெரிய வேண்டும்.

அன்னை எதிர்காலத்தைப் பற்றி நாம் எப்படி நினைக்க வேண்டும் என்கிறார்:

//எதிர்காலம் கடந்த காலத்தை விடக் கண்டிப்பாகச் சிறப்பானது தான். நாம் தான் முன்னேறிச் செல்ல வேண்டும்.ஒவ்வோர் புதிய உதயமும் ஒரு புதிய முன்னேற்றத்திற்கான சாத்தியக்கூறை எடுத்து வருகிறது.எதிர்காலத்தைப் பற்றி மிகவும் அதிகம் சிந்திக்காமல்,அதை இறையருளின் பொறுப்பிலே விட்டு விட்டு எது சரியானதோ நல்லதோ அதை அமைதியாகச் செய்ய வேண்டும்.//

நம் வாழ்க்கையை இறையருளின் பொறுப்பிலே விட்டு விட்டால் சரியானதை மட்டும் தேர்ந்தெடுக்கும் மனதைக் கொடுத்து மன அமைதியைத் தருவார் எனத் தெரிகிறது.

வாழ்வு தொடங்கும் போதே வளமனைத்தும் இணைந்துள்ளது என்கிறார் வேதாத்திரி மகரிஷி:

// ஏழ்மை நோய் விதியென்று எண்ணி ஏமாந்திருந்தேன்
என்னுள்ளுணர் வெனக்கு இயம்பியதென் தெரியுமோ
வாழ்வுதொடங்கும் போதே வளமனைத்தும் இணைந்துளதே
வறுமை நோய் செயல் விளைவால் வந்தபயன் இவ்வுண்மை
ஆழ்ந்துண்ர்ந்து அனைவருமே அன்போடு வாழவெனில்
அரசு மதம் பொருள் துறைகள் அமைதி பெற முழுமை பெற
ஊழ்வினையை உணர்ந்ததற்கு ஒத்து திருத்தென்றதே
உலகோரே உண்மைநிலை உணர்ந்துவளம் பெற்றுய்வோம்.//

செயலுக்கு ஏற்ற விளைவாய் இறைவன் வருவான் என்கிறார்.

“சென்றகாலத்தின் பழுதிலாத்திறமும் இனி எதிர்க்காலத்தின் சிறப்பும்” அறிந்து நன்னெறியில் வாழ்வோம்.

வலைஉலக அன்பர்கள் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

புதன், 29 டிசம்பர், 2010

பாவை நோன்பு









தமிழ் மொழியில் பாவைப் பிரபந்தங்கள் ஐந்துள்ளன. அவை 1. மணிவாசகர் அருளிய திருவெம்பாவை, 2. ஆண்டாள் அருளிய திருப்பாவை. 3.சமணமுனிவர் அருளிய பாவை
4.தத்துவராய சுவாமிகள் அருளிய பாவை இரண்டு. சமண முனிவர் அருளிய பாவை முழுநூல் கிடைக்க வில்லை. அதில் உள்ள பாட்டொன்று யாப்பருங்கல் விருத்தி உரையில் இருக்கிறது.அந்தப்பாடல்:

“கோழியுங் கூவின குக்கி லழைத்தன
தாழியுணீலத் தடங்கணீர் போதுமினோ
ஆழிசூழ் வைத் தறிவனடி யேத்திக்
கூழை நனைக் குடைந்து குளிர்புனல்
ஊழியுண் மன்னுவோ மென்றேலோ ரெம்பாவாய்”

திருப்பாவை வைணவர்களால் பெரிதும் போற்றப்படுகிறது. இது பாகவத வரலாற்றை ஒட்டி வருவது. கண்ணனை நாயகனாகப் பெறவேண்டும் என்ற வேட்கையும், நாடு செழிக்க மழை வேண்டும் என்ற விழைவும்,ஆக்கள் விருத்தியடைய வேண்டும் என்ற விருப்பமும் தன்னகத்தே கொண்டு மிளிர்வது இந்நூல். திருப்பாவையில் பாவை (மண்ணால்)அமைத்து வழிபாடு செய்யும் முறை குறிப்பிடப்படுகிறது. அதைக் காத்யாயனி விரதம் என்பார்கள்.

திருவாதவூரர் அருளிய திருவெம்பாவை, திருப்பெருந்துறையில் அருளப்பட்டது என திருவாலவாயுடையார் திருவிளையாடற் புராணம் குறிக்கும்.திருவாதவூரடிகள் புராணம் அருளிய கடவுண்மா முனிவர் இதைத் திருவண்ணாமலையில் அருளியதாகக் கூறுகிறார். திருவாதவூரர் விருத்தியடைய வேண்டும் என்ற விருப்பமும் தன்னகத்தே கொண்டு மிளிர்வது இந்நூல். திருப்பாவையில் பாவை (மண்ணால்)அமைத்து வழிபாடு செய்யும் முறை குறிப்பிடப்படுகிறது. அதைக் காத்யாயனி விரதம் என்பார்கள்.

திருவாதவூரர் அருளிய திருவெம்பாவை, திருப்பெருந்துறையில் அருளப்பட்டது என திருவாலவாயுடையார் திருவிளையாடற் புராணம் குறிக்கும்.திருவாதவூரடிகள் புராணம் அருளிய கடவுண்மா முனிவர் இதைத் திருவண்ணாமலையில் அருளியதாகக் கூறுகிறார்.

திருவாதவூரர் நீராடப்போவதைக் கண்டார்.அக்காட்சியின் பயனாக விளைந்தது திருவெம்பாவை என்னும் நூல் என்பார்கள்.

பாவையர் மழை வேண்டியும், நல்ல கணவரை அடைய வேண்டியும் பாவைப் பாடல்களைப் பாடினார்கள்.

மார்கழி மாதம் பாவை நோன்பு இருந்தால் மழை வளம் பெருகும். நல்ல இறை நம்பிக்கை உள்ள கணவன் கிடைப்பார். மழை வளம் இருந்தால் நாடு செழிப்பாய் இருக்கும். மக்கள் நலம் பெறுவர்.

நீராடுதல் தவமெனக் கருதப்படும்.புற அழுக்கை நீக்குவது நீர்,நம் அக அழுக்கை நீக்குவது
இறைவன் திருநாமம்.

இளமை நோன்பில் மனதை நன்கு வைத்துக் கொண்டால் உடல் நலமாக இருக்கலாம்.

உடல் பிறக்கிறது,வளர்கிறது,நோய்வாய்ப்படுகிறது. ஆனால் உள்ளம் எந்நாளும் இளமையாக இருக்கலாம்,உள்ளத்தைப் பண்பட்ட நிலையில் வைத்திருந்தால். தளர்வும் சோர்வும் சலிப்பும் இளமையைப் போக்கி முதுமையைத் தரும்.உறுதியும்,ஊக்கமும்,உழைப்பும் இளமையைப் பாதுகாக்கின்றன.

பாவை நோன்பில் காலையில் சுறுசுறுப்பாய் எழுந்து இறைவனைத் தொழுது பின் கடமைகளை
ஆற்றும் போது உள்ளத்திற்குத் தளர்வு,சோர்வு,சலிப்பு இல்லை. உறுதியுடன்,ஊக்கத்துடன் உழைக்கும் போது உயர்வு நிச்சயம். இது ஆண் பெண் இரு பாலருக்கும் பொருந்தும்.

”சந்ததமும் இளமையோடு இருக்கலாம்,”- தாயுமானவர்.

மார்கழி மாதம் திருப்பாவை,திருவெம்பாவை பாடி உயர்வு பெறுவோம்.
வாழ்க வளமுடன்.
============

வியாழன், 23 டிசம்பர், 2010

வெங்காயம் வெங்காயம்!




படங்கள் : நன்றி : கூகிள்



காயமேயிது மெய்யடா!-இதில்
கண்ணும் கருத்தையும் வையடா

நோயும் நொடியும் வாராமல் காத்து
நுட்பமாக உய்யடா!

என்று பட்டுக் கோட்டை பாடியது போல் இந்த காயத்தைப் பாதுகாக்க வெங்காயம் உதவி இருக்கிறது.வெங்காயத்தில் புரத சத்துக்கள், தாது உப்புக்கள், வைட்டமின்கள் உள்ளன.
உடம்புக்கு நல்ல ஊட்டச்சத்தைத் தருகிறது.பல்வேறு நாடுகளில் வெங்காயத்தை மருந்துப் பொருளாக பயன் படுத்துகிறார்கள்.நமது பாட்டி வைத்தியத்திலும், வெங்காயத்திற்கு முக்கிய இடமுண்டு. பல் வேறு நாட்டு விஞ்ஞானிகளும் வெங்காயத்தின் மகிமையைப் பாராட்டுகிறார்கள்.

வெங்காயம் பல்வேறு நோய்களை குணமாக்க வல்லது. இதயத்திற்கு சக்தி தருகிறது.நரை, தலை வழுக்கையைத் தடுக்கும்.உடல் வெம்மையைத் தணிக்கும். இரத்த விருத்தி, எலும்புக்கு வலிமை அளிக்கிறது. பித்த நோய்கள், வாத நோய்களைக் குணமாக்குகிறது.

இது என்ன! நாட்டில் தலைப்புச் செய்தியாக -தொலைக்காட்சி, வானொலி, பத்திரிக்கையில்- என்று வெங்காயத்தை தோல் உரிப்பதுப் போல் உரி உரி என்று உரித்துக் கொண்டு இருக்கிறார்கள்.இந்த சமயத்தில் வெங்காயம் பற்றி பேச்சு என்ன வேண்டி இருக்கிறது?

தெருவில் வெங்காய கலரில் புடவை கட்டிப் போகும் பெண் தனக்கு தெரிந்த இன்னொரு பெண்ணுடன் பேசும் போது வெங்காயம் விலையை பார்த்தீர்களா! என்னா விலை விக்குது. வெங்காயம் வாங்க கடைக்கு போனா தங்கம் நிறுக்கிற மாதிரி நிறுக்கிறான் கடைக்காரான் என்பது தான்.

வெங்காயத்தின் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து இருக்கிறது. அதிக அளவு மழையால் வெங்காயப் பயிர் பாதிக்கப்பட்டதும் வெங்காயவிலை ஏற்றத்திற்கு காரணம்.மக்களுக்கு வெங்காயம் உரிக்காமலே கண்ணில் நீர் வருகிறது, அதன் விலையைக் கேட்டு!

வெங்காயம் பதுக்குவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப் படும் என்று சொல்கிறது அரசாங்கம்.வெங்காயத்தை எவ்வளவு நாள் பதுக்க முடியும்? அழுகி நாறிப் போய் விடாதா?
இநத விலை ஏற்றத்தை தன் டயர் வியபாரத்திற்கு பயன் படுத்திக் கொள்ளும் புத்திசாலி வியாபாரியின் விளம்பரம்: ஜாம்ஜெட்பூரில் உள்ள ஒரு டயர் கடையில் லாரி டயர் வாங்கினால் 5 கிலோ வெங்காயம். கார் டயர் வாங்கினால் 1 கிலோ வெங்காயம். இது எப்படி இருக்கு!

பதவி நாற்காலிகளுக்கும் இந்த வெங்காயத்தால் ஆபத்து. 1996 லில் தில்லியில் முதல்வர் மதன்லால் குரானா காலத்தில் தில்லியில் பரபரப்பாக பேசப் பட்ட வெங்காய விலை ஏற்றம்
அவர் ஏற்றம் மிகு முதல்வர் பதவியைப் பறித்தது. பின் வந்த சுஷ்மா சிவராஜ் காலத்திலும் வெங்காய விலை குறையாததால் 1998லில் தோல்வி அடைந்தார்.

அன்றாடம் கூலி வாங்கி அதில் அரிசி,பருப்பு, காய்கறிகள் வெங்காயம் வாங்கி சாப்பிடும் ஏழை மக்களுக்கு மிகவும் கஷ்டம்.வெங்காயம் கிலோ 100 ரூபாய் என்றால் என்ன செய்வார்கள்?
பட்டுக்கோட்டை ஒரு பாட்டில் ‘ ஏழைக்கு காலம் சரியில்லை’ என்று பாடுவார். அது சரிதான். ஒரு பச்சை மிளகாய்,வெங்காயம் வைத்துக்கொண்டு ஆனந்தமாய் கஞ்சி குடித்து விடுவார்கள் ஏழைகள். அந்த வெங்காயத்திற்கும் இப்போது வழி இல்லாமல் போகிறது.

இப்போது உள்ள பொருளாதார சூழ் நிலையில் நடுத்தர மக்களே கஷ்டப்படும் போது ஏழைகள் பாடு என்னாகும்? 1960ல் பட்டுக்கோட்டை பாடியபாட்டு இது:

கையிலே வாங்கினேன் பையிலே போடல்லே
காசு போன இடம் தெரியல்லே- என்
காதலி பாப்பா காரணம் கேப்பா
ஏது சொல்லுவதென்றும் புரியல்லே
ஏழைக்குக் காலம் சரியில்லே

மாசம் முப்பது நாளும் ஒளைச்சு
வறுமை பிடிச்சு உருவம் இளைச்சு
காசை வாங்கினால் கடன்காரனெல்லாம்
கணக்கு நோட்டோட நிக்குறான் -வந்து
எனக்கு உனக்குன்னு பிய்க்கிறான்

சொட்டுச் சொட்டா வேர்வை விட்டா
பட்டினியால் பாடுபட்டா
கட்டுக் கட்டா நோட்டுச் சேருது
கெட்டிக்காரன் பொட்டியிலே- அது
குட்டியும் போடுது வட்டியிலே

வித விதமாய்த் துணிகள் இருக்கு
விலையைக் கேட்டா நடுக்கம் வருது
வகைவகையா நகைகள் இருக்கு
மடியைப் பார்த்தா மயக்கம் வருது
எதைஎதையோ வாங்கணுமின்னு
எண்ணமிருக்கு வழியில்லை-இதை
எண்ணாமலிருக்கவும் முடியல்லே

கன்ணுக்கு அழகாப் பெண்ணைப் படைச்சான்
பொண்ணுக்குத் துணையா ஆணைப் படைச்சான்
ஒண்ணுக்குப் பத்தா செல்வத்தைப் படைச்சான்
உலகம் நிறைய இன்பத்தைப் படைச்சான்
என்னைப் போலே பலரையும் படைச்சு
இதுக்கும் அதுக்கும் ஏங்க வைச்சான்
ஏழையைக் கடவுள் ஏன் படைச்சான்?

அவரே இன்னொரு பாட்டில்

சாமிக்கு தெரியும்,பூமிக்குத் தெரியும்
ஏழைகள் நிலமை-அந்தச்
சாமி மறந்தாலும் பூமி தந்திடும்
தகுந்த பலனை- இதைப்
பாடிப் பாடி விளையாடி ஆடிப்பல
கோடிக் கோடி முறை கும்பிடுவோம்

நாட்டில் எல்லா வளங்களும் எல்லா நலன்களும் எல்லோருக்கும் கிடைக்க வாழ்த்துவோம்.


வரலாறு காணாத வெங்காயத்தின் வரலாறு :

//வெங்காயம் முற்காலத்திலிருந்தே அனைவராலும் பயன்படுத்தப்பட்டு வரும் ஒரு உணவுப் பொருளாகும்.ஆறு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே எகிப்தியர்கள் வெங்காயத்தைப் பயன் படுத்தி உள்ளனர்.அராபியர்கள் ஏராளமான வெங்காயத்தை உட்கொள்கிறர்கள்.நேபாளத்தில் வெங்காயம் இறைவனுக்கு நிவேதனம் செய்யப் பயன்படுகிறது. யூதர்களும் முற்காலத்திலேயே பயன்படுத்தி இருக்கின்றனர்.மருத்துவத்தின் தந்தை எனப் போற்றப்படும் ஹிப்போகிர்டேஸ் வெங்காயத்தின் பயனைப்பற்றிக் கூறியுள்ளார்.அமெரிக்கரும், இங்கிலாந்து நாட்டவரும் சிறந்த நோய் தீர்க்கும் ஒன்றாக வெங்காயத்தைப் பயன்படுத்துகிறர்கள்.

வெங்காயத்தின் பிறப்பிடம் வடமேற்கு இந்தியா,ரஷ்யா,ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளாகும். மேற்கு ஆசியா மற்றும் மத்திய தரைக்கடல் நாடுகள் வெங்காயத்தின் இரண்டாவது பிறப்பிடமாகும். வெங்காயத்தின் தாவர பெயர் ஆலியம் ஸெபா ஆகும்.இது அலியேசி குடும்பத்தைச் சேர்ந்தது ஆகும். வெங்காயத்தின் ஆங்கிலப் பெயர் ஆனியன் ஆகும்.
இது யூனியோ என்ற லத்தீன் வார்த்தைக்கு ‘பெரியமுத்து’ என்பது பொருளாகும். வெங்காயத்தின் காரத்தனமைக்கு காரணம் ‘அலைல் புரோப்பைல் டை சல்பைடு என்ற எண்ணெய் ஆகும். இதுவே வெங்காயத்தின் நெடிக்கும் நமது கண்களில் பட்டு கண்ணீர் வரவும் காரணமாக இருக்கிறது.சிறிய வெங்காயம்,பெல்லாரி வெங்காயம் இரண்டும் ஒரே தன்மையை உடையன, ஒரே பலனைத் தான் தருகின்றன.//

நன்றி:

’தெய்வீக மூலிகை’
Dr.c.k.மாணிக்கவசாகம்

நான் இதை எழுதிக் கொண்டு இருக்கும் போது மத்திய மாநில அதிரடி நடவடிக்கையால் வெங்காய விலை சரிவு என்று தலைப்புச் செய்தி சொல்கிறது. இறக்குமதியில் சுங்கவரியை ரத்து செய்தல்,ஏற்றுமதியை ஜனவரி 15 வரை தடைசெய்தல்.பதுக்கல்காரர்களை ஒடுக்குதல் எனப் பல நடவடிக்கைகளை அரசு எடுக்கிறதாம். எப்படியோ ஏறிய விலை இறங்கினால் சரி. 100 விற்ற வெங்காயம் 40 என்கிறது.

