ஞாயிறு, 27 செப்டம்பர், 2009

நவராத்திரி வாழ்த்துக்கள்

அனைவருக்கும் நவராத்திரி வாழ்த்துக்கள்.

செய்யும் தொழில் சிறக்கவும்,எல்லோரும்
எல்லாம் வளமும் பெற வாழ்த்துக்கள்.

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

வியாழன், 17 செப்டம்பர், 2009

தென்கச்சி கோ.சுவாமிநாதன் அவர்களுக்கு அஞ்சலி

கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும்
வேட்ப மொழிவதாம் சொல்.

இந்த வள்ளுவனின் குறள் போல் சொல் வன்மை
மிக்கவர். இன்று ஒரு தகவல் மூலம் எல்லோர்
இதயத்திலும் இடம் பிடித்தவர்.


மூன்று நிமிட நேரத்தில் சொல்லவந்த விஷயத்தை
நகைச்சுவை உணர்வுடன் சொல்லி நம்மை சிந்திக்க
வைத்தவர்.

போன வருடம்” குடந்தை மனவளக்கலை மன்றம்
அறக்கட்டளை உலகப் பொது அருள் நெறி சமய
அறிவுத்திருக்கோயிலில்’ நடந்த கருத்தரங்கத்திற்கு
வந்து இருந்தார், சிறப்பு பேச்சாளராக.அவர்
சிரிக்காமல் மற்றவர்களை சிரிக்க வைத்தார்.
கிணற்றில் விழுந்தவரை தூக்கி விடும் போது
கூட வாழ்க வளமுடன் என்று சொல்லி தான்
தூக்கிவிடுவீர்கள் என்றார்.

அவருக்கு கைவலி இருந்ததால் ஒரு நண்பர்
சொல்லி உடற்பயிற்சிகளை ஆழியாரில்
நடக்கும் மனவளக்கலை யோகாப் பயிற்சி,
ஆளுமைப்பேறு திறனூக்கப் பயிற்சி
எடுத்துக் கொண்டார்.சன் டிவியில்
வேதாத்திரி மகரிஷியின் கருத்துக்களை
ஆசை சீர் அமைத்தல், சினம் தவிர்த்தல்
கவலை ஒழித்தல் ஆகியவற்றை அவர் பாணியில்
எல்லோருக்கும் சொன்னார்.

இன்று காரைக்கால் எப் எம்மில் ‘இன்று ஒரு தகவலில்’
புகை பிடிக்கும் பழக்கத்தை நிறுத்த யோசனை
சொன்னார் அவர் பாணியில்.
ஒரு நண்பர், இன்னொரு நண்பரிடம் புகைபிடிப்பதை
விட யோசனை கேட்டாராம், அதற்கு அவர் நானே
10முறை நிறுத்தி முயற்ச்சித்துஇருக்கிறேன்
என்றாராம்.

இவர் 10 யோசனை சொல்லுகிறார் புகை பிடிப்பதை
நிறுத்த:
1.புகைபிடிக்கும் நண்பரை விட்டு சிறிது காலம்
விலகி இருத்தல்.
2.புகை பிடிப்பதை விட தீவீர பிரச்சாரம் செய்ய உறுதி.
3.இரண்டு தடவை குளிப்பது, வெது வெது தண்ணீரில்
ஒரு முறை, குளிர்ந்த நீரில் ஒரு முறை.
4.உடற்பயிற்சியும்,பிராணாயாமும் செய்யவேண்டும்.
5.சாப்பாடு மிதமாக,பச்சை காய்கறிகள் சாப்பிடவேண்டும்
இவை இரத்த அளவை சரிப்படுத்தும்.
6.இரவு ரொம்ப நேரம் படுக்கைக்கு செல்லாமல் விழித்திருக்க
கூடாது.
7.போதைபொருள்கள் விலக்கவேண்டும்.
8.கடுகு,மிளகு காரம் குறைக்கவேண்டும்,தினம்
9 டம்ளார் நீர் அருந்த வேண்டும்,வெறும் தண்ணீர்
புகை பிடிக்கும் எண்ணத்தை குறைக்கும்.
9.இறை நம்பிக்கை மூலம் பிராத்தனை செய்யவேண்டும்.
10.வேண்டியவர்களிடம் புகைபிடிப்பதை விட்டு விட்டாதாக
சொல்லவேண்டும்.