பெரியார் அடிக்கடி வெங்காயம் என்று சொல்லி வெங்காயத்திற்குப் பெருமை சேர்த்தார்.
வெங்காய விலை குறைந்தவுடன் வெங்காயத்தைப் பயன் படுத்தி என்னென்ன நன்மை பெறலாம் என்பது பற்றி பார்ப்போம்.

சனி, 18 டிசம்பர், 2010

மார்கழிக் கோலங்கள்





மார்கழி மாதம் கோலத்திற்கு உகந்த மாதம். எல்லா நாளும் கோலம் போடுவோம். ஆனால் மார்கழி என்றால் தனிச் சிறப்பு. கண்ணபிரான், மாதங்களில் நான் மார்கழி என்று அந்த மாதத்தின் சிறப்பைச் சொல்லி விட்டார்.தேவர்களுக்கு இந்த மாதம் அதிகாலை நேரம்.இறைவனைத் தொழுவதற்காக சிறந்த மாதமாக இதைக் கூறுகிறார்கள்.வாழ்நாளை வீணாக்காமல் எங்கும் நீக்கமற நிறைந்த இறைவனை வாயினால் பாடி மனதினால் சிந்தித்தால் நாம் முன்பு செய்த பிழைகளும்,இனி மேல் வருவதும் நெருப்பில் இட்ட தூசு போல அழிந்து விடும்,ஆகையால் அவன் புகழை எப்போதும் பேசுவோம் என்கிறாள் ஆண்டாள் திருப்பாவையில்.

மாணிக்க வாசகர் திருவெம்பாவையில் முதல் எட்டு பாடலில் எட்டு வகை சக்திகள் தோழியாக இருந்து பராசக்தியை வணங்குவதைக் கூறுகிறார்.உலகச் செயல்களைத் தொடங்குவதற்கு பராசக்தி உள்ளிட்ட ஒன்பது சக்திகள் உறக்கம் நீங்கி நீராடிப் புகழ்பாடிய நிலையை மனதில் எண்ணி மகளிரும் வைகறையில் எழுந்து நீராடிப் பாடிய காட்சியை திருவெம்பாவையில் கூறுகிறார்.

உயிர்,கதிரவன்,திங்கள், வான்,வளி,நெருப்பு,நீர்,நிலம் இந்த எட்டு சக்திகளுடன் இறைவனும் சேரும்போது நவசக்திகளாய் மாறுகிறது.

அதிகாலை பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழுந்த இந்த உயிருக்கு(நமக்கு) கை,கால்களை அசைத்து இடுப்பை வளைத்துப் பெருக்கித் தெளித்துக் கோலம் போடும்போது குளிர் போய், வெப்பம் (கதிரவன்)கிடைக்கிறது. அதிகாலை நேரத்தில் நிலவும்(திங்கள்) இருப்பதால் அதன் குளிர்ச்சியும் கிடைக்கிறது.வான்வெளியில்(வான்) பிரம்ம முகூர்த்த நேரத்தில் தேவர்கள், ரிஷிகளிடமிருந்து ஆற்றல்களும் ஆசிகளும் கிடைக்கும்.நல்ல காற்று(வளி) ஓசோன் வாயு கிடைக்கிறது. ஒளி வடிவமான இறைவனை வணங்கும் போது ஒளி ஆற்றல் (நெருப்பு )கிடைக்கிறது. கோவிலை வலம் வரும் போது நிலத்தின் ஆற்றல் கிடைக்கிறது.

அந்தக் காலத்தில் அரிசி மாவால் வீட்டின் முற்றத்தில் பலவகை யந்திரவுருக்களால் போடப்படுவதாம் கோலம்.கோலங்கள் தீயசக்திகளை,தீயதேவதைகளை வீட்டினுள் வருவதைத் தடுக்கும் என்ற நம்பிக்கை இருந்திருக்கிறது.

பித்துருக்கள்(தென்புலத்தார்)வீட்டினுள் வருவதற்கு ஏதுவாகவும்,அவர்களிடம் ஆசிபெற ஏதுவாகவும் அம்மாவாசை,சிரார்த்த தினங்களில் வீட்டில் கோலம் இடாத வழக்கமும் உண்டு என்பார்கள்.

ஊருக்கு முன் வாசல் தெளித்துக் கோலம் போடு,இருள் பிரியும் முன் கோலம் போடு, சூரியன் வருவதற்கு முன் கோலம் போடு, என்று வீட்டுப் பெரியவர்கள் சொல்லிக் கொண்டே இருப்பார்கள். யாராவது வீட்டை விட்டு அதிகாலையில் வெளியில் போவதாய் இருந்தால் அவர்கள் போவதற்கு முன் வாசல் தெளித்துக் கோலம் போடு,அவர்கள் போனபின் தெளிக்காதே என்றெல்லாம் பெரியவர்கள் கூறுவார்கள்.கோலங்கள் வெளியில் செல்வோருக்கும் பாதுகாப்பு தரும்.

இப்படிப் பெரியவர்கள் சொன்னதைக் கடைப்பிடிப்பதில் நல்லதும், சில சங்கடங்களும் எனக்கு அவ்வப்போது வரும். ஊரிலிருந்து வந்து கொஞ்சம் களைப்பாய் படுத்து இருந்தேன் அவ்வளவுதான் பால்காரர் கோலம் இல்லை என்பதால் ஊரிலிருந்து வரவில்லை என்று பால் பாக்கெட் போடாமல் போய் விட்டார்.(கீழே திண்ணையில் கோலம் போடுவேன்) மேலே வந்து பார்க்க அவருக்கு அவ்வளவு சோம்பல். எளிதான வழி, கோலம் இருந்தால் நான் வந்து விட்டதாய் அர்த்தமாம். என்னசொலவது!

மார்கழி மாதம் வரும் முன் வாசலைச் சரி செய்ய வேண்டும். கல்,புல் எல்லாம் சுத்தம் செய்தல், பசுஞ்சாணம் கொண்டு வரச்சொல்லுதல் என்று நிறைய ஆயத்த வேலைகள் எல்லாம் முன்பு இருக்கும். மண் தரையில் கலர்க் கோலம் போட்டால் அடுத்தநாள் போட பழைய கோலத்தை முதல் நாளே அழித்து மறுநாளுக்குத் தயார் செய்வது, அடுத்த நாள் என்ன கோலம் போடுவது என்று சிந்தித்து அதற்குத் தயார் செய்வது என்று எவ்வளவு வேலைகள்! இப்போது அடுக்கு மாடிக் குடியிருப்புகளில் அந்தக் கஷ்டம் இல்லை.

கோலம் போடுவதால் மனதுக்கு உற்சாகம், நினைவாற்றல் எல்லாம் கிடைக்கிறது. மனஒருமைப்பாடு இருந்தால் தான் புள்ளிகளைச் சரியாக இணைத்துக் கோலம் போடமுடியும். இல்லையென்றால் கோலம் அலங்கோலம் தான். நம் மனதைப் பிரதிபலிப்பது கோலம். மார்கழி மாதத்தில் அக்கம் பக்கத்தில் என்ன கோலம் போட்டு இருக்கிறார்கள் என்று காலையில் ஒரு சிறு வலம் வருவோம், முன்பு இருந்த தெருவில். அவர்கள் நம் கோலத்தைப் பார்க்க வருவார்கள்,நாங்கள் அங்கு போய்ப் பார்ப்போம். ஒருத்தருக்கு ஒருவர் பாராட்டிக் கொள்வோம். அது மனதுக்கு உற்சாகத்தைக் கொடுக்கும் அடுத்தநாள் இன்னும் நன்றாகப் போட வேண்டும் என்ற எண்ணத்தைக் கொடுக்கும். ஆனால் இப்போது எல்லாம் மாறி விட்டது எல்லாம் ஓட்டம் ஓட்டம் ஓட்டம் தான் நின்று நிதானித்துப் பேச நேரமில்லை. இந்தப்பூவிற்கு இந்தக் கலர் கொடுத்து இருக்கலாம் என்று அபிப்பிராயங்கள் சொல்ல ஆள் இல்லை. பார்வையாளர்கள் அற்ற விளையாட்டுத் திடலில் விளையாடுவது போல் உள்ளது இன்றைய நிலை.

என் அம்மா பெரிய கோலங்கள் போடுவார்கள். தினம் செம்மண் இடவேண்டும். மார்கழி 30 நாளும் சிறப்பு என்பாதால் செமமண் இடவேண்டும் என்பார்கள் அம்மா. அளவாய் நீர்விட்டு கரைத்துக் கோலத்தில் ஓரம் -பூக்களுக்கு நடுவில் -என்று முதலில் செம்மண் இடப் பழுகுவதுதான் சிறுவயதில் பாடம். பின் தான் கோலம் எல்லாம். பசுஞ்சாணத்தால் பிள்ளையார் பிடித்து வைத்து அதில் பூசணிப்பூ ,பீர்க்கம் பூ எல்லாம் வைப்பதும் எங்கள் வேலை. என் பக்கத்து வீட்டு ஆண்டாளுக்கும் எனக்கும் யார் வீட்டில் அதிகப்பூ என்று போட்டாபோட்டியாக இருக்கும். அவளுடைய தாத்தா காலையில் அவர்வீட்டுப் பீர்க்கம் பந்தலிலிருந்து நிறைய பூ எனக்குப் பறித்துத் தருவார். இப்போது பூசணிப்பூ பீர்க்கை பூ கிடைக்கவில்லை. பசுஞ்சாணமும் கிடைப்பது இல்லை. அதனால் என்ன பூ கிடைக்கிறதோ அதை வைக்கிறேன், சும்மா கோலத்தின் மீது. பெண் குழந்தை இருந்தால் தினம் பூ வைக்க வேண்டும். சிறு வீட்டுப் பொங்கல் வைப்பார்கள் அந்தபெண்கள். அம்மா கோலத்தில் அழகாய்ச் சிறுவீடு வரைவார்கள். சிமெண்டால் சின்னதாய் ஒரு சமயம் சிறுவீடு கட்டித் தந்தார்கள். பொங்கல் முடிந்தபின்னும் நாங்கள் அதில் விளையாடி இருக்கிறோம்.

கோலம் மனமகிழ்ச்சியை தரும்.இப்பொழுது பெரிய கோலங்கள் போட்டு கலர் கொடுப்பதுதெல்லாம் என்னால் முடிவது இல்லை.சின்ன சின்னக் கோலங்கள் தான். முன்பு என் அம்மா, தங்கை எல்லாம் புதுக் கோலங்களைக் கடிதத்தில் வரைந்து அனுப்புவார்கள்.

மாயவரத்தில் தேர் வரும் போது தேர்க் கோலம் போடுகிறார்கள். ஒவ்வொரு விழாவிற்கும் ஒவ்வொரு விதமாய்க் கோலம் போடுவதை வழக்கமாய்க் கொண்டுள்ளார்கள்.

வேதாத்திரி மகரிஷி அவர்களின் மனைவி,மார்கழி மாதம் கோலம் போடும்போது அக் கோலத்தைச் சுற்றி எழுதுவதற்கு ஒரு பாட்டு சொல்லுங்கள் என்று கேட்க, அந்நேரத்தில் உதிக்கும் சில சொற்றொடரைக் கோத்துச் சொல்வாராம் மகரிஷி. அவ்வாறு அவர் கூறிய பாடல்கள் , ‘’ மாக்கோலமாய் விளைந்த மதி விருந்து” என்று கவிதைத் தொகுப்பு நூலாக வெளிவந்தது. அதில் உள்ள கவிதைகள் நல் வாழ்விற்கான அறிவு விளக்கங்கள். நான் முதன் முதலில் வலைத்தளம் ஆரம்பித்தபோது’ கிளிக் கோலம்’ ஒன்று போட்டு அதற்கு மகரிஷியின் கவிதை ஒன்று எழுதி என் பதிவை ஆரம்பித்து வைத்தேன். மே 31ம் தேதி வலைத்தளம் ஆரம்பித்தேன்.

அந்த பாடல்:

இயற்கை தரிசனம்
-----------------
எண்ணமே இயற்கையதன் சிகரமாகும்
இயற்கையே எண்ணத்தில் அடங்கிப் போகும்.

என்பது தான்.

வாழ்க வளமுடன்!
----------------------------------

சனி, 11 டிசம்பர், 2010

கண்ணம்மா என் குழந்தை

இன்று நம் தேசிய கவிக்கு பிறந்த நாள். அவர் பராசக்தியைக் குழந்தையாகக் கண்டு சொல்லியப் பாட்டு.

1. சின்னஞ் சிறுகிளியே,கண்ணம்மா!
செல்வக் களஞ்சியமே!
என்னைக் கலிதீர்த்தே-உலகில்
ஏறற்ம் புரியவந்தாய்!

2. பிள்ளைக் கனியமுதே,-கண்ணம்மா!
பேசும்பொற் சித்திரமே!
அள்ளி யணைத்திடவே-என்முன்னே
ஆடிவருந் தேனே!

3. ஓடி வருகையிலே,-கண்ணம்மா!
உள்ளங் குளிருதடீ
ஆடித்திரிதல் கண்டால் -உன்னைப்போய்
ஆவிதழுவுதடீ

4. உச்சிதனை முகந்தால் - கருவம்
ஓங்கி வளருதடீ;
மெச்சி யுனையூரார்-புகழ்ந்தால்
மேனி சிலிர்க்குதடீ.

5. கன்னத்தில் முத்தமிட்டல்-உள்ளந்தான்
கள்வெறி கொள்ளுதடீ;
உன்னைத் தழுவிடிலோ,- கண்ணம்மா!
உன்மத்த மாகுதடீ.

6. சற்றுன் முகஞ்சிவந்தால்-மனது
சஞ்சல மாகுதடீ
நெற்றி சுருங்க்கண்டால்-எனக்கு
நெஞ்சம் பதைக்குதடீ.

7. உன் கண்ணில் நீர்வழிந்தால்-என்னெஞ்சில்
உதிரங் கொட்டுதடீ;
என் கண்ணில் பாவையன்றோ?-கண்ணம்மா!
என்னுயிர் நின்னதன்றோ?

8. சொல்லு மழலையிலே,-கண்ணம்மா!
துன்பங்கள் தீர்த்திடுவாய்;
முல்லைச் சிரிப்பாலே-எனது
மூர்க்கந் தவிர்த்திடுவாய்.

9. இன்பக் கதைகளெல்லாம்-உன்னைப்போல்
ஏடுகள் சொல்வதுண்டோ?
அன்பு தருவதிலே -உன்னைநேர்
ஆகுமோர் தெய்வமுண்டோ?

10. மார்பிலணிவதற்கே -உன்னைப்போல்
வைரமணிகளுண்டோ?
சீர்பெற்று வாழ்வதற்கே -உன்னைப்போல
செல்வம் பிறிதுமுண்டோ?

என்ன அருமையானப் பாட்டு!7வது ’என்னுயிர் நின்னதன்றோ’ வரை குழந்தைகளை தூங்க வைக்க பாடுவேன். 6,8,9,10 எல்லாம் ராகம் தெரியாது பாடமாட்டேன்.எப்போது பாடினாலும் கண்ணில் நீரை வரவழைக்கும் பாட்டு. எந்த குழந்தையை கண்டாலும் குறிப்பாய் பெண் குழந்தையைக் கண்டால் என் மனதுக்குள் ஓடும் பாட்டு. M.L.வசந்தகுமாரி அவர்கள் குரலில் இந்த பாட்டைக் கேட்கும் போது மனதுக்கு இதமாய் இருக்கும். சுதாரகுநாதனும் தன் குரு மாதிரி இந்தப் பாட்டை பாடுகிறார்கள். இந்த மார்கழி உற்சவத்தில் பாடகர்கள் இந்தப்பாட்டை பாடுவார்கள் கேட்கலாம். அந்தக் கால பழைய சினிமா படங்களில் எப்படியும் ஒரு பாரதியார்ப் பாட்டு இருக்கும்.புகழ்ப் பெற்ற பாடகர்கள் எல்லாம் பாடி இருப்பார்கள்.கேட்கவே நல்லா இருக்கும்.


இதேமாதிரி சின்மயி பாடிய ஒரு ’தெய்வம் தந்தபூவே’ பாட்டும் எப்போது கேட்டாலும் கண்ணில் நீரை வரவழைக்கும்.

தேசிய கவிக்கு வணக்கங்கள்.





.

ஞாயிறு, 5 டிசம்பர், 2010

ஓடி விளையாடு பாப்பா



ஓடி விளையாடு பாப்பா என்று பாரதி சொன்னார்.மாலை முழுவதும் விளையாட்டு என்றார். ஆனால் இப்போது குழந்தைகளை நாம் விளையாட விடுகிறோமா என்றால் இல்லை. தினம் ’படி படி’ தான். பள்ளி விட்டு வந்தாலும் சிறிது நேரம் விளையாட விடுவது இல்லை. வீட்டுப் பாடங்கள் முடி,படி என்பது தான் பெற்றோர்களின் தாரக மந்திரம்.

பாரதிதாசன் அவர்களின் குடும்ப விளக்கில் குழந்தை வளர்ப்புப் பற்றி வருவதில் விளையாட்டைப் பற்றி குறிப்பிடுகிறார்.குழந்தைகள் தன் பிஞ்சுக் கால்களால் தத்தித் தத்தி ஓடி விளையாடும் போது அம் முயற்சியைப் பாராட்டி அதற்கு ஊக்கம் கொடுக்க வேண்டும் என்கிறார்.

அமிழ்தே அமிழ்தே ஓடிவா அன்பின் விளைவே ஓடிவா
கமழும் பூவே ஓடிவாஎன் கண்ணின்மணியே ஓடிவா
பச்சைக் கிளியே ஓடிவாஎன் பாடும் தும்பி ஓடிவா
மெச்சும் குயிலே ஓடிவாஎன் விரியும் சுடரே ஓடிவா

என்றெல்லாம் குழந்தையை வருணித்து அதே நேரத்தில் ஓடியாடி விளையாடுவதற்கும் கற்றுக்கொள்வதற்கும் வகைசெய்வதை உணர்ந்து கொள்ள முடிகிறது.

பழந்தமிழ் இலக்கியங்களில் பொன்னூசல்(ஊஞ்சல்) அம்மானை,பூப்பந்து ஆகிய விளையாட்டுக்களைப் பாடிக் கொண்டே ஆடுவார்கள்.பந்தாடிப் பாடும் பாடலைக் கந்துகவரி என்பார்கள்.