இதை சொல்லிவிட்டு கடைசியில் அவர் பாணியில்
ஒன்று சொல்வாரே அது:முக்கியமான இடத்தில் அவர்
நின்று கொண்டு இருந்ததாராம்,ஒருவர் அவரிடம்
இங்கு புகை பிடிக்கலாமா? என்று கேட்டாராம்,
அதற்கு இவர் பிடிக்க கூடாது என்றாராம்
அப்படியானால் உங்கள் பக்கத்தில் கிடக்கும் இது
என்ன? என்றாராம்? இவை எல்லாம் என்னிடம்
அனுமதி கேட்காதவர்கள் பிடித்தது என்றாராம்.


புகை பிடிக்கும் நண்பரை விட்டு விலகி இருக்க
சொன்னதை கேட்டவுடன் மகரிஷி சொன்னது
நினைவு வந்தது//,யாராவது முதல் சிகரெட்டை
காசு கொடுத்து வாங்கி இருப்பானா? நண்பன்
குடித்துப் பார் நன்றாக இருக்கும் என்று
கொடுத்து இருப்பான்//இப்படித்தான் ஆரம்பிக்கும்
அவன் முதல் புகை பிடிக்கும் பழக்கம்.


புகை பிடிக்கவேண்டாம் என்று அதன் தீமைகளை
எடுத்து சொல்லும் போது அதில் பெருமிதம் ஏற்பட்டு
விட்டு விடுவான் என்று நம்புகிறார்.

புகை பிடிப்பதை விட சிலர் வாயில் எதையாவது
போட்டுமென்றுக்கொண்டு இருப்பார்கள் இவர்
வெறும் தண்ணீரை குடித்தே விட்டுவிடலாம்
என்கிறார்.


கடைசியில் வேண்டியவர்களிடம் புகை பிடிப்பதை
விட்டு விட்டேன் என சொல்ல சொல்கிறார்
புகை பிடிப்பவர்கள் மத்தியில் இருந்தால்,
ஆசை இருந்தாலும் வேண்டியவர்களிடம் சொல்லி
விட்டோம் குடிப்பது இல்லையென்று என்ற
எண்ணம் சங்கல்பம் மாதிரி செயல்படும் என
நினைக்கிறார்.


வானொலியில் அவர் குரல் ஒலித்துக் கொண்டே
இருக்கும்,தொலைகாட்சியிலும் அவர் குரல்
ஒலித்துக் கொண்டு இருக்கும்.

நத்தம்போல் கேடும் உளதாகும் சாக்காடும்
வித்தகர்க்கு அல்லால் அரிது.

புகழ் உடலுடன் வாழ்வது, நிலையான புகழுடன்
இறப்பது ஆகிய இரண்டும் அறிவாளிக்கே கிடைக்கும்.


இன்று அவர் பூர்விகமான தஞ்சாவூர் மாவட்டம்
கஞ்சனூர் கிராமத்தில் இறுதி சடங்கு,ஏராளமானனோர்
இறுதி அஞ்சலி, நாமும் அஞ்சலி செலுத்துவோம்.

அவர் குடும்பத்தார்களுக்கு ஆழ்ந்த இரங்கலை
தெரிவித்துக் கொள்வோம்.

வாழ்க சுவாமிநாதன்!!

வெள்ளி, 11 செப்டம்பர், 2009

பாரதியாரை நினைவுகூர்வோம்

பாரதியார்

நம் தேசிய கவி பாரதியார்க்கு இன்று நினைவு நாள்.
அவரை நினைவு கூர்வோம்.

ஓராயிரம் ஆண்டு ஓய்ந்து இருந்த தமிழகத்தில்

வாராது போல் வந்த மாமணி பாரதி.

மகாகவி, மக்கள்கவி, மானுடம் பாட வந்த வரகவி

பாரதி.

பாட்டுக்கு ஒரு புலவன் பாரதியடா என்று கவிமணி
தேசிக விநாயகம்பிள்ளை பாடியது போல் அவர்
சொல்லாத, எழுதாத விஷயங்கள் எதுவும் இல்லை.


பக்திப் பாடல்கள்,தேசபகதிப் பாடல்கள்,தன்வரலாறும்
பிறபாடல்களும்,கற்பனையும் கதையும்,
பொதுமைப் பாடல்கள் என்று நிறைய எழுதியிருக்கிறார்.

கடவுள் பாடலிலும் பிறர்துயர் தீர்த்தல்,பிறர்நலம்
வேண்டுதல் என்று யார் எந்தப்பெயரிட்டு அழைத்தாலும்
அந்த கடவுள் அவ்ர்களுக்கு அருள் புரிதல் வேண்டும்
என்கிறார். நமக்குத் தொழில் கவிதை நாட்டிற் குழைத்தல்
என்னை நீ காப்பாய் என்கிறார்.