இந்த விளையாட்டுக்கள் எல்லாம் மனதுக்கும் உடலுக்கும் நல்ல உரம் அளிக்கும்.

ஓடி,ஆடி விளையாடினால் தான் உடலுக்கு நல்ல ஆரோக்கியம்.மாலை சூரியஒளியில் ’டி’ வைட்டமின் இருப்பதாய்ப் பெரியவர்கள் சொல்லி விளையாட விடுவார்கள்.
இயற்கையில் கிடைக்கக்கூடிய சூரிய ஒளி மிகச்சிறந்த கிருமிக் கொல்லியாகும். உடலில் உள்ள எலும்புகளின் வளர்ச்சிக்குத் தேவையான வைட்டமின் ’டி’ சத்தைத் தோல் மூலமாகப் பெறுவார்கள்.சூரிய ஒளியில் விளையாடினால் நல்ல உடல் நலத்துடன் இருக்கலாம். எங்கே குழந்தைகள் வீட்டிற்கு வருவதற்கே இருட்டிவிடும் என்றால் விடுமுறை நாட்களில் ஆவது விளையாட விட வேண்டும்.

’கல்லா மண்ணா’, ’கண்ணாமூச்சி’, ’சங்கிலி புங்கிலி கதவைத்திற நான்மாட்டேன் வெங்கல
புலி’(வேங்கைபுலி),’ஒருகுடம் தண்ணீர் ஊற்றி ஒரு பூ பூத்ததாம்’,’குலைகுலையா முந்திரிக்கா,நரியே நரியே சுத்திவா’ என்று பாடி விளையாடுவார்கள். இந்த விளையாட்டுக்கள் எல்லாம் கண்ணுக்கு கைக்கு,கால்களுக்கு நல்ல பயிற்சி தரும்.பாண்டி விளையாட்டும் நல்ல விளையாட்டு.

என் அம்மா தன் டைரிக்குறிப்பில் பாண்டி விளையாட்டுக்கு ஒரு பாட்டு எழுதி வைத்து இருந்தார்கள்.

அது:

பாண்டிவிளையாடு


------------------
பாங்கி தோழி பங்கஜம்
பாண்டியாட வாராயோ
பாட்டி எனக்குப் பரிசளித்த
பல்லாங்குழியைப் பாரிதோ

மாமா நேற்று வாங்கித் தந்த
மாணிக்கத்தை பாரிதோ
அத்தை தந்த கட்டி முத்தின்
அழகை வந்து பாரிதோ

சேரருக்கு மங்கலங்கள்
செப்பி விளையாடலாம்
சோழருக்குச் சோபனங்கள்
சொல்லி விளையாடலாம்

இன்னும் பாண்டி யாடலாம்
ஓய்ந்து விட்டால் நிறுத்தலாம்
கட்டும் பாண்டியாடலாம்
களைத்து விட்டால் நிறுத்தலாம்

எய்யாப் பாண்டியாடலாம்
ஏய்த்து விட்டால் நிறுத்தலாம்
பசும் பாண்டியாடலாம்
பசித்தவுடன் நிறுத்தலாம்

பாங்கி தோழி பங்கஜம்
பாண்டியாட வாராயோ.

பாண்டி விளையாடினால் நல்ல பசி எடுக்கும். பசி எடுத்தவுடன் விளையாட்டை நிறுத்திவிட்டு
சாப்பிடப் போய் விடுவார்கள் போலும். அந்த காலத்தில் நல்ல ஆரோக்கியமாக குழந்தைகள் இருந்தார்கள்.இப்போது ஒரு மழை விழுந்தால் போதும், உடனே சளி பிடித்து விடுகிறது.நோய் எதிர்ப்பு சக்தி இல்லை. வாய்விட்டுச் சிரித்தால் நோய்விட்டுப் போகும்.
நல்லா சிரித்து,ஓடி விளையாடி குழந்தைகள் எல்லாம் குதூகலமாய் இருக்க வேண்டும்.

பள்ளிக்கு வெளியேயும் குழந்தைகள் கற்றுக் கொள்வதற்கு நிறைய விஷயங்கள் உள்ளன.
விளையாட்டில் வெற்றி தோல்வியைச் சம்மாகப் பாவிக்கும் மனப்பான்மை,விட்டுக் கொடுத்தல், சகிப்புத் தன்மை,அடிபட்டால் முதல் உதவி செய்யும் குணம்,எல்லாம் தானாக வரும்.நம் கடமை அவர்கள் நல்ல குழந்தைகளுடன் பழகுகிறார்களா விளையாடுகிறார்களா என்று கவனிப்பதும்,சண்டை வந்தால் அவர்களே சமாதானம் ஆகிவிடுவார்கள் என்று நாம் தலையிடாமல் இருப்பதும் தான்.


இப்போது கம்யூட்டர் கேம்,வீ கேம்,எல்லாம் வந்துவிட்டது. அதை அளவோடு விளையாடிவிட்டு வெளியே சென்று விளையாடினால் நல்ல ஆரோக்கியமாக இருக்கும்.
பசங்க கிரிக்கெட்,வாலிபால்,கபடி,என்று விளையாடலாம்.நாகர்கோவில்,கன்னியாகுமரி பக்கமெல்லாம் பெண்களும் இந்த விளையாட்டுக்களை விளையாடுகிறார்கள்.அங்கு பெண்கள் தற்காப்புக் கலையும் பயில்கிறார்கள்.

குழந்தைகளுக்கு ஒரே மாதிரி வேலைகள் சலிப்பூட்டும்.இதையே குழந்தைகள் ’போர்’ என்று குறிப்பிடுவர்கள்.இதை போக்குவதற்கு விளையாட்டு துணை புரியும்.

ஓடி விளையாடி,கூடி விளையாடி உடல் நலத்தோடும்,மனநலத்தோடும் குழந்தைகள் எல்லாம் வாழவேண்டும்.

வாழ்க வளமுடன்!
வாழக நலமுடன்!



.

வியாழன், 18 நவம்பர், 2010

தீபத் திருநாள் திருக்கார்த்திகை




கார்த்திகை முதல் நாள் முதல் அந்த மாதம் முழுவதும் மாலையில் வீடுகளில் வாசலில் இரண்டு விளக்கு வைப்பார்கள்.மார்கழி மாதம் முழுதும் காலையில் கோலத்தில் வைப்பார்கள் தை மாதம் முதல் தேதி வரை.

விளக்கு வழிபாடு மிகவும் சிறந்ததாகும்.வீட்டில் விளக்கு ஏற்ற பெண் வந்தாளா என்று மருமகள் வந்த விபரம் கேட்க வருபவர்கள் மாமியாரிடம் கேட்பார்கள்.

மாலை நேரம் விளக்கு ஏற்றும் போது எங்கெல்லாம் விளக்கேற்றுவார்கள்? ஒருபாடல் மூலம் பெரியவர்கள் சொல்கிறார்கள்.


விளக்கேற்றம்மா விளக்கேற்று
வினயத்துடனே விளக்கேற்று
உள்ளக்கோயிலுக்கு விளக்கேற்று
திண்ணை புரையில் விளக்கேற்று
திருகூடத்தில் விளக்கேற்று
மண்ணில் துளிர்த்து வரும் துளசி
மாடத்தடியில் விளக்கேற்று
கிழக்கு பார்த்து விளக்கேற்று
முகத்தைப் பார்த்து விளக்கேற்று
முழுக்கப் பார்த்து விளக்கேற்று
கிணற்றங் கரையில் விளக்கேற்று
முற்றமெங்கும் விளக்கேற்று
ஆனை முகனின் திருமுன்னே
ஆலிலைக் கண்ணன் திருமுன்னே
சேனாபதியின் திருமுன்னே
சேவித்திருக்க விளக்கேற்று
செல்வப்பெண்ணே நீமுன்னே
விடியும் அளவும் விளக்கேற்று
உள்ளக் கோவிலில் விளக்கேற்று
ஊருக்கு முன்னே விளக்கேற்று


தொட்டிலுக்குப் பிள்ளையும், தொழுவுக்கு பால் பசுவும்,பட்டறைக்கு நெல்லும் பதிந்த மரக்காலும் உனக்கெரிக்க எண்ணெயும் எனக்குண்ணசோறும் தட்டாமல் தந்தருள்வாய் தகவுறவே என்றும் கூறி விளக்கேற்றுவார்கள்.

ஒளிவழிபாட்டின் சிறப்பைப் பெரியோர்கள் பாடியுள்ளனர்:

மாணிக்கவாசகர்: சோதியே சுடரேசூழொளி விளக்கே
சுரிகுழற் பணை முலை மடந்தை
பாதியே பரனே பால்கொள் வெண்ணீரற்றாய்
பங்கயத் தயனும்மா லறியா
நீதியே செல்வத் திருப்பெருந்துறையில்
நிறை மலர்க் குருந்தமேவியசீர்
ஆதியே அடியேன் ஆதரித் தழைத்தால்
அதெந்துவே என்ற ருளாயே

திருமூலர்: உள்ளம் பெருங்கோயில் ஊனுடம் பாலயம்
வள்ளற் பிரானார்க்கு வாய்கோ புரவாசல்
தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம்
கள்ளப் புலனைந்துங் காளா மணி விளக்கே.

திருநாவுக்கரசர்: உடம்பெனும் மனையகத்துள் உள்ளமே தகளியாக
மடம்படு உணர்நெய்யட்டி உயிரெனும் திரிமயக்கி
இடம்படு ஞானத்தீயால் எரிகொள இருந்து நோக்கி
கடம்பமர் காளை தாதை கழலடி காணலாமே


திருமாளிகைத் தேவர்: ஒளிவளர் விளக்கே உலப்பிலா வொன்றே
உணர்வு சூழ் கடந்த தோர் உணர்வே
தெளிவளர் பளிங்கின் திரள் மணிக் குன்றே
சித்தத்துள் தித்திக்கும் தேனே
அளிவள ருள்ளத் தானந்தக் கனியே
அம்பலம் ஆடரங் காக
வெளிவளர் தெய்வக் கூத்துகந் தாயைத்
தொண்டனேன் விளம்புமா விளம்பே.

திருமூலர்: விளக்கைப் பிளந்து விளக்கினையேற்றி
விளக்கினுக் குள்ளே விளக்கினைத்தூண்டி
விளக்கில் விளக்கை விளக்க வல்லார்க்கு
விளக்குடையான் கழல் மேவலுமாமே.



சேக்கிழார்: கற்பனை கடந்த சோதி கருணையே உருவமாகி
அற்புதக் கோல நீடி அருமறைச் சிரத்தின் மேலாம்
சிற்பரவி யோமமாகுந் திருச்சிற்றம் பலத்துள் நின்று
பொற்புடன் நடஞ்செய்கின்ற பூங்கழல் போற்றி போற்றி.

பொய்கையாழ்வார்: வையம்தகளியா வார்கடலேநெய்யாக
வெய்யகதிரோன் விளக்காக-செய்ய
சுடராழியானடிக்கே சூட்டினேன் சொன்மாலை
இடராழி நீங்குகவே என்று.

பூதத்தாழ்வார்: அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக
இன்புருகு சிந்தை இடுதிரியா-நன்புருகி
ஞானச்சுடர்விளக்கேற்றினேன் நாரணற்கு
ஞானத்தமிழ் புரிந்த நான்.

திருக்கார்த்திகை விழா:

ஒவ்வொர் ஆண்டும் கார்த்திகை மாதம் பெளர்ணமியன்று கிருத்திகை நட்சத்திரத்தில் இவ்விழா கொண்டாடப்பட்டு வருகிறது.இவ்விழாவை ஏன் கொண்டாடுகிறோம்? திருவண்ணாமலை தீபம்,சர்வாலய தீபம், விஷ்ணு தீபம்,கார்த்திகை விரதம் - இவற்றை ஏன் கடைப்பிடிக்கிறோம்?

திருவண்ணாமலை தீபம்:

பிரம்மாவும்,விஷ்ணுவும் சிவபெருமானின் திருவடியையும் திருமுடியையும் அன்னமாகவும்,பன்றியாகவும் உருவெடுத்துத் தேடிக்காணாதபோது ,சிவபெருமான் பெரிய ஒளிப்பிழம்பாகக் காட்சி தந்தான்.நெருப்புத் தலமாகிய திருவண்ணாமலையில் இந்நிகழ்ச்சி நடந்ததால் அத்தலத்தில் இன்றும் மலைமீது பெருவிளக்கேற்றியும்,அத்திருக்கோயிலில் விழாக்கொண்டாடியும் வருகின்றனர்.

சர்வாலய தீபம்:

சிவபெருமானின் சன்னதியில் இருந்த ஒரு விளக்கின் ஒளி குறைந்த போது,எண்ணெய் உண்ண வந்த ஒரு எலி தன்னை அறியாமல் திரியை தூண்டி,விளக்கை பிரகாசப் படுத்தியது.
இந்த சிவ புண்ணியத்தால் அந்த எலி மறு பிறவியில் மாவலி (மகாபலி)சக்கரவர்த்தியாக, அந்த மாபலி சக்கரவர்த்தி சிவலாயத்தில் ஒரு சமயம் செருக்குடன் வலம் வந்த போது அவன் மீது தீபம் விழுந்து உடம்பு புண்ணாகி வருந்தினான்.சிவபெருமான் அசரீரியாகி “நீ செருக்குற்றதால் இப்படி செய்தோம் இன்று முதல் எல்லா சிவலாயங்களிலும், இருள் சூழ்ந்த மற்ற இடங்களிலும் நீ தீபம் ஏற்றினால் சாயுச்சய பதவி அடைவாய்” என்று கூறினார். அவ்வாறு ஏற்றி வரும் போது, கார்த்திகை மாதம் வளர் பிறை கிருத்திகை நட்சத்திரத்தில் உக்கிர வடிவத்தில் சிவன் பேரொளியாக தோன்றினான். அஞ்சிய திருமால் முதலியோர் உக்கிரம் தணிய, பொரி, அவல் முதலியவற்றை நிவேதனம் செய்து வழிபட்டனர் என்று அபிதான சிந்தாமணி கூறுகிறது.

இந்த நிகழ்வை நினைவுகூரும் படியாக எப்போதும் திருக்கார்த்திகை விழாவாக மக்கள் கொண்டாடி வருகின்றனர்.பொரி அவல் முதலியவற்றைப் படைத்து வழிபடுகின்றனர்.இந்த கார்த்திகைத் திருவிழாவை 1000 ஆண்டுக்கு முன்பே கொண்டாடி இருக்கின்றனர்.திருஞானசம்பந்தர் எலும்பிலிருந்து பூம்பாவையை மீண்டும் பெண்ணாக்கிய போது ’விளக்கீடு காணாது போதியோ பூம்பாவாய்’ என்று பாடினார்.அந்தக் காலத்தில் கார்த்திகை தீப விழாவை விளக்கீடு என்று வழங்கினார்கள்.


விஷ்ணுதீபம்

விஷ்ணு ஆலயங்களில் இவ் விழா நடப்பதற்கு காரணம் விரதமகாத்மியத்தில் பின் வருமாறு கூறப்படுகிறது: திருமகள் ஒரு அசுரனுக்கு பயந்து ஒரு காட்டில் ஒளிந்து இருக்க அவ் அசுரன் அக் காட்டை கொளுத்தினானாம் அப்போது திருமகள் அந்தரத்தில் சென்று மறைந்தாளாம் அதனை நினவுபடுத்தும் வகையில் தீ ஏற்றுவார்கள்.

ஒளி படும் இடங்களிலெல்லாம் மகாலட்சுமி தேடி வந்து நின்று அருள் புரிவாள்.அந்த வீட்டில் லட்சுமி கடாட்சம் ஏற்படும் என்று கூறப்படுகிறது.

கார்த்திகை விரதம்:

முருகனைக் குறித்து மேற்கொள்கின்ற விரதங்களில் கார்த்திகை விரதமும் ஒன்றாகும்.
பரணி நாளில் முருகனின் பெருமையை கேட்டுக் கொண்டும் பாடிக்கொண்டும் இருந்து, மறுநாள் முருகனை வழிபடுவது இந்த விரதமாகும்.கார்த்திகைப் பெண்கள் ஆறு பேரும் முருகக் கடவுளுக்குப் பாலுட்டி விரத பலத்தை அடைந்ததை இவ் விரதம் குறிக்கும்.


விளக்கு வழிபாட்டின் பயன்:

கள்ளன் அறிவூடுமே மெள்ள மெ(ள்)ள வெளியாய்க்
கலக்க வரு நல்ல உறவே.
-தாயுமானவர்

விளக்கு எரியும் வீட்டுக்குள் திருடர் புகத்துணியார். மனத்தினுள்ளே தெய்வத்தின் ஞான விளக்கேற்றி வைத்திருக்கும் பொழுது புல்லிய எண்ணங்கள் என்ற கள்ளர் புகுவதில்லை.


கார்த்திகை விளக்கேற்றி இறையருள் பெறுவோம்.
எல்லோருக்கும் கார்த்திகைத் திருநாள் வாழ்த்துக்கள்.
                                                                     வாழ்க வளமுடன்
*********************************************************************************
----------

திங்கள், 15 நவம்பர், 2010

கன்னடிய பெருமாள் கோவில்






இத் திருக்கோவில் பழனியிலிருந்து தெற்கு திசையில் கொடைக்கானல் செல்லும் பாதையில் 9 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.மக்கள் அதிகம் செல்லாத சிறு திருக்கோவில்.இக் கோவில் ஒரு பெரிய பாறையின் மீது உள்ளது. இதை சிறு குன்று என்றும் சொல்லலாம்.பொதுவாக மலையின் மீது முருகனுக்கு தான் இருக்கும்.இங்கு பெருமாள் இருக்கிறார்.முற் காலத்தில் இத் திருக் கோவிலை அடையாளம் கண்டு செல்வது கடினமாக இருந்ததாம். பழனியிலிருந்து கொடைக்கானலுக்கு சாலை வசதி செய்யப்பட்ட பின் இப்போது எளிதாகி விட்டது.கொடைக்கானல் செல்லும் பேருந்தில் ஏறி ஆசிரமம் என்னும் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி ஆசிரமத்திற்கு எதிர் திசையில் ஒரு கிலோமீட்டர் மண் சாலையில் செல்ல வேண்டும்.வழியில் பாலம் இல்லாத ஓடையை கடக்க வேண்டும்.கார்,ஆட்டோவிலும் செல்லலாம்.மழைகாலங்களில் செல்வது கடினம். ஓடையில் தண்ணீர் போகும் .நாங்கள் ஆட்டோவில் சென்றோம்.கோவிலை சுற்றிலும் வயல்களும் நீர் நிலைகளும் காட்டு பகுதிகளும் அமைந்து அழகாகவும் அமைதியாகவும் இருக்கிறது.அருகில் எந்த ஊரும் கிடையாது.கண்ணுக்கெட்டிய தூரம் வரை ஒரு வீடும் கிடையாது.