அச்சமில்லை யச்சமில்லை என்றுபாடி நம் அச்சத்தை
போக்குகிறார்.ஜயமுண்டு பயமில்லை இந்த ஜன்மத்திலே
விடுதலையுண்டு, என்றுபாடி வெற்றிப்பாடல் பாடுகிறார்,
ஜய பேரிகை கொட்டடா-கொட்டடா என்று.

காக்கை,குருவி யெங்கள் ஜாதி-கடலும் மலையுமெங்கள்
கூட்டம் என்று சமத்துவம் பேசுகிறார்.
ஓயாதே நின்றுழைத்திடுவாய் என்று மனத்திற்குக் கட்டளை
யிடுகிறார்,கவலைப்படும் மனதிற்குஅந்த கவலையை விட்டு
வெளியில் வந்து இன்று புதிதாய்ப் பிறந்தோ மென்று நீவீர்
எண்ணமதைத் திண்ணமுற இசைத்துக் கொண்டு
தின்றுவிளை யாடியின் புற்றிருந்து வாழ்வீர்; என்று
வாழ்த்துகிறார்.

தேசிய கீதத்தில்// ஒன்றுபட்டாலுண்டு வாழ்வே-நம்மில்
ஒற்றுமை நீங்கிலனைவர்க்கும் தாழ்வே//என்று ஒற்றுமையை
வலியுறுத்துகிறார்.

நாட்டு வணக்கத்தில் நாட்டுக்காக இன்னுயிர் நீத்தவர்களுக்கு
வீர வணக்கம் தெரிவிக்கிறார்.

பாருக்குள்ளே நல்ல நாடு- எங்கள் பாரதநாடு என்றும்
வெள்ளிப் பனிமலையின் மீதுலவுவோம்-அடி
மேலைக் கடல்முழுதுங் கப்பல்விடுவோம்
பள்ளித் தலமனைத்துங் கோயில்செய்குவோம் எங்கள்
பாரத தேசமென்று தோள்கொட்டுவோம் என்று நம் உடலில்
புது ரத்தம் பாயசெய்கிறார்.

தாயின் மணிக்கொடி பாரீர்-அதைத்
தாழ்ந்து பணிந்து புகழ்ந்திட வாரீர்

கம்பத்தின் கீழ்நிற்றல் காணீர்-எங்கும்
காணரும் வீரர் பெருந்திருக் கூட்டம்
நம்பற் குரியரவ் வீரர்-தங்கள்
நல்லுயி ரீந்துங் கொடியினைக் காப்பார் என்று

கொடி வணக்கத்தில் வீரர் புகழ் பாடுகிறார்.
கொடி வணக்கம் பாடும் போது நம் உடல்
சிலிர்த்துப் பூரிப்பு அடைவதை உணரலாம்.

அஞ்சி வாழ்பவர்களைக் கண்டு
நெஞ்சு பொறுக்குதிலையே-இந்த
நிலைகெட்ட மனிதரை நினைத்துவிட்டால் என்று
ஜனங்களின் தற்காலநிலைமை என்று பாடினார்.அது
இக்காலமனிதருக்கும் பொருந்துகிறது.

ஒளி படைத்த கண்ணினாய் வா வா வா
உறுதிகொண்ட நெஞ்சினாய் வா வா வா என்று
பாரதத்தை வாழ்த்துகிறார்.

பாரத சமுதாயம் எல்லோருக்கும் உரியது என விளக்க
எல்லாரு மோர்குலம் எல்லாருமோரினம்
எல்லாரு மிந்திய மக்கள்
எல்லாருமோர்நிறை எல்லாரு மோர்விலை
எல்லாரும் இந்நாட்டு மன்னர்-நாம்
எல்லாரும் இந்நாட்டு மன்னர்-ஆம்
எல்லாரும் இந்நாட்டு மன்னர்- வாழ்க

என்று பாடுகிறார்.

செந்தமிழ் நாடெனும் போதினிலே-இன்பத்
தேன் வந்து பாயுது காதினிலே என்று
தமிழ் நாட்டைப் போற்றிப் புகழ்கிறார்.

வாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ்மொழி
வாழிய வாழியவே.என்று பாடுகிறார்.