இந்த சிறிய கோவிலை கண்ணாடி பெருமாள் கோவில் என்றும் சிலர் கூறுகிறார்கள். கோவில் முன்னே நெடிய விளக்கு தூணைக் கொண்ட மண்டபம் உள்ளது.கோவிலின் முகப்பு பகுதி பழமையான ஓட்டு கட்டிடமாக இருக்கிறது.உள்ளே சிறிய பிரகாரம் அமைந்துள்ளது.நடுவில் உயர்ந்த மேடையில் ஏறி சென்றால் ஒரு முன் மண்டபமும் உள்ளே கருவறையும் இருக்கிறது.மிக சிறிய வடிவில் பெருமாள் இருக்கிறார் அருள்பாலித்துக் கொண்டு.

இக் கோவில் நாயக்கர் மன்னர்கள் காலத்தில் சிறப்போடு இருந்தாக கூறப்படுகிறது.

தினமும் ஒரு வேளை பூசை நடைபெறுகிறதாம்.ஒரு பூசாரி சற்று தொலைவில் உள்ள ஒரு ஊரிலிருந்து வந்து பூசை செய்து விட்டு உடனே போயவிடுகிறார்.சனிக்கிழமை காலை 10 மணி அளவில் சிறப்பாக பூசை நடை பெறுகிறது. இக் கோவிலுக்கு சனிக் கிழமை காலை செல்வது தான் நல்லது.

நாங்கள் சென்றபோது பூசாரி இல்லை, இப்போது தான் பூசை முடித்து போனார்.என்று காரைக்காலிலிருந்து அடிக்கடி அந்த கோவிலுக்கு வரும் ஒரு அடியார் சொன்னார்.நாங்கள் வெளியூரிலிருந்து வந்து இருக்கிறோம் என்று சொன்னவுடன் பக்கத்தில் இருந்த பெரியவர் கதவின் ஓட்டை வழியாக பாருங்கள் என்றார்.நாங்கள் பார்த்தோம் வெறும் புகை மண்டலமாக இருந்தது.கவலை தோய்ந்த முகமாய் நாம் நிற்பதைப் பார்த்து கன்னடிய பெருமாள் அந்த பெரியவர் மனதில் புகுந்து கதவை திறக்க வைத்தார்.என்னிடம் சாவிக் கொடுத்து போய்விடுவார் என்று சொல்லி நீங்கள் வெகு தொலைவிலிருந்து வருகிறீர்கள் பெருமாளைப் பார்க்காமல் போக வேண்டாம் வாருங்கள் என்று திறந்தார் சினிமாவில் சாமி காட்சி கொடுக்கும் போது முதலில் புகை மண்டலம் வந்து பின் சாமி காட்சி கொடுப்பது போல் வெண்புகையாய் இருந்த்து.பூசாரி பூசைமுடிந்தபின் சாம்பிராணி புகைப் போட்டு பின் கதவை மூடி போவாராம்.
கொஞ்ச நேரம் புகை எல்லாம் அடங்கிய பின் பெருமாள் காட்சிக் கொடுத்தார்.
நல்ல தரிசனம் செய்து மனமகிழ்ச்சியுடன் திரும்பி வந்தோம்.

நீங்கள் போவதாய் இருந்தால் போக வசதியாய் பூசாரியின் போன் நம்பர் வாங்கி வந்தேன்
பாலசமுத்திரம் வீரமணி பூசாரி
செல் நம்பர்- 9965305724

பழனி சென்றால் போய் வாருங்கள் இயற்கையை ரசிக்கலாம்.பெருமாளை வணங்கலாம்.
குழந்தைகளுக்கு பாறையில் (சாய்வாய் இருப்பதால்)ஏறி இறங்க பிடிக்கும்.

செவ்வாய், 2 நவம்பர், 2010

தீபாவளி நல் வாழ்த்துக்கள்!




பதிவுலக அன்பர்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்.

வாழ்க வளமுடன்

திங்கள், 1 நவம்பர், 2010

மோதிரம் வாங்குங்கள்! மோதிரம்!

என் கணவரின் அத்தை வீட்டில் அரிதான புத்தகம் ஒன்று கிடைத்தது.அந்த புத்தகத்தின் பெயர்
“வைகுந்த அம்மானை” 1904லில் வெளி வந்த புத்தகம். அதை தொட்டாலே உடைந்து விடும் போல் இருந்தது. அதில் வந்த விளம்பரம் என்னை கவர்ந்தது.அதை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்.இந்தக் காலத்தில் ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் என்று சொல்வது போல் அன்றும் உள்ளது, ஒன்று வாங்கினால் ஒன்று இனாம் என்று.

இதோ அந்த விளம்பரத்தைப் பாருங்களேன்:

// விளம்பரம்

சீர்மையிலிருந்து வரவழைக்கப்பட்ட

எங்களுடைய

ரோஜாப்பு மொட்டை

பரிட்சித்துப் பாருங்கள்

ரோஜாப்பு மொட்டு என்பது

ஒரு ஷோக் மோதிரம்

இந்த மோதிரமானது அன்று அரும்பி இதழ்மலர்ந்த மொட்டை நடுவில் உடையதுபோல
பிரகாசிக்கும். பார்வைக்கு மிக்கபகட்டாயும் சோபிதமாயுமிருக்கப்பட்ட 9-போலி ரவைகள் வைத்து இழைத்தது .இது இங்கலாண்டு கெமிகல்கோள்டு யென்னும் ஒருவித லோகத்தாற் செய்து விராகனிடை 8 ரூபா விலையுடைய சுயத்தங்கத்தினால் மேற் பூசலும் பூசப்பட்டது.
இந்த மோதிரத்தில் எண்ணைபட்டாலும் ஜலம்பட்டாலும் பளபளப்பு மங்குகிறதில்லை. கொஞ்சம் காந்தி குறைந்த போதிலும் சீமைசுண்ணாம்பு பூசிவைத்து புருஷினால் துடைத்து விட்டால் மறுபடியும் பிரகாசிக்கும் இந்த மோதிரத்திற்கும் ஜெனங்கள் 2,000 ரூபாய் விலையிருக்குமேயென்று மதிப்பிடுவதற்கு அஞ்சமாட்டார்கள்.--இதன் விலை 2-ரூபாய்தான் வி.பி. தபாற்கூலி பிரத்தியேகம்.

8-மோதிரத்திற்கு மல்பீஸ் இனாம்
8--எட்டு மோதிரங்கள் ஒரேதடவையில் வாங்குவோருக்கு நாணயமானதாய்
(ஒரு பீஸ் சலவைமல்) அதாவது 20-கெஜமுடைய தான் இனாமாய் அனுப்படும்.

4.மோதிரத்திற்கு இனாம்

4--நாலு மோதிரம் ஒரேதடவையில் வாங்குவோருக்கு சரட்பட்டன் ஒரு செட்டு இனாமாய் அனுப்பபடும்.

என்னுடைய முழுகேட்லாக் வேண்டுமானால் அரையணா ஸ்டாம்பு அனுப்பினால் அனுப்பப்படும்.

வித்தியாரத்திநாகர அச்சுக்கூடத்தலைவர்

பி.நா.சிதம்பரமுதலியார்
பெரம்பூர் பாரெக்ஸ்போஸ்டு மதராஸ். //



வாங்குங்கள் ஷோக்மோதிரம் விரைந்து.

பின் குறிப்பு:
அதில் உள்ளதை அப்படியே போட்டு இருக்கிறேன்.ஸ்கேனர் என்னிடம் இல்லை.இருந்தால் ஸ்கேன் செய்து போட்டு இருப்பேன்.

வைகுந்த அம்மானை என்ற இந்த புத்தகமும் நன்றாக இருக்கிறது.மகாபாரதக் கதையைப் பாடுகிறது.விநாயகர் துதி,சுப்பிரமணியர் துதி,சரஸ்வதி துதி,ஈஸ்வரர் துதி,மகாவிஷ்ணு துதி, எல்லாத் துதியும் முடித்து பின் கதைக்குப் போகிறது.

வெள்ளி, 29 அக்டோபர், 2010

விரதங்களும் உடல் நலமும்

நம் முன்னோர்கள் மிகவும் விழிப்புணர்வு உள்ளவர்கள்.உடல் நலமாக இருந்தால் தான் நாம் இந்த பூமியில் மகிழ்ச்சியாய் வாழமுடியும் என்பதை உணர்ந்து அதற்கேற்றவாறு வாழ்க்கை முறைகளை அமைத்துக் கொண்டார்கள்.

உடலையும் அதன் இயக்கத்தையும் காக்க ஆகாரம். ரத்தஓட்டத்தையும்,ஜீரணத்தையும் சரியானபடி வைத்திருக்க மிதமான உழைப்பு.

ஒரு பெண் கருவுற்ற நாள் முதல் நல்ல சத்தான ஆகாரம் உண்டு,மனதை மகிழ்ச்சியாய் வைத்துக்கொள்ள வேண்டும்.அப்போது தான் ஆரோக்கியமான குழந்தை பிறக்கும்.நாளைய சமுதாயம் மன வளம்,உடல் நலம் மிக்கதாய் இருக்கும்.


“நீ சீரணிக்கும் அளவிற்குள்ளாக உணவு உட்கொண்டால் உணவை நீ சீரணிக்கிறாய். அதிகமாக உட்கொண்டால் உணவு உன்னை சீரணிக்கும்”
--வேதாத்திரி மகரிஷி

எனவே சுத்தமானதும்,எளிமையானதும்,சத்து நிறைந்ததுமான உணவு வகை அன்றாடம்  நம்  உடலுக்கு தேவை.  காரம், புளிப்பு, உப்பு, சர்க்கரை  இவற்றையும்  மிதமாக  உட்கொள்ள வேண்டும்.


சமசீரான உணவுகள் எடுத்துக்கொள்ள வேண்டும்.ஊட்டசத்துக்கள் அளவிலும், தரத்திலும், சமவிகிதத்தில் இருக்குமாறு  உண்பதே சரிவிகித உணவு. சரிவிகித  உணவு  சாப்பிட்டால்தான் ஆரோக்கியமாக இருக்க முடியும்.

திருவள்ளுவரும் இதை அழகாய் சொல்கிறார்.

”மிகினும் குறையினும் நோய் செய்யும் நூலோர்
வளிமுதலா எண்ணிய மூன்று”

உணவு அளவுக்கு மேல் கூடினாலும் குறைந்தாலும் மருத்துவ நூலோர் வகுத்த வாதம்,பித்தம்,கபம் ஆகிய மூன்று நோயை வரசெய்யும்.

“மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது
அற்றது போற்றி யுணின்.”

முன்பு உண்ட உணவு செரித்த்தை அறிந்து பின்பு உண்டால் உடலுக்கு மருந்து என்று வேறு ஒன்றும் வேண்டியது இல்லை.

“அற்றால் அளவறிந்து உண்க அஃதுடம்பு
பெற்றான் நெடிதுய்க்கும் ஆறு.”

உடலுக்கு தேவையான உணவை அளவோடு உண்டால்,உடம்பை நீண்ட காலம் வாழ வைக்க முடியும்.


இதற்கு தான் உபவாசம்,விரதம்,நோன்பு,போன்ற பழக்கங்கள் ஏற்பட்டன.அதிலும்கூட தங்கள்
இஷ்ட தெய்வத்திற்கு தகுந்தாற் போல் விரதம் கடைப்பிடித்தார்கள்.

விரதம்,நோன்பு ஆகியவற்றை எல்லா மதத்தினரும் கடைபிடித்து வருகின்றனர்.

நமது வாழ்க்கை முறை, உணவுப் பழக்கம்,ஆகியவை நமது உடல்நலத்தைப் பெரிய அளவில் தீர்மானிக்கின்றன. தட்பவெப்பத்திற்கேற்ப உணவுப் பழக்கம் நடைமுறையில் இருந்து வருகிறது.

அந்தந்தச் சூழலுக்கு ஏற்ற அந்தந்த உணவு வகையை எடுத்துக் கொள்வது நல்லது. நமது பாரம்பரிய உணவு வகைகளை உண்ணவேண்டும். நார்ச்சத்துக்கு பீன்ஸ் போன்ற பச்சைக் காய்கறிகளை உண்ணலாம். இரும்புச் சத்துக்கு வெல்லம் நல்லது.நொறுக்கு தீனிக்கு மாறாகப்பழங்கள் ! குழந்தைகளுக்கு நாமே தயாரித்த சத்துமா கஞ்சி கொடுக்கலாம். பூச்சி கொல்லிகள் தெளிக்காத பச்சைக் காய்கறிகள் நல்லவை. கீரைகள்,கேழ்வரகு இதில் எல்லாம் சுண்ணாம்புச்சத்து உள்ளது. சிறு வயது முதல் இளநீர்,மோர் பருகப் பழகுவது நல்லது.அவரவர்களுக்கு என்ன ஒவ்வாதிருக்கிறதோ, அதை விட்டு விட்டு, எது உடம்புக்கு ஒத்துக் கொள்கிறதோ அதை உண்டால் உடல் நலமாக இருக்கும்.

காலையில் இஞ்சி,நடுப்பகல் சுக்கு,மாலையில் கடுக்காய் இப்படி எப்போது எதைச் சாப்பிடவேண்டும் என்று முன்னோர்கள் வகுத்துத் தந்த முறையில் உணவை உண்டால் நாளும் நலமாக இருக்கலாம்.

உடல் உழைப்பாளிக்கும்,மூளை உழைப்பாளிக்கும், உண்ண வேண்டிய உணவு மாறுபடும்.உடல் உழைப்பு இல்லாதவர்கள் அதிக உணவு உண்டால் ஆற்றல் இழப்பு தான் ஏற்படும்.உண்ணும் உணவு எளிதில் ஜீரணித்து கழிவுகள் நன்கு வெளியேறினால்தான் உடல் பலம் பெறும்.சத்து குறைந்தாலும் நோய்; சத்து மிகுந்தாலும் நோய்.பசிக்கும் மட்டும் உணவல்ல, உடலின் செயல் பாட்டுக்கும் உணவு அவ்சியம்.அவசர உணவு,அதிக உணவு,அகால உணவு,நல்லதல்ல.

விரத நாட்களில் உணவைத் தவிர்ப்பதும்,பண்டிகை நாட்களில் விருந்தை ஏற்பதும் வழக்கம்.

நாள்தோறும் ஓய்வில்லாமல் ஓடிக்கொண்டு இருக்கும் வயிறாகிய இயந்திரத்திற்கு வாரத்தில் ஒருநாள் ஓய்வு கொடுக்கலாம்.

“விரதமகாத்மியம்” என்னும் நூல் 159 விரதங்கள் இருப்பதாய்ச் சொல்கிறது. நாம் கடைப்பிடிக்கும் விரதங்கள் கொஞ்சம் தான்.

உபவாசம் என்பது ஒர் நோய் தடுப்பு முறையே:

சிலர் விரத காலங்களில் வெறும் தண்ணீர் மட்டும் குடித்துக் கொண்டு இருப்பார்கள்,இது மலக் குடலை சுத்தம் செய்யுமாம்.
சிலர் இளநீர், ஆரஞ்சுஜீஸ், எலுமிச்சை ஜீஸ், பழச்சாறுகள், குடிப்பார்கள்.

சிலர் நீர்மோர்,பானகம், மட்டும் எடுத்துக் கொள்வார்கள்.
சிலர் பழம்,பால் எடுத்துக் கொள்வார்கள்.பழ ஆகாரம் என்பது தான் பலகாரம் ஆனது என்று சொல்கிறார்கள். விரத  காலங்களில் பலகாரத்திற்கு பதில் பழ ஆகாரம் நல்லது.

உபவாசத்தால் ஏற்படும் நன்மைகள்:

கழிவுகள் சீராக வெளியேறும்;  எடை குறையும்:  உடல் சமநிலை பெறும்; ஜீரண உறுப்புகள்ஓய்வு பெறும்;  நற்சுவாசம் பெறலாம்; ரத்தம் சுத்தமாகும்; நரம்புகள் ஓய்வு பெறும்; நோய் தரும் திசுக்கள் அழியும்;கழிவுகள் நன்கு நீங்கும்; மனம் சமநிலை அடையும்; நற்சிந்தனை உண்டாகும்.

சில விரதங்களும் பலனும்:

1.திங்கள் கிழமை விரதம் இருப்பதன் மூலம் கணவனின் பரிபூரண அன்பைப் பெறலாம்.
2.செவ்வாய்க் கிழமை விரதம் இருப்பதன் மூலம் கணவன் மனைவி தகராறு நீங்கி வாழலாம்.
3.வியாழக்கிழமை விரதம் இருப்பதன் மூலம் புத்திர பாக்கியம் பெறலாம்.
4.வெள்ளிக்கிழமை விரதம் இருப்பதன் மூலம் கணவன் நீண்ட ஆயுளைப் பெறலாம்.
6.ஞாயிற்றுக் கிழமை விரதம் இருப்பதன் மூலம் நீடித்த நோயிலிருந்து விடுதலை பெறலாம்,நோய் வராமல் தடுத்துக் கொள்ளலாம்.

ஆவணி மாதம் அஷ்டமியுடன் சேர்ந்து வரும் வெள்ளிக் கிழமையன்று மகாலட்சுமி விரதம் இருந்தால் எல்லா நன்மைகளும் கிட்டும்.