சுதந்திரப் பயிருக்காக:
தண்ணீர்விட்டோவளர்த்தோம்? சர்வேசா! இப்பயிரைக்
கண்ணீராற் காத்தோம்; கருகத் திருவுளமோ

மேலோர்கள் வெஞ்சிறையில் வீழ்ந்து கிடப்பதுவும்
நூலோர்கள் செக்கடியில் நோவதுங் காண்கிலையோ? என்ற
இந்தப் பாட்டைக் கப்பலோட்டிய தமிழன் படத்தில்
திருச்சி லோகநாதன் அவர்கள் உருக்கமாய்ப் பாடி
இருப்பார்கள். அதைக் கேட்டால், கண்ணீர் அருவியாய்க் கொட்டும்.

என்று தணியுமிந்த சுதந்திர தாகம்?
என்று மடியுமெங்கள் அடிமையில் மோகம்?
இந்தப் பாடலையும் திருச்சி லோகநாதன் பாடியிருப்பார்,
கப்பலோட்டிய தமிழன் படத்தில். பாரதியார் பாடல்கள்
அந்தக் காலம் முதல் இந்தக்காலம் வரை சினிமாக்களில்
பாடப் படுகிறது. கர்நாடக இசை கச்சேரிகளிலும்
பாடப் படுகிறது,இன்னும் அதிகமாக பாட வேண்டும்.
பள்ளிகளில் குழந்தைகளுக்குப்
பாரதியார் பாடல்கள் கற்றுத் தரவேண்டும்.
நான் பள்ளியில் படிக்கும் போது உடற்கல்வி ஆசிரியர்
சொல்லிக் கொடுத்தபடி
ஒளி படைத்த கண்ணினாய் வா வா வா என்ற
பாடலைப்பாடிக் கொண்டே உடற்பயிற்சி செய்வோம்.
சுதந்திர தினத்தன்று ஆடுவோமே பள்ளு பாடுவோமே
என்ற பாட்டைப் பாடுவோம்.

நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும்
நிலத்தில் யார்க்கு மஞ்சாத நெறிகளும்
திமிர்ந்த ஞானச் செருக்கும் இருப்பதால்
செம்மை மாதர் திறம்புவ தில்லையாம்

என்று அவர் கூறியபடி இக்காலப் பெண்கள் எல்லாத்
துறைகளிலும் சிறந்து விளங்குவது மகிழ்ச்சியளிக்கிறது.











.

திங்கள், 7 செப்டம்பர், 2009

குருந்த மலை முருகன்

















குழந்தை வேலாயுதசாமி

மேட்டுப்பாளையம் செல்லும் பாதையில்,கோவை மாவட்டத்தின் மிகப் பிரசித்தி பெற்ற வைணவத் தலமான காரமடையிலிருந்து 5கிலோ மீட்டர் தூரத்தில் அத்திகடவு செல்லும் பாதையில் மரங்கள் நிறைந்த பகுதியில் இந்த குருந்தமலை உள்ளது.


நான் சிறுமியாக இருக்கும் போது போனது. ஒவ்வொரு முறை கோவை போகும் போதும் என் கணவரிடம் குருந்தமலை முருகன் கோவில் போகவேண்டும் என்று சொல்வேன். வேறு எந்த எந்தக் கோவிலோ போவோம், இந்த முருகன் கோவில் மட்டும் போக முடியவில்லை. என் மகள் விடுமுறைக்கு வந்தபோது கோவையில் ஆச்சி வீட்டுக்குப் போய்விட்டு பெரியப்பாவீடு, சித்தப்பாவீடு, மற்றும் எங்கு போவது என்று முடிவு செய்த போது, நான் மறுபடியும் குருந்தமலையைத் தேர்வு செய்தேன். என் மகளிடமும் பேத்தியிடமும் குமரன் இடம் பற்றி நிறைய வர்ணித்து என் கட்சிக்கு வலு சேர்த்து டாக்சி வைத்துக் கொண்டு போனோம்.

‘ சின்ன வயதில் நான் (கோவையில் படிக்கும் போது) சின்மயா மிஷன் நடத்திய பாலவிஹாரில் ஞாயிறு தோறும் வாரவழிபாடு நடக்கும். அதில் கலந்து கொண்ட அனைவரும் ஒருநாள், பஸ்ஸில், இந்த மலைக்கு வந்தோம். முருகன் மலைக்கு எதிரில் அனுமன் இருப்பார். மலையில் அனுமனைச் சுற்றி வரலாம் அங்கு தான் நாங்கள் எல்லாம் பஜனை செய்தோம் . கொண்டு போன உணவை அங்கு வைத்து சாப்பிட்டோம்.’ இப்படி எல்லாம் குழந்தைகளிடம் சொன்னேன். முருகன் மலையில் கொஞ்ச படி தான்(125 )உண்டு. மேலே இருந்து பார்த்தால் வயல்களும் மரங்களும் காற்றும் நன்றாக இருக்கும் என்று சொல்லி அவர்களைஅழைத்து சென்றேன்.