மார்கழி ஏகாதசி விரதம் :-

கிருஷ்ணபக்ஷ ஏகாதசியில் அநுஷ்டிப்பது இந்நாள் தேவர்களுக்கு இடுக்கண் புரிந்த முராசுரனை விஷ்ணு கொன்று தேவரை களிபித்த நாள். இதில் உதயம் ஏகாதசி , மத்யம்  த்வாதசி , அந்தியம் திரயோதசி
உத்தமம்.  இந்நாளில் ஒரு நாள் விரதமிருக்கின்   ஆயிரம்  ஏகாதசி பலம் உண்டு  என்று சொல்லப்படுகிறது.


என் அம்மாவும் விரதங்களும்:

கார்த்திகை மாதத்தில் வரும் திங்கள் கிழமை (சோமவாரவிரதம்)வீட்டில் என் அப்பாவைத் தவிர எல்லோரையும் கடைபிடிக்க வைத்தார்கள். காலையும், மதியமும், உணவு அருந்தாமல், மாலை மாவிளக்கு செய்து பூஜை முடிந்தபின் தான் உணவு.

பள்ளி சென்று வந்தபின் குளித்து பூஜையில் உட்கார்ந்தால் இரண்டு மணி நேரம் பஜனை.அம்மா எப்போது பாடல் முடிப்பார்கள் உணவு தருவார்கள் என்று இருக்கும்.பூஜை முடிந்தபின் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களுக்கு மாவிளக்குப் பிரசாதம் கொடுத்து வந்தபின் தான் எங்களுக்கு உணவு. அப்பாதான் ’காலையிலிருந்து ஒன்றும் சாப்பிடாமல் இருக்கிறீர்கள் சீக்கீரம் சாப்பிடுங்கள்’ என்பார்கள். 


இந்த விரதத்தை சிறு  வயதில் கடை பிடிக்க கஷ்டமாய் உணர்ந்தாலும், இப்போது ஆரோக்கியமாக இருக்கிறேன்.

பிறகு வெள்ளிக் கிழமை பூஜை. சர்க்கரைப் பொங்கல் செய்து தருவார்கள் அதை விளக்கு முன் வைத்து விட்டு அஷ்டலக்ஷ்மி ஸ்தோத்திரம் சொல்லி,’விளக்கு போற்றி’ சொல்லி விட்டு பூஜை முடிந்தபின் தான் காலை உணவு. அந்தப் பழக்கம்தான் மனவைராக்கியம்,எல்லாம் இறைவன் அருளால் நல்லபடியாக நடக்கும் என்ற மனப் பக்குவத்தை இப்போது கொடுத்து இருக்கிறது.இன்றும் சோமவார விரதம் கடைப்பிடித்து வருகிறேன்.

சஷ்டி விரதம் மாதத்தில் இரண்டு வரும். அந்த இரண்டு நாளும் நானும் என் கணவரும் விரதம் இருக்கிறோம் தீபாவளியை ஒட்டி வரும் சஷ்டி விரதநாட்களில் ஒரு வேளை மட்டும் உணவு.6 ஆம் நாள் சூரசம்ஹாரம் முடிந்தபின் உணவு.நானும் கணவரும் சேர்ந்து கடைப்பிடிப்பதால் கஷ்டம் இல்லை.இந்த விரதம் என் கணவர் வீட்டில் அப்பா,அம்மா,அண்ணன்கள் எல்லோரும் கடைப்பிடிப்பார்கள் திருசெந்தூரில் போய் ஆறு நாளும் இருந்து விரதம் கடைப் பிடிப்பார்கள்.இப்போது வயது ஆகிவிட்டதால் அத்தை,மாமா கடைப்பிடிப்பது இல்லை.

என் கணவருக்கும்,என் மகனுக்கும் காய்ச்சல் அடிக்கடி வந்து கொண்டு இருந்தது அப்போது அம்மாவிடம் கேட்ட போது ’ஞாயிறு விரதம் இரு , நோய் நொடி இல்லாமல் இருக்கும்’ என்றார்கள் 19 வருடமாய் நானும் என் கணவரும் இருந்து வருகிறோம்,குழந்தைகளும்’ நாங்களும் இருக்கிறோம்’ என்று இருந்தார்கள் மகள் கல்யாணம் ஆகும் வரை,மகன் வேலை கிடைக்கும் வரை இருந்தார்கள்.

மகனுக்கு விதிமுறைகள் விரதத்தில் தளர்த்தப்படும்.பொரி விற்கும் பாட்டி பொரிஉருண்டை,தேன் மிட்டாய் கொண்டு வருவார்கள், அது மட்டும் வாங்கிச் சாப்பிடுகிறேன் என்பான் சரி என்று ஒத்துக் கொள்வேன்.காலை மட்டும் டிபன் கிடையாது. மதியம் உணவு உண்டு.இரவு உணவு சப்பாத்தி.காலை உணவை தவிர்க்கக் கூடாது என்று மருத்துவர்கள் சொல்வதால் சத்துமாவு கஞ்சி கொடுத்து விடுவேன் குழந்தைகளுக்கு.

விரதங்களைக் கடைப் பிடிக்க முடியாதவர்கள் வருத்தப்பட வேண்டாம்.

எல்லா உயிர்களிடத்திலும் அன்பு காட்டி,தான தர்மங்கள் செய்து,மனதாலும் வாக்கினாலும் செயலாலும் ஒழுக்கமான காரியங்களைச் செய்து,பிறர் துன்பங்களைத் தன்னுடையது போல் நினைத்து உதவிகள் செய்பவன் தான் ’சத்புருஷ்விரதம்’ செய்த பலனை அடைவதாய் சாஸ்திரங்கள் சொல்கின்றன.

ஒழுக்கசீலனாக,தர்மசாஸ்திரப்படி சத்புருஷவிரதம் அனுஷ்டித்து இறைஉணர்வோடு வாழ்பவர்கள், நோயினால் அவதிப்படுவதில்லை அப்படியே நோய் வந்தாலும் அதைத் தாங்கும் சக்தியையும் எதிர்த்துப் போராடும் உள்ளத்தையும் இறைவன் அவர்களுக்கு அளிக்கிறார்.என்பது ஆயுர்வேதத்தின் ஆசான் சரகரின் வாக்கு.

வேதங்கள் நமக்கு உணர்த்துவது எல்லா உயிர்களும் துன்பமில்லாமல் இருக்க வேண்டும் என்பதே .இதைத்தான் தாயுமானவர்’ எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவேயல்லாமல் வேறொன்றியேன் பாராபரமே ’என்கிறார்.

எல்லோருடைய இன்பத்துக்கும் ஆசைப்பட்டால் நாமும் இன்பமாக இருப்போம். இதைத்தான் ஆயுர்வேதமும் கூறுகிறது.

சமஸ்கிருத்தில் “சர்வ ஜன சுகினோ பவந்து” என்பார்கள்.

வாழ்க நலமுடன்!
வாழ்க வளமுடன்!

வெள்ளி, 1 அக்டோபர், 2010

முதியோர் நாள்

இன்று காலண்டர் கிழிக்கும் போது ’இன்று முதியோர் நாள்’ என்று போட்டு இருந்தது.
முதுமைக்கு அப்படி ஒரு மரியாதையா!என்ற வியப்பும் மகிழ்ச்சியும் ஏற்பட்டது.சரி அது என்ன விபரம் என்று தேடிய போது thats tamil பத்திரிக்கையில் //அக்டோபர் முதலாம் தேதிசர்வதேச முதியோர் தினமாகும்.மூத்த பிரஜைகள் என்று அழைக்கப்படும் முதியோர்களை ஒவ்வொரு சமூகமும் கண்ணியமாகவும் கெளரவமாகவும் நோக்கி அவர்களை மதிக்க வேண்டியதன் அவசியத்தை உணர்த்தும்முகமாக ஐக்கிய நாடுகள் பொதுச்சபை ஆண்டு தோறும் அக்டோபர் 1ம்தேதியை சர்வதேச முதியோர் தினமாக பிரகடனப்ப்டுத்தியுள்ளது.//

//1990ம் ஆண்டு டிசம்பர் 14ம் தேதி ஐக்கிய நாடுகள் பொது சபையினால் கொண்டு வரப்பட்ட பிரிவு45/106 தீர்மானத்திற்கமையவே இத்தினம் பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.இதன்படி முதன் முதலாக 1991ம் ஆண்டு சர்வதேச முதியோர்தினம் உலகெங்கும் கொண்டாப்பட்டது.
தொடர்ந்து ஒவ்வோர் ஆண்டும் கொண்டாடப்பட்டு வருகினறது.உலகெங்கும் வாழும் முதியோர்களின் நலன் மற்றும் அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து ஆராய்வதும் அவர்களுக்கென ஒரு சமூக கட்டமைப்பை உருவாக்குவதுமே இந்த நாளின் பிரதான நோக்கமாகும்.//

நம் நாட்டில் பெரியவர்களுக்கு முதியோர் நாள் என்று தனியாக கொண்டாட வேண்டிய அவசியம் இல்லாமல் எல்லா நாளும் முதியோர்களை பணியும் நாளாகவே உள்ளது.
எங்காவது வெளியூர் போனால்,பரீட்சை என்றால்,புதிதாக உடை அணிந்தால்எல்லாம் ’தாத்தா பாட்டியிடம் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கி கொள்’என்று நாம் சொல்வதை குழந்தைகள் கேட்கிறார்கள்.கேட்டு நடந்தார்கள்.முன் ஏர் செல்லும் பாதையில் பின் ஏர் செல்லும் என்பார்கள்.நாம் பெரியவர்களுக்கு மரியாதை கொடுத்தால் நம் குழந்தைகளும் கொடுப்பார்கள்.இது தானாய் இயல்பாய் திணிக்கப் படாமல் நடக்கும்.

இந்த காலகட்டத்தில் கூட்டுக் குடும்பமாய் இருக்க முடியவில்லை.ஆனால் பண்டிகை,விழாக்காலங்களில் வீட்டுப் பெரியவர்களிடம் அவர்கள் ஆலோசனை கேட்டு அவர்களுக்கு முன்னுரிமை கொடுத்து நடக்கிறோம்.

எனக்கு வயதாகும் போதுதான் என் பெற்றோர்களின் தவிப்பும் ஏக்கமும் புரிகிறது.அம்மா,
’நாலு நாளுக்கு ஒரு முறை கடிதம் எழுது’ என்பார்கள்.(தொலைபேசி,அலைபேசி எல்லாம் வரும் முன்)பிறகு போன் வந்தபின் அவர்களுக்கு வயதாகி காது கொஞ்சம் கேடகாமல் போனபோது போனில் அவர்கள் பேசுவார்கள்,என் நலம் விசாரித்து.’ மற்றதை உன் தம்பியிடம் சொல் நான் கேட்டுக் கொள்கிறேன்’ என்பார்கள். கம்யூட்டர் அப்போது இல்லை இருந்திருந்தால் எங்களைப் பார்த்து மகிழ்ந்து இருப்பார்கள்.அம்மாவுக்குத் தனியாகக் கடிதம் எழுதியிருக்கலாம் என்றும் தம்பியிடம் போனிலும் அம்மாவிடம் கடிதத்திலும் உரையாடி இருக்கலாம் என்றும் இப்போது நினைக்கிறேன். விஜய் டீ.வீயில்’ காப்பி வித் அனுவில்’ நிகழ்ச்சி முடிவில் ’யாரிடம் மன்னிப்புக் கேட்க நினைக்கிறீர்கள்?’என்பார்கள். நான் என் அம்மாவிடம் மன்னிப்பு கேட்க நினைக்கிறேன்-கடிதம் எழுதாமல் இருந்த்தற்கு.’யாருக்கு நன்றி சொல்ல விரும்புகிறீர்கள்?’ என்றால்-என் மாமியாருக்கு.முதுமையை அழகாய் ரசித்து வாழ்வதற்குக் கற்றுக் கொடுத்ததற்கு.

வார வாரம் என் வயதான மாமியாரிடம் தொலைபேசியில் பேசும் போது ,அவர்களின் உற்சாகம் எங்களையும் தொற்றிக் கொள்ளும்.மாமனார் பேசமாட்டார்கள் .அத்தையிடம் விசாரித்துக் கொள்வார்கள்.

நம் குழந்தைகளிடம் என்ன கேட்கிறோம்?அடிக்கடி பேசுங்கள் என்றுதான் . அது தான் எங்களைப் போன்ற முதியோரகளுக்கு ஊட்ட சத்து மாத்திரைகள்.மகனிடம் பேசும் போது பேரன் உடனே ஓடி வந்து மழலையில் ’தாத்தா’ என்று கூப்பிட்டு அவனது விளையாட்டு சாமான் மற்றும் அவன் பொருட்களை நம்மிடம் காட்டி என்னவோ பேசுகிறான்.கம்யூட்டரில் நுழைந்து நம்மைத் தொட முட்டி மோதும் போது நமக்கு நம்மை தேடுகிறானே என்ற மகிழ்ச்சியும்,அவனுடன் இருக்க முடியாத சூழ் நிலையை நினைத்து வருத்தமும் ஏற்படுகிறது.
மகள் வயிற்று பேரன் 18 நாள் விடுமுறைக்கு தாத்தா வீட்டுக்கு போகலாமா என்று மகளிடம் கேட்டதை கேட்கும் போது சந்தோஷமும் ஏற்படுகிறது.

இந்த காலகட்டத்தில் இவ்வளவுதான் முடியும். இதற்கு மேல் எதிர்பார்த்து வீணாய்க் கவலைப் பட்டுக் கொண்டு இருந்தால் நோய்க்கு இடம் கொடுத்து விடுவோம்.

குழந்தைகள் எங்கு இருந்தாலும் நலமாக வாழவேண்டும் என்ற பிரார்த்தனையைப் பெற்றோர்களும், பெற்றோர்கள் அங்கு நலமாய் இருக்க வேண்டும் என்ற பிரார்த்தனையைக் குழந்தைகளும் செய்வது தான் இந்த உலகத்தை வாழவைத்துக்கொண்டு இருக்கிறது.

முதியோர்கள் தங்களுக்கு என்று பயனுள்ள பொழுது போக்கை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.
வீட்டிலே முடங்கிக் கிடக்காமல், கோவில்,நண்பர்கள்,உறவினர்,என்று பார்ப்பதை வைத்துக் கொண்டு எப்போதும் தங்களைச் சுறுசுறுப்பாய் வைத்துக் கொண்டால் தேவை இல்லாத கவலைகள் அண்டாது.என் கணவர் ஒய்வு பெற்ற பின்னும் ஒரு கல்லூரியில் மாணவர்களுக்குப் பாடம் நடத்துகிறார்.அது அவர்களுக்கு மகிழ்ச்சியைத் தருகிறது.

நாளை காந்தியடிகளின் பிறந்தநாள். அவர் தன் வாழ்க்கையை நாட்டின் முன்னேற்றத்திற்கு அர்ப்பணித்தார்.காந்தியடிகள் நம் முன்னே அற்புதமான சுத்தம்,சுகாதாரம் நிறைந்த,மன நிறைவுள்ள வாழ்க்கை ஒன்றை வாழ்ந்து நமக்கு உதாரணமாக விட்டுச் சென்றார்.இயற்கையோடு இயைந்த எளிமையும்,அழகும் பொதிந்த வாழ்க்கை அவருடையது.இன்றைய உலகிற்கு கலங்கரை விளக்கம் காந்தியடிகளின் வாழ்க்கை.


முதியோர் தினத்தில் நமக்கு முன்னே வாழ்ந்து கொண்டு இருப்பவர்களின் வாழ்க்கை அனுபவத்தையும்,வாழ்ந்து முடிந்தவர்களின் வாழ்க்கை அனுபவத்தையும் நாம் பாடமாக எடுத்துக் கொண்டால் வாழ்க்கை இனிமையாக இருக்கும்.

முதுமைக் காலத்தை நடத்திச்செல்ல உடல் நலம் நன்றாக இருந்தால் தான் முடியும். அதற்கு,உடற்பயிற்சி,தியானம்,உணவுக் கட்டுப்பாடு,நல்ல உறக்கம், நல்ல பழக்க வழக்கம் நல்ல ஒய்வு அவசியம்.

தம்மிற் பெரியார் தமரா ஒழுகுதல்
வன்மையுள் எல்லாம் தலை.-குறள்

தம்மினும் அறிவில் மேம்பட்ட பெரியோரைச் சுற்றமாகக் கொண்டு அவர் வழியில் நடத்தல் ஒருவர்க்குரிய வலிமைகள் எல்லாவற்றுள்ளும் சிறந்த வலிமையாகும்.

முதியோர்கள் எல்லோரும் நோய் நொடி இல்லாமல் மகிழ்ச்சியாய் வாழ வாழ்த்துக்கள்.

வாழ்க வளமுடன்! வாழ்க நலமுடன்!

செவ்வாய், 21 செப்டம்பர், 2010

அன்பென்ற மழையிலே அகிலங்கள் நனையவே

நானும் என் கணவரும் கடந்த வாரம் உறவினர் திருமணத்திற்காக மதுரை போய் இருந்தோம்.
திருமண வீட்டில் மணமக்களுக்கு ஆசிர்வாதம் செய்ய அழகான குங்குமச் சிமிழில் அட்சதை அரிசியை போட்டு தந்தார்கள். இருந்த இடத்திலிருந்து அட்சதையை போடும் போது அது மற்றவர்கள் மேல் தான் விழும். மணமக்களுக்கு பரிசு பொருள் கொடுக்க போகும் போது அட்சதையைப் போட்டு வாழ்த்திவரலாம்.இன்னொரு வீட்டுக் கல்யாணத்தில் எல்லோரும்’அப்படியே இருங்கள் நீங்கள் இருக்கும் இடத்திற்கு மணமக்கள் வருவார்கள் அப்போது அட்சதைப் போட்டு ஆசிர்வாதம் செய்யுங்கள்’ என்றார்கள். இது நல்ல யோசனையாக இருந்தது. வயதானவர்கள் படி ஏறி கூட்டத்தில் இடித்துக் கொண்டு போகாமல் இருந்த இடத்தில் வாழ்த்த முடியும்.

திருமண வீட்டில் வெகு நாள் பார்க்காத உறவுகள், நண்பர்களைப் பார்த்து அன்பை பரிமாறி கொண்டபின் ’ஒரு வாரம் நீ இருந்து வா நான் அடுத்த ஞாயிறு வந்து அழைத்துப் போகிறேன்’ என்று என் தங்கை வீட்டில் விட்டு விட்டுப் ஊருக்கு போய்விட்டார்கள். எல்லோரும் 'மதுரைக்கு நல்ல மழை தான்' என்றார்கள். பின்ன, எப்போதும் விசேஷத்திற்கு வந்துவிட்டு ஒடினால், இப்படித்தான் சொல்வார்கள்.

அவர்கள் சொன்ன மாதிரி நல்ல மழை தான் பெய்தது. தல்லா குளப் பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் ஆகி மண்டல பூஜை நடந்து கொண்டு இருக்கிறது என்றார்கள். திருவிழா வேறு நடக்கிறது இன்று கருட வாகனம் என்றார்கள், அதற்குப் போனோம்.
மாலை 4.30க்கு போனதால் கூட்டம் இல்லை. கருட வாகனத்தில் அலங்காரம் செய்து கொண்டு இருந்தார்கள் பார்க்க முடியாத படி சுற்றிலும் திரைச்சீலையால் மறைத்து விட்டார்கள்.

உள்ளே பெருமாளை பார்த்து விட்டு வரும் போது என் அம்மாவின் நினைவு வந்து விட்டது. தங்கைகளும் நானும் அம்மாவுடன் மார்கழி மாதம் காலை 4.30க்கு பசுவும் கன்றும் வந்து பால் கறந்து பல்லாண்டு பாடி கதவைத் திறக்கும் போது சென்று வணங்கிய நினைவு வந்தது. சுடச் சுட வெண்பொங்கல் பெரிய நெல்லிக்காய் அளவுதான் தருவார்கள். வாங்கி உண்டு விட்டு அடுத்த கோவிலுக்கு அம்மாவின் ஓட்டத்திற்கு ஈடு கொடுத்துக் கொண்டு போவதைப்பற்றி பேசிக் கொண்டே ஆட்டோவில் ஏறினோம். அப்போது நரிமேட்டிலிருந்து நாங்கள் அம்மா,பக்கத்து வீட்டுக்காரர்கள் என்று பேசிக்கொண்டே நடந்தே போவோம். இப்போது ஆட்டோ,டாக்ஸி,கார் என்று போகிறோம், ஆனால் அப்போது உள்ள மகிழ்ச்சி இல்லை.

அடுத்து நாங்கள் சென்ற கோயில் ரிசர்வ்லைன் மாரியம்மன் கோவில் ஆகும்.
அந்த கோவிலில் இப்போது ஏகப்பட்ட மாற்றங்கள் .
கோவில் பக்கத்தில் உள்ள பழைய போலீஸ் ஓட்டுக் குடியிருப்புகள் அடுக்கு மாடி குடியிருப்புகளாய் மாறிவருகிறது. ஒரு சில பழைய வீடுகள் இன்னும் இருக்கின்றன. அதை அப்புறம் கட்டுவார்கள் என நினைக்கிறேன்.பக்கத்தில் இருக்கும் விளையாட்டு மைதானத்தில்
மார்கழி மாதம் போகும் போது காலை போலீஸ் மார்ச்பாஸ்ட் நடக்கும்,வாத்தியங்கள்(பியூகிள்) வாசித்துக் கொண்டு இருப்பார்கள். போலீஸ் பாரேட் நடப்பதைப், பார்க்க அழகாய் இருக்கும்.
மாரியம்மன் கோவிலில் சுமங்கலி பூஜை வெகு சிறப்பாய் நடந்ததாம் என் தங்கை சொன்னாள்.
தினம் அன்னதானம் நடக்கிறது .

அழகர் பூ பல்லாக்குப் பார்க்க மாரியம்மன் கோவில்தான் வருவோம். அழகான பூப் பல்லாக்கு கோவில் பக்கம் வரும் போது வாடிவிடும். தல்லாகுள பெருமாள் கோவில் அருகில் எதிர் சேவையின் போது வாணவேடிக்கை மிகவும் நன்றாக இருக்கும்.வித,விதமாய் வெகு நேரம் வாணவேடிக்கை நடக்கும்.

ஒவ்வொரு முறை போகும் போதும் நேரம் இருந்தால் மதுரை மீனாட்சியைப் பார்க்க போவோம்.கும்பாபிஷேகம் ஆனபின் போக முடியவில்லை.ஒரு முறை போனபோது முதல் ராஜகோபுர வாசலிருந்து கூட்டம். எப்படியும் பார்த்துவிட வேண்டும் என்று போனால் பொற்றாமரைக் குளம் வரைதான் போக முடிந்தது. அதன் பின் தடுப்பு மூங்கில்கழியை தாண்டி
காவலுக்கு நின்ற பெண் போலீஸ் அதிகாரியிடம் சொல்லிவிட்டு ‘சுவாமியைப் பார்க்க போகிறோம் மீனாட்சியை பார்க்க முடியாது ஒரே கூட்டமாய் இருக்கிறது’ என்றோம் அந்த பெண் போலீஸ் ’மீனாட்சியைப் பார்த்தாலும் சுவாமியைப் பார்த்தாலும் ஒன்று தான் போங்க,போங்க’ என்றார்கள்.

இந்தமுறை எனக்கு இரண்டு முறை மீனாட்சிஅம்மனைப் பார்க்கும் பாக்கியம் கிடைத்து.
புதன்கிழமை,சனிக்கிழமை என்று ஒரே வாரத்தில் இரண்டு முறை பார்த்து விட்டேன்.

என் தங்கையின் பெண் ’செவ்வாய்,வெள்ளி,கூட்டமாய் இருக்கும் அப்போது போககூடாது பெரியம்மா! புதன்கிழமை போகலாம்.’ என்றாள். எனக்கும் அன்று பிறந்தநாள். அம்மாவிடம் ஆசி பெற்று வரலாம் என்று போனோம். இலவசமாய் செருப்பு பாதுகாக்க அழகான கட்டிடங்கள் உள்ளது. நான்கு வீதிகளிலும் சுற்றிவந்து கோபுரங்களைத் தரிசிக்க பேட்டரி கார் வசதி உள்ளது.வேறு வாகனக்களுக்கு அங்கு அனுமதி இல்லை.

அம்மன் சன்னதிக்கு முதலில் போனோம். ஊஞ்சல் பக்கம் அம்மனின் சேலைகள் ஏலம் விட்டுக் கொண்டு இருந்தார்கள். சிறிது நேரம் அதை வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தோம் ஏலத்தில் பத்து பத்து ரூபாயாகத்தான் ஏற்ற வேண்டுமாம். அம்மனின் பட்டுப்புடவைகள் என்னவாயிற்று? எல்லாம் பாலியஸ்டர் பட்டு புடவைகள். ஒரு புடவைக்கும் அடுத்தபுடவைக்கும் ஏலம் விட நேரம் ஆனது. கூடி இருப்பவர்கள் சீக்கிரம் ஏலம் விட சொன்னார்கள். மடி கணினியை வைத்துக் கொண்டு புடவையின் எண், விலை பார்த்து ஏலம் விட்டுக் கொண்டு இருந்தார்கள். நேரம் ஆகிவிட்டதால் ஒரு அம்மா கன்னத்தில் கை வைத்துக் கொண்டு இருந்தார்கள் போலும் ஏலம் விடுபவர் மைக்கில் கன்னத்தில் இருந்து கையை எடுங்கள் அல்லது இடத்தைவிட்டு நகருங்கள் என்று அதட்டிக்கொண்டு இருந்தார்.

பிள்ளையாருக்குப் பக்கத்திலிருந்து வரிசை ஆரம்பித்து விடுகிறது. கூட்டம் அவ்வளவாய் இல்லை. விறு,விறு என்று நகர்ந்து விட்டது கூட்டம்,15ரூபாய் கட்டணம் ஒரு பக்கம்,இலவச வரிசை ஒரு பக்கம் என்று போனதால் நெரிசல் இல்லாமல் பார்க்க முடிகிறது. உள்ளே போகும் அர்ச்சகர் கொஞ்சம் விலகி நின்றால் இன்னும் சீக்கிரம் பார்க்கலாம். அம்மன் சன்னதியை விட்டு வெளியே வந்தால் என் தங்கை பெண், 'பெரியம்மா சுழலும் லிங்கம் பார்த்து இருக்கிறீர்களா?’ என்று கேட்டாள். ’பார்த்தது இல்லையே எங்கு இருக்கு’ என்று கேட்டேன் ’மேலே அப்படியே விதானத்தை பாருங்கள்’ என்றாள். அண்ணாந்து பார்த்தால் லிங்கம் நம்மை நோக்கி உள்ளது .நாம் எந்தப்பக்கம் நின்று பார்த்தாலும் ஆவுடையாரின் அபிஷேகத்தண்ணீர் விழும் பகுதி நம் பக்கம் நேராய்த் தோன்றுவதைப்போல் அற்புதமாய் வரைந்த அந்த ஒவியர் பாராட்டப்பட வேண்டியவரே.

அடுத்து சோமசுந்தரரைப் பார்த்தோம். நல்ல அலங்காரம் செய்து வைத்து இருந்தார்கள், சரவிளக்கு வரிசையாக ஜெகசோதியாக பிரகாசமாய் இருந்தது. அம்மன் சன்னதியிலும் இப்படி பிரகாசமாய் விளக்கு இருந்தால் அம்மனை இன்னும் திருப்தியாய்ப் பார்த்து மக்கள் விரைவாய்க் கண்டு களித்துச் செல்வார்கள்.

புது மண்டபத்தில் எங்கள் வீட்டுக் கொலுவிற்காகச் சில அழகு பொருட்கள் வாங்கி வீடு வந்தோம், புரட்டாசி முதல் சனிக்கிழமை என் கணவர் ஊரிலிருந்து வந்தவுடன்,
’ நான் மீனாட்சி அம்மன் கோவிலுக்குப் போனேனே கூட்டம் இல்லாமல் தரிசனம் செய்தேன்’ என்றவுடன் அவர்களும் இன்று போகலாம் கூடல் நகர் பெருமாள் கோவிலில் தான் இன்று கூட்டம் இருக்கும்’ என்று சொன்னார்கள். கிளம்பினால் நல்ல மழை! ஆட்டோவில் போனாலும் தண்ணீர்! வண்டிக்குள்ளும்! மதுரையில் மழைபெய்தால் சாலை முழுவதும் தண்ணீர் தேங்கி நிற்கும்.
கீழவாசல் எல்லாம் தண்ணீர்! வண்டிகள் தண்ணீருக்குள் மாட்டிக்கொண்டு பரிதாபமாய் நின்று கொண்டு இருந்தன. அம்மன் சன்னதிவாசலிலும் தண்ணீர் நின்றது. மழை நீர் வடிகால் வசதி சரியில்லை.

எனக்கு, கணவருக்கு சீக்கிரம் சுழலும் லிங்கத்தை காட்ட ஆசை. 15 ரூபாய் டிக்கட் எடுத்து அம்மனை தரிசனம் செய்து விட்டு வெளியில் வந்து சுழலும் லிங்கத்தைக் காட்டினேன் அவர்களும் ஆச்சிரியப்பட்டு ஓவியரைப் பாரட்டினார்கள். பின் சுவாமி சன்னதிக்கு வந்தால் என் கணவர் மேலே பார்! என்று எனக்கு சுழலும் லிங்கம் காட்டினார்கள்.சுவாமி சன்னதி வாயிலில் மேல் விதானத்தில் இரண்டு ஒரங்களிலும் சுழலும் லிங்கம் வரைந்து இருக்கிறார்கள். நாங்கள் அண்ணாந்து பார்ப்பதைப் பார்த்து வெளியூர்களில் வந்த அன்பர்களும் என்ன? என்ன ?என்று கேட்டு எல்லோரும் பார்த்து பரவசப் பட்டார்கள்.

போனமுறை பார்க்க முடியவில்லை. வர வர மீனாட்சி அம்மன் கோவிலும் திருப்பதி பெருமாள்கோயில் மாதிரி ஆகிவிட்டது என்று புலம்பிக் கொண்டு இருந்தது சொக்கன், சொக்கி காதில் விழுந்து இந்த முறை நல்ல காட்சி தந்தார்கள் சொக்கனும் சொக்கியும்.

மதுரையில் தண்ணீர் கஷ்டம் உள்ளது. குடி தண்ணீருக்கு சில வீடுகளில் மோட்டார் போட்டு பிடிப்பதால் சில வீடுகளுக்கு தண்ணீர் வருவது இல்லை.புகார் செய்தால் எடுப்பது போல் எடுத்து விட்டு மறுபடியும் போட்டு கொள்கிறார்கள் என்ன செய்வது! அவர்களாய் திருந்தினால் தான் உண்டு.

இந்த மழை காலத்தில் மழை நீரை நல்ல முறையில் சேமித்து தண்ணீர் பஞ்சத்தை விரட்ட வேண்டும்.வைகையில் நீர் நிறைய வேண்டும்.மக்கள் கஷ்டம் தீர வேண்டும் என்று பிட்டுக்கு மண் சுமந்தவனிடம் வேண்டிவந்துள்ளேன்.

கோவில்பட்டியில் சித்தப்பாவீட்டிற்கு தங்கை,தம்பியோடு போய்வந்தேன்.சித்தப்பா வீட்டீல் துக்கம் நிகழ்ந்து இருந்தாலும்,அதை மறந்து அண்ணன் குழந்தைகளை அன்போடு உபசரித்தார்கள். சித்தப்பாவின் உருவில் என் அப்பாவை கண்டேன்.

நான் ஒரு வாரமும் அன்பு மழையில் நனைந்து வந்தேன். தம்பி, தங்கைகள்வீடு, மாமாபெண் வீடு, தங்கை மகள் வீடு, என் மகனுக்கு பெண் எடுத்த வீடு என்று போய் புது தெம்பைப் பெற்று வந்துள்ளேன். இப்போது
’பெரியம்மா!’,’அத்தை!’ என்று குழந்தைகளின் அன்புக் குரல் காதில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது.

ஞாயிறு, 5 செப்டம்பர், 2010

குரு வணக்கம்.

குரு வணக்கம்
--------------
தந்தைதா யாவானும் சார்கதியிங் காவானும்
அந்தமிலா இன்பநமக் காவானும்-எந்தமுயிர்
தானாகு வானும் சரணாகு வானும் அருட்
கோனாகு வானும் குரு.

அண்ணலே,நீ அருட்குருவாக வந்து என் உள்ளமாகிய கல்லைப் பிசைந்து தெய்வக் கனியாக மாற்றி அமைக்க வல்லவன். என் உடல்,பொருள்,ஆவியெல்லாம் உனக்கே உரியனவாகும்.

எருவை, செடியானது தன் மயமாக்குவது போன்று குரு சிஷ்யனைத் தன் மயம் ஆக்குகிறார். அவர் கருணையே வடிவெடுத்தவர்.
கைம்மாறு கருதாத பேரியல்பை அவரிடம் காணலாம்.மனிதனைத் தெயவமாக மாற்றியமைப்பவரைத் தெய்வமாகக் கருதாது வேறு எங்ஙனம் கருதுவது?
-சுவாமி சித்பவானந்தர்.

ஒவ்வொருவர் வாழ்விலும் குருவினுடைய பார்வை, குருவினுடைய நினைவு குருவினுடைய சொல் ஒரு மனிதனுக்குத் தேவையாக இருக்கிறது.
இதை தான்” குரு தானாக வருவார்” என்று அருள் தந்தை கூறுகிறார்--

//குரு என்றால் யார்? குரு என்றால் தன்னை அறிந்தவர். அவருடைய உதவி இவனுக்குக் கிடைப்பதற்கு இங்கே அவன் ஒரு நிமிடமாகிலும் சிந்தித்திருக்க வேண்டும்;தேடி இருக்க வேண்டும். நான் பிறந்து வந்துள்ளேனே,என்னைப் பற்றி எதுவுமே தெரியவில்லையே,தெரிந்து கொள்ள வேண்டும், என்று இவனாக நினைத்திருந்தாலும்,சரி, அல்லது இவனுடைய பெற்றோர்கள் நினைத்து இருந்தாலும் சரி,அந்த எண்ணம் நிறைவேறாமல் தொடர்ந்து வந்து இருந்தாலும் சரி அது கட்டாயம் அதற்குரிய ஒரு குருவைத் தேடிக்கொடுத்து விடும். வெளியிலே இருந்து வந்த ஒரு உருவத்தை குரு என்று சொல்வதை விட,ஒரு மனிதனுடைய கர்மா,அவனுடைய action, அவனுடைய சிந்தனை,அவனுடைய தெளிவு,அவனுடைய அறிவு வேகம் அவனுக்கு உயர்வு நாட்டத்தை கொடுத்து விடுகிறது;அதுவே குருவையும் கொண்டு வந்து கொடுத்து விடும் காலத்தாலே. அந்த குருவினுடைய பார்வை,சொல் இவைகள் எல்லாம் சாதகனுடைய உள்ளுணர்வைத் தூண்டி விடுகிறது.//

அறிவே தான் தெய்வமென்றார் தாயுமானார்
அகத்ததுதான் மெய்ப்பொருள் என்றெடுத்துக்காட்டி
அறிவதனை அறிவித்தார் திருவள்ளுவர்
அவ்வறிவை அறிவதற்கு முறைகள் சொன்னார்
அறிஞ்ர் திருமூலர் அவ்வறிவில் ஆழ்ந்து
ஆனந்தக் கவியாத்தார் இராமலிங்கர்
அறிவில் அறிவாய் நிலைத்து அறம்வகுத்தோர்
அதை வாழ்ந்து காட்டினோர்நினைவு கூர்வாம்.
-அருள்தந்தை.


புருவத்திடை உந்தன் பூவிரால் தொட்டு
எந்தன் உயிருணர்த்தி
புன்செயல்கள் பதிவழிந்து,பூர்வநிலை அறிவறிய
துரியம் தந்து
கருவறிந்து அகத்தவத்தால் களங்கங்கள் போகப்
பெருங்களத் தமர்த்தி
கருத்துடனே விளைவறிந்து ஐந்து புலனையாளுங்
கலை போதித்து
உருவத்தில் உயிரை,உயிர்க்குள் உள்ளமெய்ப்
பொருளை அறிவாய்க்காட்டி
ஒழுக்கத்தால் உலகினையே நட்புக் கொள்ளும்
அன்புநெறி விளங்கவைத்து
திருத்தமொடு காயகற்பம்,சீர்கர்மயோகம்,
உடற்பயிற்சி தந்து
சிந்தனையை,உடல்நலத்தைச் சீரமைத்து உய்வித்த
குருவே வாழ்க.