டாக்ஸியை விட்டு இறங்கியதும் ஒரு சிறுமியின் குதுகலத்துடன் அனுமன் மலையை நோக்கிப் போனேன் ,அங்கு அனுமனைச் சுற்றி மதில் சுவர் எழுப்பிவிட்டார்கள். முருகன் கோவிலும் திருப்பணி நடந்து கொண்டு இருந்தது. மலை மேலும் புதிதாகக் கட்டடங்கள் இப்போது வந்து விட்டன.மலையின் இயற்கை அழகை அவை ஓரளவு கெடுத்துவிட்டன.

தலவரலாறு
-----------


சுமார் ஏழு நூற்றாண்டுகளுக்கு முற்பட்ட கோவிலாகக் குருந்தமலை குழந்தை
வேலாயுதசாமி கோவில் கருதப்படுகிறது. சிறிய குன்று தான். கொங்கு நாட்டில் புகழ் பெற்ற ஐநூற்றாம் செட்டியார்கள் சுமார் 750 ஆண்டுகளுக்கு முன்னர் மிளகு, கிராம்பு போன்ற வாசனைத் திரவியங்களை சேர நாட்டிலிருந்து வாங்கி அட்டப்பாடி, குருந்தமலை சத்தியமங்கலம் போன்ற ஊர்களின் வழியே மைசூர் சென்று வணிகம் செய்தனர்.ஒரு முறை பொதி மாடுகளில் மிளகு மூட்டைகளை ஏற்றிக் கொண்டு வ்ந்தபோது, இந்த குருந்தமலையடிவாரத்தில் தங்கியிருந்தனர். ஒரு சிறுவன் இந்த மூட்டைகளில் என்ன இருக்கிறது என்று கேட்க அவர்கள் விளையாட்டாக தவிட்டு மூட்டைகள் என்றார்கள்.மறு நாள் மூட்டைகள் தவிடாக மாறி இருப்பதை அறிந்து இரவு வந்தது குமரன் என உணர்ந்து அந்த குன்றின் மீது முருகனுக்கு கோவில் கட்டமுடிவு செய்தனர். மீண்டும் அவர்கள் தவிட்டு மூட்டையை மிளகு மூட்டையாக மாற்றினான் சித்தாடும் செல்வகுமரன்.

ஐந்து நிலை கோபுரத்தை வணங்கி உள்ளே போனால் ராஜகம்பீர விநாயகர்.
18வது படியில் கருப்பண்ணசாமி அதற்கு மேலே வடக்கு நோக்கி இடும்பன். காசிவிஸ்வநாதர் கோவிலும் கருங்கல்லினாலான தீபஸ்தம்பமும் உள்ளன. இங்கு நாகதீர்த்தம், மயில்தீர்த்தம் என்ற சுனைகள் பாசி பிடித்துப்போய் குப்பைகூளங்களால் நிறைந்து உள்ளது.படிக்கட்டுக்கு கீழ் செங்குத்தாக உள்ள பாறையில் நாகபந்த சிலை வடிக்கப் ப்ட்டுள்ளது. இரண்டு நாகங்கள் ஒன்றையொன்று பின்னிப் பிணைந்து ஒர் அழகியகோலத்தின் உருவில் காட்சி தருகின்றன.

காசிவிஸ்வநாதரை அடுத்து சூரியன் பஞ்சாட்சர கணபதி, பஞ்சலிங்கங்கள்,
வள்ளி தெய்வானையுடன் ஆறுமுக கல்யாண சுப்ரமணியர் சன்னதிகள், கிழக்கு பிராகாரத்தில் மேற்கு நோக்கிய ஆதிமூலவர் சன்னதி உள்ளது. கிழக்குப் பக்கம் பாறையில் இயற்கையாக ஏற்பட்ட சண்முகச்சுனை, ஆறுமுகச்சுனை உள்ளன. இதுவும் பாசி பிடித்து உள்ளது. திருப்பணி நடப்பதால் சுனைகளை சுத்தம் செய்வார்கள் என நம்புகிறேன். கொடிமரத்தைக் கடந்து உள்ளே சென்றால் கருவறையில் குழந்தை வேலாயுதனாக காட்சி தருகிறார்.

அகத்திய முனிவரும் , ஆதிசேஷனும், சூரியனும் குமரனை வழிப்பட்டதாகத்
தலவரலாறு கூறுகிறது.மார்ச் மாதம் 21,22,23 தேதிகளில் மாலை 5.30 முதல் 6.30வரை கதிரவன் தன் ஒளியால் வழிபடுகிறான்.

கொடிமரத்தின் பக்கத்தில் சுற்றுசுவர் அருகிலிருந்துப் பார்த்தால் இயற்கையை
ரசிக்கலாம்.என் மகள் அடுத்த தடவை வரும் போது இந்த வயல்வெளியெல்லாம் கட்டடமாக மாறிவிடும் இல்லையாம்மா என்றாள். என் பேரனும் ,பேத்தியும் பாறைகளில் தவம் செய்வது போல் அமர்ந்து புகைப்ப்டம் எடுத்துக் கொண்டார்கள். நான் பாறையில் குதுகலமாய் ஏறி இறங்குவதைப் பார்த்து அம்மாவிற்கு தன் பள்ளிப் பருவம் நினைவு வந்து விட்டது என்று என் கணவர் மகளிடம் சொல்லிச் சிரித்துக் கொண்டார்.


மலைக்குக் கிழக்கில் இன்னொருமலையில் வள்ளி குகை உள்ளது . முன்பு வந்தபோது பார்த்திருக்கிறேன். இப்போது அமாவாசையன்று மட்டும் தான் மக்கள் போவார்கள் என்று சொன்னதால் நாங்கள் அங்கு செல்லவில்லை. அங்குள்ள சுனையில் எப்போதும் நீர் இருக்குமாம். ஆண்டிற்கொருமுறை பழனிக்கு இங்கிருந்து அதை பழனியாண்டவருக்கு அபிஷேகம் செய்வதற்கு எடுத்துச் செல்வார்களாம்.

குழந்தைவேலாயுதசாமியின் அலங்காரத்தைப் பார்க்கும்போது பழனிமுருகனைப் பார்ப்பது போலவே உள்ளது.

தூயகாற்று, அமைதி, ஆனந்தம் ஆகிய்வற்றை அங்கு பெறலாம்.
மிகுந்த மனநிறைவோடு வீடு திரும்பினோம்.






சனி, 5 செப்டம்பர், 2009

குரு உரு சிந்தித்தல்

குரு

தெளிவு குருவின் திருமேனி காண்ட்ல்
தெளிவு குருவின் திருநாமம் செப்பல்
தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்
தெளிவு குரு உரு சிந்தித்தல் தானே.
-திருமந்திரம்.

எவர் நம் அறிவைத் தூண்டி பிரகாசிக்கச் செய்கின்றாரோ அந்த ஜோதி மயமான
இறைவனைத் தியானிப்போமாக. (காயத்ரிமந்திரக்கருத்து)


அறிவேதான் தெய்வமென்றார் தாயுமானார்
அகத்ததுதான் மெய்ப் பொருள் என்றெடுத்துக்காட்டி
அறிவதனை அறிவித்தார் திருவள்ளுவர்
அவ்வறிவை அறிவதற்கு முறைகள் சொன்னார்
அறிஞர் திருமூலர் அவ்வறிவில் ஆழ்ந்து
ஆனந்தக் கவியாத்தார் இராமலிங்கர்
அறிவில் அறிவாய் நிலைத்து அறம் வகுத்தோர்
அதை வாழ்ந்து காட்டினோர் நினைவுகூர்வோம்.

தந்தைதாய் ஈருயிரும் ஒன்று சேர்ந்து
தழைத்தொரு உடலாகி உலகில் வந்தேன்
அந்த ஈருயிர் வினைகள் அறமோ மற்றோ
அளித்த பதிவுகளெல்லாம் என் சொத்தாச்சு
இந்த அரும் பிறவியில் முன்வினையறுத்து
எல்லையில்லா மெய்ப்பொருளை அடைவதற்கு
வந்த ஒரு உதவி குரு உயிரின் சேர்க்கை
வணங்கி குரு திருவடியை வாழ்த்தி வாழ்வோம். -வேதாத்திரி மகரிஷி

வெள்ளி, 4 செப்டம்பர், 2009

மழையும் மகிழ்ச்சியும்


மழையும் மகிழ்ச்சியும்


மழையைப் பற்றி வல்லி அவர்கள் எழுதுங்களேன் என்றார்கள் என்னை. எனக்கு மிகவும் பிடிக்கும் மழைக்காலம். எனக்கு, என்கணவருக்கு, என்குழந்தைகளுக்கு, மழையை ரசிக்கப் பிடிக்கும். நான் சிறுமியாக இருக்கும்போது மழையில் நனைந்து அம்மாவிடம் திட்டு வாங்கிய அனுபவம் உண்டு.