எவரொருவர் குருவை மதிக்கிறார்களோ அவர்கள் தரத்தில் உயர்ந்து பிறவிப் பயனை அடைவார்கள்.

திங்கள், 30 ஆகஸ்ட், 2010

நீ பாதி நான் பாதி

மனைவி என்பவள் சரி சமம் ஆனவள் என்பதைக் காட்டவே அர்த்த நாரீஸ்வர் தோற்றத்தை இறைவன் காட்டினார் என்று சொல்வார்கள் நம் முன்னோர்கள்.

ஒரு மனிதன் தனது வாழ்நாள் முழுவதும் பெற்ற தாய்,உடன்பிறந்த சகோதரி, கட்டிய மனைவி,பெற்றெடுத்த மகள் என்று பெண்ணைச் சார்ந்தே வாழ்கிறான்.ஒருவனுக்கு உயிரையும்,உடலையும் தந்து உலவ விடுபவள் தாய்.அந்தத் தாய் தன்னை மாதிரி தன் மகனைப் பாதுகாத்துப் பேண இன்னொரு தாய் போன்ற பெண்ணைத் தன் மகளுடன் இணைக்கிறாள். ’மனைவி அமைவது எல்லாம் இறைவன் கொடுத்த வரம்’ என்பது போல் வரும் பெண் வாழ்க்கையைச் சொர்க்கமாகவும் மாற்றலாம்,நரகமாகவும் மாற்றலாம்.

அதனால் தான் தெய்வப்புலவர் திருவள்ளுவர் வாழ்க்கைத் துணை நலம் என்றார். நல்ல பெண் வாழ்க்கைத் துணையாக அமைந்தால் நலம். அல்லாவிட்டால் பிணி.

ஒரு ஆணின் வாழ்க்கையில் பெண் வாழ்க்கைத் துணையாக வந்த பிறகே வாழ்க்கைப் பயணம் அர்த்தமாகிறது.

குடும்ப வாழ்க்கையிலே,இன்ப,துன்பங்களில் பங்கு கொண்டு வாழ்வை நல்லபடியாக நடத்த கணவன் மனைவி உறவு சீராக இருக்க வேண்டும்.இருவரும் ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்து வாழ வேண்டும்.கருத்து வேறுபாடு பிணக்கு இருந்தால் ஒருவருக்கு ஒருவர் பேசி அவர்களே தீர்த்துக் கொள்ள வேண்டும்.இருவரும் நல்ல நட்போடும் மாறாத அன்போடும் இருந்தால் வாழ்க்கை நலமாக இருக்கும்.

தரமில்லாத மனிதனை சரிபடுத்தி,நிலையில்லாத மனிதனை நெறிப்படுத்தி கணவனை நல்லவனாக,வல்லவனாக ,எல்லாம் உள்ளவனாக மாற்ற நல்ல மனைவியால் தான் முடியும்.

இயற்கை தனக்களித்த பொறுமை,தியாகம்,இரக்கம்,தாய்மை போன்ற குணங்களால் கணவனுக்கு எல்லாமே தானாகி அவனுக்குச் சிறப்பையும் மகிழ்ச்சியையும் நல்ல மனைவியால் தான் அளிக்க முடியும்.இல்லறமாகிய நல்லறத்தைச் சிறப்பிக்க முடியும்.


இப்படி எல்லாமாகிய மனைவியைக் கணவன் போற்ற வேண்டும். அதற்கு ஒரு நாள் தான்
‘ மனைவி வேட்பு நாள்’என்கிறார் அருள் தந்தை வேதாத்திரி.

சுமார் 20 ஆண்டு காலமாக வளர்த்து ஆளாக்கிய பிறந்தகத்தை சுற்றத்தாரை,பிறந்த ஊரைப் பிரிந்து, தன்னை நம்பி இல்லறம் ஆற்ற வந்த மனைவியை என்றென்றும் போற்ற வேண்டும். அவர்களின் பெருமையை உணர வேண்டுமென்று அருட்தந்தை அவர்கள் தன் மனைவி அன்னை லோகாம்மாள் அவர்களின் பிறந்த நாளான ஆகஸ்ட் 30ம் தேதியை மனைவி வேட்பு விழாவாக-Wife's Appreciation Day- அறிவித்தார்கள்.

//உலகில் இதுவரை ’தந்தைநாள்’ ,தாயார் நாள், தனித்தனியே கொண்டாடுகிறார்கள்.
சுமங்கலி பூஜை என்ற அளவிலே கணவன் வேட்பு நாளும் கொண்டாடுகிறார்கள்.
மனைவி வேட்பு நாள் எந்த ஊரிலேயும் இல்லை. இது ஒரு நன்றி கெட்டதனம் இல்லையா?
இது என் மனதை உறுத்தி கொண்டே இருந்தது.ஆனாலும் ஒருவர் தலையிட்டு செய்தால் மட்டும் போதாது. இது நாடு முழுவதும் ஆண் மக்கள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும் பெண்மையின் பெருமையை உணர வேண்டும் என்ற மனதோடு ஆராய்ச்சி செய்த போது இந்த ஆண்டு என் மனைவியினுடைய (அருள் அன்னை லோகாம்பாள்) பிறந்த நாள் 30.8.ல் வந்தது. அன்பர்களிடம் சொன்னேன். என் மனைவியின் பிறந்த நாளையே வைத்து தொடங்கி மனைவி நல வேட்பு நாள் கொண்டாடலாம். இதையே வைத்துக் கொண்டு,இது முதல் கொண்டு ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 30ஆவது நாளை மனைவி வேட்பு நாளாகக் கொண்டாடுவது நம் சங்கத்தின் வழக்கமாக வரட்டும். பிறகு உலக நாடுகளில் பரவட்டும் என்றேன். ஆண்களும், பெண்களும் அதை ஏற்றுக் கொண்டு பல இடங்களில் கொண்டாடுகிறார்கள்.நீங்களும் உங்கள் வாழ்க்கைத துணையை நன்றியோடு வாழ்த்தி இக் கவியைச் சொல்லி மகிழுங்கள்:-

பெற்றோரைப் பிறந்தகத்தைப் பிறந்த ஊரை விட்டுப்
பிரிந்து வந்து, பெருநோக்கில் கடமையறம் ஆற்றப்
பற்றற்ற துறவியெனக் குடும்பத் தொண்டேற்றுப்
பண்பாட்டின் அடிப்படையில் எனைப் பதியாய்க் கொண்டு என்
நற்றவத்தால் என் வாழ்க்கைத் துணையாகிப் பெண்மை
நல நோக்கில் அன்போடு கருணை இவை கொண்டு
மற்றவர்க்கும் தொண்டாற்றும் மாண்புமிக்க எந்தன்
மனைவியை நான் மதிக்கின்றேன் வாழ்த்தி மகிழ்கின்றேன்.

-அருள் தந்தை.//

இந்த மனைவி வேட்பு நாளில் இக் கவிதையைக் கணவன் கூறி,மலர் போன்ற மென்மையான மனத்தையுடைய மனைவிக்கு மலரினை அளிக்கிறான்.தியாக உள்ளம் படைத்த மனைவி உள்ளப் பூரிப்போடு உவகையோடும் உள்ளக் கனியாகத திகழ்கின்ற கணவனுக்கு ‘கனியைக்’ கொடுக்கிறாள்.இப்படி இந்த ஒரு நாள் மட்டும் அல்லாமல் என்றென்றும் மனைவியை மதித்து போறற வேண்டும் என்பது தான் அருட் தந்தை அவர்களின் மனைவி நல வேட்பு விழாவின் நோக்கமாகும்.


இன்ப துன்பத்தில் சரிபாதியை ஏற்றுக்கொள்ளும் மனைவியைப் போற்றிப் பாதுகாத்து வந்தால் வீடு நலம் பெறும்.

பெண்களுடைய முன்னேற்றம் தான் குழந்தைகள் முன்னேற்றம்.பெண்களுடைய முன்னேற்றம் தான் குடும்ப முன்னேற்றம்.பெண்களுடைய முன்னேற்றம் தான் நாட்டு முன்னேற்றம்.

எந்த வீட்டில்,நாட்டில் பெண் மதிக்கப் படுகிறாளோ அந்த நாடும்,வீடும் முன்னேறும் எங்கெல்லாம் பெண் இழிவு படுத்தப் படுகிறாளோ அங்கு முன்னேற்றம் தடை படும்.

உயிரில் கலந்து,உணர்வில் உறைந்து,நினைவில் நிறைந்து,இதயம்புகுந்த உறவே மனைவி.

அமைதியான சுற்றுச் சூழலில் அமைந்த இல்லம்,இறையருளால் அமைந்த பெற்றோர்கள்,வாழ்நாள் முழுவதும் ஈருடல் ஓர் உயிராக இணைந்த நல்வாழ்க்கைத் துணை,
அறிவிலும் ஒழுக்கத்திலும் சிறந்த மக்கள் செல்வம்,இனிய நட்புடன் கூடிய உறுதியான,உண்மையான் குடும்ப உறுப்பினர்கள், நிறைவான வாழ்க்கை வசதிகள்,சுற்றத்தோடு கூடிய இனிய உறவினர்கள்,சமுதாயத்தில் நன்மதிப்பு இவற்றுடன்
இல்லறத்தில் கூடி மகிழ்ந்து,இறைநிலையோடு இணைந்து வாழும் குடும்பமே இனிய குடும்பமாகும்.

//எல்லையற்ற ஆற்றலுள்ள இறைவன் திருவுள்ள மென்ன
எவ்வுயிரும் தோன்றுவதற்கு ஏற்றதொரு திருவழியாய்
வல்லமையாய்ப் பெண்ணினத்தை வடிவமைத்தான் -அற்புதமே
வாழ்ந்து வரும் மக்களில் இவ்வளமறிந்தோர் எத்தனை பேர்?//

என்பது அருட்தந்தையின் கேள்வி.

கணவன் மனைவி சிறப்பை உணர்ந்து ஒருவருக்கு ஒருவர் மதித்து வாழ வேண்டும்.

வீட்டின் விரிவே வியனுலகம் ஆதலின்
வீட்டறத்தில் வெற்றி காண்-என்பர்.

கணவன் மனைவி உறவை உயிராக மதித்து அன்பை வளர்த்து அறவழியே வாழ்வோம்.

புதன், 25 ஆகஸ்ட், 2010

தட்டிக் கொடுக்கும் தேவதை











மாதம் இருமுறை வரும் பெண்கள் பத்திரிக்கை "தேவதையில்" என் வலைபக்கம் வந்துள்ளது.அந்த மகிழ்ச்சியை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.(ஆகஸ்ட் 16-31)

என் பதிவுகளை படித்து அதை அழகாக தொகுத்து வழங்கிய நவநீதன் அவர்களுக்கு நன்றி.

//வலைப் பதிவு எனப்படும் திறந்தவெளியில் தங்கள் எண்ணங்களை கொட்டி வைக்கும் பெண்களை தட்டிக் கொடுக்கும் பகுதி இது//

வலையில் எழுதும் என் போன்றவர்களுக்கு இது உற்சாகத்தை தரும்.மேலும் எழுத தூண்டு கோலாய் அமையும்.

ஒரு காலத்தில் குறிப்பிட்ட இரண்டு மாத ,வார இதழகள் வாங்கி படிப்போம்,அதன் பிறகு எல்லா மாத, வார இதழ்களை படிக்கும் ஆவலில் வீட்டுக்கு தினம் படித்து விட்டு திருப்பி கொடுப்பவர்களிடம் வாங்கி படித்தோம். இப்போது டீ.வி வந்த பின் பத்திரிக்கை படிப்பவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இருந்தாலும் புதிதாக பத்திரிக்கை வந்து கொண்டு தான் இருக்கு.அதில் ’வளம் பெற வரம் தரும் தேவதை’ என்று இந்த பத்திரிக்கை வந்துள்ளது.அதில் ’வலையோடு விளையாடு’ எனற பகுதியில் தான் நமக்காக் இரண்டு பக்கங்களை அளித்து நம்மை மகிழ்ச்சி படுத்துகிறார்கள்.

பலதரப்பட்ட விருப்புகளை கொண்டவர்களின் எண்ணத்தை பூர்த்தி செய்கிறது தேவதை.

குழந்தைகள்,இளம் வயதினர்,நடுவயதினர்,வயதானவர்கள் என்று எல்லோர்க்கும் நிறைவு அளிக்கிறது.

தேவதைக்கு ஆண்டு ஒன்றாம். அதை வாழ்த்துவோம்,மேலும் வளர.
நான் இந்த பதிவுலத்திற்கு வந்தும் 1 ஆண்டு ஆகிறது. உங்கள் எல்லோர் ஆதரவும்
எப்போதும் வேண்டும். என்னை உற்சாகப் படுத்தி எழுத தூண்டும் வலை உலக நண்பர்கள் அனைவருக்கும் நன்றி.

தேவதை இதழில் நான் வந்து இருப்பதை எனக்கு முதலில் சொன்ன வல்லி அக்காவிற்கு நன்றி.

தேவதையில் வந்த என் பக்கத்தை தெளிவாக்கி என் வலைபக்கத்தில் போடதந்த ராமலக்ஷ்மிக்கு நன்றி.

வெள்ளி, 30 ஜூலை, 2010

எண்ணம் முழுதும் கண்ணன்

நியூஜெர்சியிலிருந்து வந்து ஒரு மாதம் ஓடிவிட்டது.அங்கு இருந்த 75 நாட்களும் சிட்டாய் பறந்தன.சின்ன கண்ணனுடன் விளையாட்டு,இடங்களை சுற்றிப் பார்த்தல் என்று நாட்கள் இறக்கைக்கட்டிப் பறந்தன்.

சின்னகண்ணனை பிரிந்து வந்து இருந்தால் மிகவும் வருத்தப் பட்டு இருப்போம். அவன் எங்களுடன் வந்ததால் மகிழ்ச்சி இரண்டு பங்கு ஆனது.

இங்கு கோவையில் சின்னகண்ணனின் பிறந்தநாள்,பழனியில் முடி இறக்குதல்,காது குத்து எல்லாம் நல்லபடியாக இறைவன் அருளால் நன்றாக நடந்தது.

உறவினர் வருகை, நண்பர்கள் வருகை,அக்கம் பக்கத்தில் பேரனை பார்க்க வருதல் ,கோவில் பிரத்தனைகள் என்று நாட்கள் நிமிஷமாய் கரைந்து விட்டது. மகனின் விடுமுறை முடிந்து விட்டது.மகனை பிரியமுடியாமல் பிரிந்து ஊருக்கு சென்றான்.

மருமகளும்,பேரனும் எங்களுடன் சிறிது நாட்கள் இருந்து, இப்போது அம்மாபாட்டியிடம் தன் குறும்புகளை காட்ட போயிருக்கிறான்.அவனுடைய சிரிப்பு, பேச்சு,குறும்புகள் மனதை ஆக்கிரமித்து உள்ளது.

விளையாட்டு சாமான்களை தூக்கி பின் பக்கம் வீசும் விளையாட்டு பிடிக்கும் அவனுக்கு.
கீகொடுத்து பொம்மைகளை விட்டால் வேகமாய் வந்து அதை எடுத்து பின் பக்கமாய் தூக்கி போடுவார்.அதனால் நன்மையும் ஏற்பட்டது பின்பக்கம் தூக்கி போடும் பழக்கம் இருந்ததால்
கண்ணாடி கிண்ணத்தை பின் பக்கம் தூக்கி போட்டதால் கையில் குத்தவில்லை.முன் பக்கம் வைத்து தட்டி இருந்தால் கையில் குத்தி இருக்கும்.

துணி மடித்து வைத்து இருந்தால் அதை இழுத்து போட்டு விட்டு சிரிப்பான்.புத்தகங்கள் அடிக்கி வைத்து இருந்தால் கலைத்து விடுவான்.கலைவாணர் மாதிரி விதவிதமாய் சிரிப்பான்.
முடி இறக்கும் போது யாராவது என்னை காப்பற்றுங்களேன் என்பது போல் எல்லோரையும் பார்த்து அழுததும்,காது குத்தும் போதும் எப்படி அழுவோனோ என்று நினைத்தேன்.ஆனால் காது குத்துபவர் நல்ல திறமைசாலி.காது குத்தும் போது அழசந்தர்ப்பம் கொடுக்காமல் நிமிஷமாய் நேர்த்தியாய் காது குத்தி விட்டார்.

மொட்டை அடித்தபின் எங்கேயும் இடித்துக் கொள்ளாமல் பார்த்து கொள்வதே பெரியவிஷயமாய்
இருந்தது.முடி எங்கே போச்சு என்றால் தலையை தொட்டுப் பார்த்து சிரித்துக் கொள்வான்.
ஒட்டலில் சாப்பிடப் போனபோது பரிமாறுபவர் முடி எங்ககண்ணு சாமிக்கு கொடுத்தீர்களா என்று கேட்டபோது எதோ புரிந்த மாதிரி சிரிப்பு. அவர் குழந்தைக்கு வேற்று முகமே இல்லை
என்று திருஷ்டி முறித்தார்.

அத்தையின் நிச்சியத்தார்த்த விழாவில் இவர்தான்(குட்டி கண்ணன் தான்) திருமண பட்டோலை வாசித்தார். என் மகளின் மாமனார் நல்ல குரல்வளம் உள்ளவர் அவரை மூகூர்த்த பட்டோலை வாசிக்க சொன்னர்கள் அவர்களுடன் இவனும் சேர்ந்து வாசித்தான் அமைதியாய் இருக்கும் போது இவன் பேசியதால் அரங்கம் முழுதும் மகிழ்ச்சி ஆரவாரம்.
நீயும் உன் அத்தை திருமண பட்டோலை வாசிக்கிறாயா என்று எல்லோரும் அவனிடம் கேட்டு ஒரே சிரிப்பு.எல்லா திருமண உறுதி செய்யும் வீட்டிலும் என் கணவர்தான் வாசிப்பார். விடுமுறை இல்லாத காரணத்தால் அவர்கள் வரவில்லை, அதை பேரன் வாசித்து நிறைவு செய்து விட்டான்.
தாத்தாவிடம் உங்களுக்கு பதிலாய் உங்கள் பேரன் வாசித்தான் என்று சொன்னவுடன் அவர்களுக்கும் எல்லை இல்லா மகிழ்ச்சி.

இடமாற்றங்களாலும்,நடப்பதற்கு ஏற்றவாறு உடல் மெலிய ஏற்படும் வயிற்றுப் போக்குக்கு கோவையில் எங்கள் குடும்ப வைத்தியரிடம் போனபோது அவர் தொட்டவுடன் ஊசிதான் போடபோகிறார் என்று ஒரே அழுகை.ஊரில் தடுப்பு ஊசிக்கு மட்டும் தான் டாகடரிட்ம் போய் ஒரே சமயத்தில் இரண்டு ஊசிகள் போட்டு வருவதால் அவர் தொட்டவுடனேயே அழுகை.அங்கு காத்திருந்தபோது அங்கு மாட்டியிருந்த ’மருத்துவ பிரத்தனை’
என்ற சாட் பார்த்தேன். அது நன்றாக இருந்த்தது அதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

மருத்துவபிரார்த்தனை
-------------------
//ஆண்டவனே என்னுடைய நோயாளிக்ளிடம் உனது நோய் தீர்க்கும் சக்தியை செலுத்துவாய்.
எல்லாம் வல்ல இறைவனே பொறுக்கமுடியாத வலியினால் வருவோரைச் சந்திப்பதே எனது வாழ்க்கை பணியாக உள்ளது.சொல்ல போனால் சோகமான சூழலே இந்த சோதனையைய்
எதிர் கொள்ள செய்திருக்கிறது.

ஆனால் இந்த சோகத்திலும் ஒரு சுகம் என்ன வென்றால் அவர்களது துயரத்தை துடைப்பதற்கு எனக்கு அருமையானதொரு வாய்ப்பை நீ அளித்திருப்பதுதான்.

இந்த பெரும் பொறுப்பை எனது தோள்கள் மீது சுமத்தியிருக்கும் நீ அதை நிறைவேற்றுவதற்கான துணிவை தந்துருக்கிறாய்.

அந்த பணியை செவ்வனே செய்து முடிக்கும் சக்தியை இறைவா நீ எனக்கு அருள்வாய்.
ஆனால் எப்போதும் உன்னிடத்தில் நான் அசையாத நம்பிக்கை கொண்டிருக்க வேண்டும்.
உண்மையிலேயே நீதான் நோய் தீர்க்கும் மருத்துவர் என்பதையும் நலவாழ்வுக்கு ஆதாரம் என்பதையும் உன்னுடைய அபார கருணை பாயும் வழியாகத் தான் நான் இருக்கிறேன் என்பதையும் நான் மறவாமல் இருக்க வேண்டும்.//

அந்த டாக்டரிடம் என் மாமனாருக்கு நல்ல நம்பிக்கை. மாமனாரின் நூற்றாண்டு விழாவில் அவருக்கு பொன்னாடை போற்றி கவுரவப் படுத்தினார்கள்.அவரைப் பற்றி அன்று வெளியிட்ட விழாமலரில் குறிப்பிட்டார்கள் .


இப்படி எண்ணம் எல்லாம் செல்லகுட்டியின் நினைவுதான். இங்கேயே இருக்க ஆசை தான்
அந்த பாட்டி வீட்டிலும் போய் இருக்க வேண்டாமா? அவர்களும் அவர்கள் பிள்ளை குறும்புகளை ரசிக்க வேண்டாமா? அங்கும் ஒரு பெரிய தாத்தா இருக்கிறார்கள். அவனின் வருகையால் தன் உடல் துன்பத்தை மறந்து சிரித்து வருகிறார்கள். கோவை பெரிய தாத்தாவின் கைத்தடியை பிடித்து எழுந்து நின்று அவர்களைப் பார்த்து சிரிப்பான் இரண்டு குழந்தைகள் சிரிப்பது போல இருக்கும்.அவர்களிடமும் ஒளிந்து விளையாடினான்.

அந்த பாட்டி வீட்டில் போய் சமையல் அறையில் அரிசி டப்பாவை திறந்து அதை அள்ளி கீழே போட்டு விளையாடுகிறானாம். தண்ணீர் டிரம்மை திறந்து விடுகிறானாம். வாசல் திறந்து இருந்தால் வெளியே போய் விடுகிறானாம்.வாகக்ரில் வேகமாய் நடக்கிறானாம். தன் குறும்புகளால் எல்லோரையும் குதுகலப் படுத்திக் கொண்டு இருக்கிறான்.அவன் பிறந்த நாள் சமயம் எல்லோரிடமும் சொல்லி ஆசிபெற்றுக் கொள்ள முடியவில்லை.(ஜீலை5ம் தேதி பிறந்தநாள்) இப்போது எல்லோரும் அவனை வாழ்த்துங்களேன். செல்ல கண்ணனின் பெயர் கவின் திருநாவுக்கரசு.

அன்பு உள்ளங்களே வாழ்த்துங்கள். நோய் நொடி இல்லாமல் பேரன் நூறாண்டு வாழட்டும்.
வாழ்க வளமுடன்.

இன்னும் இரண்டு வாரத்தில் நியூஜெர்சி சென்று விடுவான். மீண்டும் அவன் வரும் வரை நினைவுகளை பொக்கிஷமாய் சேகரித்து வைத்துக் கொள்ள வேண்டும்.

ஞாயிறு, 9 மே, 2010

அன்பின் வழி

அன்பிற்கும் உண்டோ அடைக்கும்தாழ்


அன்பு - அந்த சொல்லில்தான் எத்தனை தெம்பு. ‘கொடுத்துப் பார் பார் உந்தன் அன்பை,
நினைத்துப் பார் பார் அது தரும் தெம்பை’ அந்த பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும்.

அன்புதான் உலக மகா சக்தி! அன்பு என்பது புனிதமானது!. அன்பு என்பது தெய்வமானது!
மதத்தின் மீது வைத்த அன்பு பக்தியானது என்ற பழைய பாடல் எனக்கு மிகவும் பிடித்தமானது யாருக்காவது முழுப் பாடலும் தெரிந்தால் சொல்லுங்களேன்.

அன்பின் வழி,அன்பு மேலீட்டால் செய்யப்படும் வேலை, நிச்சயமாக நல்ல வலிமையான ஒனறுதான்.(நன்றி -’அன்னையின் அருள்மலர்கள்’)

உலகத்தில் உள்ள அனைத்துயிர்களுக்கும் தாயாக விளங்கும் இறைநிலைக்கு நன்றி சொல்ல வேண்டும்.

”உலக வாழ்வில் உயிரினங்களின் உற்பத்திக்கு ஏற்ற வகையில் பெண்ணினத்தை வடிவமைத்து எல்லா உயிர்வகைக்கும் அன்பு காட்டி, கருணையை வழங்கிக் காக்கும் அந்த பேராதார இறைநிலைக்கு நன்றி கூறி மன நிறைவு பெறுவோம்.

ஒவ்வொரு நாளையும் இறைநிலையின் அன்பின் ஊற்றுப் பெருக்க நன்னாளாகவே கொண்டாடுவோம்.”வேதாத்திரி மகரிஷி

ஒவ்வொரு வீட்டிலும் தாய்தான் தெய்வம்.

தாயிடம் அன்பான வார்த்தை பேசிப் பாருங்கள் ,அவள் எவ்வளவு தெம்பாய் இருப்பாள்!
அன்பான வார்த்தைகள் கனிவான பார்வைதான் ஊட்டச்சத்து மாத்திரைகள்.

அன்பின் வழியது உயிர்நிலை.

திங்கள், 3 மே, 2010

சிறுசிறு அரும்புக்கு குறும்புகள் வளருது ,ஓ மைனா மைனா !

ஊரில் இருக்கும் போது சின்ன கண்ணனை நினைக்காத நாள் இல்லை. எப்போது அவனைப் பார்ப்போம்,அவனை அள்ளி அணைப்போம் என்று மனமும்,உடலும் துடித்துக் கொண்டு இருந்தது. ஊரில் இருக்கும் போது தினம்’ வீடியோ சாட்டில்” அவனைப் பார்த்து பேசிக் கொண்டு இருந்ததால் குழந்தை தாத்தா,ஆச்சியை தெரிந்து கொண்டு தாவி வந்து அணைத்துக் கொண்டு இருவரையும் மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தினான்.

பத்து நாட்கள் கைப்பிடிக்குள் அடங்கி இருந்தான்,பின் கையிலிருந்து நழுவி கீழே தவழுவதில்
ஆர்வம் காட்ட ஆரம்பித்து விட்டான்.கொஞ்சம் முன்னால் வந்து இருந்தால் கைப்பிடிக்குள் இருந்து இருப்பான். வீடு முழுவதும் தவழுவதும் ,பின் நம்மை வந்து பார்த்து சிரிப்பதும் என்று விளையாடுவான்.நாளுக்கு நாள் சிறு அரும்புக்குக் குறும்புகள் வளர்கின்றன.

கண்ணனின் கண்ணாம்பூச்சி:

வேக வேகமாய் தவழ்ந்து மேஜைக்கு அடியில், சமையல் அறையில் ஒளிந்து கொண்டு எட்டிப் பார்த்து சிரிப்பான். நான் அவனைப்பார்த்து செல்ல கண்ணன், செல்ல குட்டி எங்கிருக்கான்,காணோமே என்று கேட்டால் இந்தாயிருக்கேன் என்று சொல்வது போல் எட்டிப் பார்த்து சிரித்து விளையாடுகிறான்.இந்த விளையாட்டை திரும்ப திரும்ப எல்லோரிடமும் விளையாடச் சொல்லி கேட்பான்.

படுக்கையில் படுத்தால் ரஜாயில் முகத்தை புதைத்துக் கொண்டும் பின் வெளியில் முகத்தை எடுத்தும் வேடிக்கை காட்டுகிறான் நமக்கு.வீட்டில் சமையல் அறையை தவிர எல்லா இடங்களிலும் தரை விரிப்பு உள்ளதால் அவனுக்கு சாவி கொடுத்து விளையாடும் பொம்மைகள் விளையாட முடியாது. ரிமோட் கார்களும் சாவி கொடுக்கும் பொம்மைகளும் இருந்தாலும் அவன் விளையாடுவது பில்டிங் செட்டில் உள்ள இரண்டு பிளாக்குகளை வைத்துக் கொண்டு தான். சமையல்அறையில் போய் அவற்றைத் தட்டி விளயாடுவான்

எதில் எதில்லெல்லாம் சத்தம் வருகிறதோ அதிலெல்லாம் தட்டுவான். எனக்கு சிற்பக் கலைஞர் கல்லை தட்டிப் பார்த்து சிற்பம் செய்ய சரிப்படுமா என்று பார்ப்பது போல் தோன்றும். என் மகன்,’ உன் பேரன் நல்ல கல் உடைக்கிறான் பார்’ என்பான்.

ஒவ்வொரு பருவத்திலிலும் விளையாடும் விளையாட்டை எல்லாம் நான் அவனிடம் செய்து மகிழ்ந்தேன்.’ கீரி கீரி நண்டு பிடி, கீரிப் பிள்ளை நண்டு பிடி’,’தாப்பூ தாமரைப் பூ.’’கீரை கடை, பருப்புகடை’,’ சாய்ந்தாடு அம்மா சாய்ந்தாடு’,’ஆ குத்து அம்மா குத்து ,பூங்குத்து பிள்ளயார் குத்து, பிடிகுத்து என்று சொல்லும் போது அவன் பிஞ்சு கையை நம் கைகளில் அடக்கி கொண்டால் சிரி,சிரி என்று சிரித்து கையை வெளியே பிடுங்கி எடுத்து மறுபடியும் வைக்க வருகிறான். இப்போது யானை மாதிரி முன்னும் பின்னும் போகிறான், அதனால் ’யானை யானை அம்பாரி யானை பாடுகிறேன்’ சிரிக்கிறான் கால்களில் படுக்க வைத்துக் கொண்டு ஊஞ்சல் ஊஞ்சல் என்று ஆட்டினால் மகிழ்கிறான்.விளையாட்டு சாமான்களை அடுக்கி வைத்து இருக்கும் டப்பாவை கவிழ்க்கும் விளையாட்டு மிகவும் பிடித்தது.

அவனை வைத்துக் கொண்டு தோசை சுடும் போது’ தோசை அம்மா தோசை’ பாடினால் ரசிக்கிறான்.’காக்கா காக்கா மை கொண்டா’ பாட முடியாது இங்கு காக்காவே இல்லை,மைனா தான் நிறைய இருக்கு .ஊர்க் குருவிக்கு இல்லை தட்டுபாடு.கிளி இல்லை, அணில் நிறைய உள்ளது. மலை அணில் (நிறம் பிரவுன் கலர்) 1அடிஉயரம் உள்ளது.சாம்பல் நிற அணில் முக்கால் அடி உள்ளது. வீட்டிலிருந்து அவனை வாசலுக்கு தூக்கி வந்து ’ மைனா மைனா மை கொண்டா, காடை குருவி மலர் கொண்டா அணிலே அணிலே பழம் கொண்டா’ என்று பாடுவேன். வா வா சொல்லி கொடுத்து இருக்கிறேன் குருவி,மைனா,அணிலைப் பார்த்தால் உடனே வா வா என்பான். மரங்கொத்தி பறவை பைன் மரத்தில் உட்கார்ந்து சத்தம் கொடுப்பதை ரசிப்பான். வீட்டின் கதவை திறந்தாலே அலை அடிக்கும் சப்தம் தான். மரங்களில் காற்று நுழைந்து எழுப்பும் சத்தம் நன்றாக இருக்கிறது.(இன்னிசை பாடி வரும் பாடல் நினைவுக்கு வருகிறது)

சாய்ந்தாடு அம்மா சாய்ந்தாடு பாடினால் சாய்ந்து ஆடுகிறான். கைவீசு அம்மா கை வீசு கடைக்கு போலாம் கை வீசு பாடலுக்கு பொருத்தமாய் இங்கு கடைகள் ஏராளம். மிட்டாய் வாங்கலாம் கை வீசு க்கு ஏற்றாற்போல் நிறைய மிட்டாய்க் கடைகள் உள்ளன.மெதுவாய்த் தின்னலாம்.(மெதுவாய் தின்கும் மிட்டாய்கள் தான் ஏராளம்) சொக்காய் வாங்கலாம் கை வீசுக்கு நிறைய வித விதமாய் துணிக்கடைகள் உள்ளன. கை வீசுவதுடன் ’கை வீச்சும்’ இருந்தால் சொக்காய் சொகுசாய் போடலாம். சொகுசாய் வாழலாம்.

மேலே இரண்டு பல் ,கீழே இரண்டு பல் வந்து இருக்கிறது. அதற்கு உடம்பு படுத்துகிறது. அதனால் அழும் போது எல்லாம் புதிது புதிதாக் விளையாடி பல் முளைக்கும் துன்பத்தினால் அவன் படும் எரிச்சலை மறக்க செய்வோம்.வீட்டின் அமைப்பு கீழ் தளம் ,மேல் தள்ம் என்று இருப்பதால் அவனின் படுக்கை அறை மேலே உள்ளது. அவனை தாத்தா ஆடும் நாற்காலியில் வைத்து கொண்டு ஆட்டி தூங்க வைத்து அவன் படுக்கையில் படுக்க வைத்து விட்டு வந்தால் சிறிது நேரத்தில் விளையாடும் ஆசையில் விழித்து விடுவான்.


விழித்து விட்டால் பார்ப்பதற்கு மானிட்டர் கீழே உள்ளதால் உடனே போய் எடுத்து மறுபடியும் தூங்க வைப்பார்கள் தாத்தா.



தாத்தா ஆச்சியிடம் விளையாடிக் கொண்டு இருந்தாலும் அம்மாவைப் பார்த்து விட்டால் சிறிது நேரம் அம்மாவிடம் கொஞ்சி அம்மாவை மகிழ்வித்து விட்டு வருவான்.

அப்பாவின் தலைமுடியைப்(கண்ணாடியையும்) பிடித்து இழுத்து விளையாடுவது என்றால் மட்டில்லா மகிழ்ச்சி.

பாட்டில் விருப்பம் அதிகம் செல்ல கண்ணனுக்கு. உண்ணும் போதும் உறங்கும் போதும் காரில் பயணிக்கும் போதும் பாடல்கள் வேண்டும். ஒவ்வொரு சமயமும் ஒவ்வொரு பாடல்கள் வேண்டும்.காரில் பயணிக்கும் போது அவனை தனியாக தானே கார் சீட்டில் வைக்க வேண்டியதாய் உள்ளது. முதலில் அமைதியாய் விளையாடிக் கொண்டு இருந்தவன் இப்போது அதிலிருந்து வெளியில் வர அழுகிறான்,எங்களைத் தூக்கச் சொல்லி.அவன் அப்பா ராக ஆலாபனை செய்து லட்டு,பட்டு என்று அவ்வப்போது கூப்பிட்டால் அப்பாவை கழுத்தை வளைத்துப் பார்த்து சிரித்து மறுபடியும் பாடு என்று சொல்கிறான்.

நான் பழைய சினிமா பாடல்கள் ராகத்தில் தாலாட்டு பாடல்களை நானே புனைந்து பாடினால் ரசித்து சிரித்து நம்மை அங்கீகரித்து உற்சாகப் படுத்துகிறான். அவன் தாத்தா,’ பாட்டு பித்தனாய் இருக்கிறானே இப்படி எல்லோரையும் அங்கீகரித்து உற்சாகப் படுத்தினால் எல்லோரும் பெரிய பாடகர்கள் ஆகிவிடுவார்கள்’ என்று சொல்கிறார்கள். பாராட்டுதானே எல்லோருக்கும் வேண்டியிருக்கிறது.

அவன் விரும்பி கேட்கும் பாடல்கள் அடுத்த பதிவில்.