மழைக் காலம் என்றால் குடை அவசியம். எனக்கு,என் அக்காவிற்கு, என் அண்ணனுக்கு ,மூன்று பேருக்கும் புதிதாகக் குடை வாங்கிப் பள்ளியில் மாறி விடக் கூடாது என்பதற்காகக் குடையில்,எங்கள் முதல் எழுத்தையும்,ஒரு பூவும் அழகாகத் தைத்துக் கொடுத்தார்கள்,அம்மா..

பாளையங்கோட்டையிலுள்ள சாரட்டக்கர் பள்ளியில் நடந்த கிறித்து பிறந்தவிழாவில் கலந்து கொண்டு பள்ளியில் கொடுத்த
பரிசுப் பொருட்கள், தின்பண்டங்களை அம்மாவிடம் காட்டும் ஆவலில் குடையை பஸ்ஸிலேயே விட்டு விட்டு வந்துவிட்டோம், மூவருக்கும் நினைவு இல்லை.

வீட்டுக்கு அருகில் வந்தபின் தான் நினைவு வந்தது.புதுக் குடை அம்மா கஷ்டப்பட்டு பேர் பின்னிக் கொடுத்தது. அம்மாவிடம் குடை தொலைந்து விட்டது என்றால் திட்டுவார்களே என்று மூவரும் கலந்து பேசிப் பக்கத்து வீட்டுப் பவளத்தையை(தூரத்துச் சொந்தம்) சிபாரிசுக்கு அழைத்து சென்றோம், பாவம் குழந்தைகள் தெரியாமல் தொலைத்து விட்டார்கள் என்று சொல்ல. ஆனால் குடையைத் தொலைத்ததை விட சிபாரிசுக்கு அழைத்து வந்தது தான் அம்மாவிற்கு மிக மிகக்கோபம்.


எனக்குத்திருமணம் ஆகி திருவெண்காடு என்ற ஊருக்கு வந்தேன். அங்கு முதலில்பெரிய ஓட்டு வீடு நிறையபேர் இருக்கலாம்,ஆனால் அந்த பெரியவீட்டில் நானும் என்கணவரும் மட்டும் இருக்கவேண்டுமே என்று நினைத்துக் கொண்டு இருக்கும் போது ,என் கணவர் இன்னொரு விஷயம்
சொன்னார். மழைக் காலத்தில் அந்த வீட்டுத் தரையிலிருந்து நீர் ஊறி மேலேவரும் என்று சொல்ல,

என் மாமியார் ,’அதை ஏன் கேட்கிறாய் போ நான் கார்த்திகை மாதம் இந்த வீட்டில்மாட்டிக் கொண்டேன் அப்போது மழை புயல்
இருந்தது,15 நாள் மின்சாரம் வேறுஇல்லை தரைஎல்லாம் தண்ணீர் .கொல்லைப்புறத்தில் பாத்ரூமை
ஒட்டி வாய்க்கால் ஓடும் .அதில் தவளை சத்தம் காதை அடைக்கும் ’என்று மேலும் திகில் ஊட்டினார்கள்.

என் கணவர் பணியாற்றும் கல்லூரி முதல்வர் வீட்டில் விருந்துக்குக் கூப்பிட்டார்கள் அவர்கள் வீட்டில் மாடி போர்சன் காலியாக இருந்தது உடனே அந்த வீட்டிற்கு வந்து விட்டோம்  அங்கு மழைக் காலம் மிகவும் இனிமையானது.

அந்த வீட்டின் வராந்தாவிலிருந்து திருவெண்காடு கோவில் ,அங்கு உள்ள மூன்று குளங்களில் இரண்டு குளங்கள் எல்லாம் தெரியும். பிரதோஷவிழாவிற்கு சாமி சுற்றி வருவது(இரண்டு வெள்ளிரிஷபத்தில் சாமி சுற்றிவரும்)தெரியும். மழை என்ற முக்கிய விசயத்திற்கு
வருவோம் இந்த வீட்டில் வராந்தாவில் கம்பிகேட் வழியாக மழையைப் பார்க்கப் பார்க்க அலுக்காது. பலத்த மழை பெய்யும்போது கோவில் மதில் சுவரைக் கடல் அலை போல் தாண்டித் தாண்டி வருவதைப் பார்க்கக் கண்கொள்ளாக் காட்சி.

குழந்தைகளும் கம்பிகேட் வழியாக மழையை வேடிக்கைப் பார்ப்பதும் என் பெண் பள்ளியில் சொல்லித் தந்த மழைப் பாட்டைப் பாடுவாள். நாங்கள் கேட்டு மகிழ்வோம் அதை டேப் செய்து வைத்து இருக்கிறோம். புயல் மழைக்குப்பொருத்தமாய் இருக்கும் அந்தப்பாட்டு:

"வானத்திலே திருவிழா
வழக்கமான ஒருவிழா
இடி இடிக்கும் மேகங்கள்
இறங்கி வரும் தாளங்கள்
மின்னலோடு நாட்டியம்
மேடையான மண்டபம்
தூறலோடு தோரணம்
தூய மழை காரணம்
எட்டு திசைக் காற்றிலே
ஏகவெள்ளம் ஆற்றிலே
தெருவெல்லாம் வெள்ளமே
திண்ணையோரம் செல்லுமே
பார்முழுதும் வீட்டிலே
பறவை கூடக் கூட்டிலே
தவளை மட்டும் பாடுமே
தண்ணீரிலே ஆடுமே.'

குழந்தைகள் இருவருக்கும் மழையோடு சம்பந்தப்பட்ட’ ஊசி மூஞ்சி மூடா ’கதை சொல்வேன் அதுவும் மகள் பாடத்தில் வந்த கதை தான் .

மழைக்கு மரத்தடியில் ஒதுங்கும் குரங்கைப் பார்த்து அந்த மரத்தில் கூடுக் கட்டிவாழும் குருவி உனக்குக் கூடு இல்லையா கூடுகட்டத் தெரியாதா?கூடு கட்டி வாழ் என்று சொன்னவுடன் எனக்குக் கூடு கட்டத்தெரியாது ஆனால் பிய்த்து எறியத் தெரியும் என்று மரத்தில் ஏறிக் குருவிக் கூட்டைப் பிய்த்து எறிந்துவிடும்.

பள்ளி கல்லூரிகளுக்குப் போனபின் தான் விடுமுறை என்று அறிவிப்பார்கள் .அப்போது பிள்ளைகள் படும் பாடு அதுவும் என் மகன் படித்த பள்ளியில் சுற்றிலும் தண்ணீர் இருக்கும் நடுவில் இருக்கும் பள்ளிக்குச் செல்வது கஷ்டம்.

இப்படி மழையில் கஷ்டப் பட்டாலும் மழை எனக்குப் பிடிக்கும். பாரதியாரின் மழை பாட்டுப்பிடிக்கும்:

திக்குக்க ளெட்டுஞ் சிதறி- தக்கத்
தீம்தரிகிட தீம்தரிகிட் தீம்தரிகிட தீம்தரிகிட
பக்க மலைகளுடைந்து-வெள்ளம்
பாயுது பாயுது பாயுது-தாம்தரிகிட
தக்கத் ததிங்கிட தித்தோம்- அண்டம்
சாயுது சாயுது சாயுது- பேய்கொண்டு
தக்கை யடிக்குது காற்று- தக்கத்
தாம்தரிகிட தாம்தரிகிட தாம்தரிகிட தாம்தரிகிட

வெட்டியடிக்குது மின்னல் -கடல்
வீரத்திரை கொண்டு விண்ணை யிடிக்குது
கொட்டி யிடிக்குது மேகம்-கூ
கூவென்று விண்ணைக் குடையுது காற்று
சட்டச்சட சட்டச்சட டட்டா-என்று
தாளங்கள் கொட்டிக் கனைக்குது வானம்
எட்டுத் திசையு மிடிய- ம்ழை
எங்கனம் வந்ததடா தம்பி!-தலை


அண்டங் குலுங்குது தம்பி!-தலை
ஆயிரந் தூக்கிய சேடனும் பேய்போல்
மிண்டிக் குதித்திடு கின்றான் திசை
வெற்புக் குதிக்குது வானத்துத்தேவர்
செண்டு புடைத்திடு கின்றார்-என்ன
தெய்விகக் காட்சியைக் கண்முன்பு கண்டோம்!
கண்டோம் கண்டோம் கண்டோம்- இந்தக்
காலத்தின் கூத்தினைக் கண்முன்பு கண்டோம்.

மழையினால் வரும் மகிழ்ச்சிக்கு மற்றுமொரு பாட்டு.
நாமும் இப்பாடலைப்பாடி மகிழ்ச்சி அடைவோம்

ஆற்றுவெள்ளம் நாளைவரத் தோற்றுதேகுறி- மலை
யாளமின்னல் ஈழமின்னல் சூழ மின்னுதே
நேற்றுமின்றும் கொம்புசுற்றிக் காற்றடிக்குதே -கேணி
நீர்ப்படுசொ றித்தவளை கூப்பிடுகுதே
சேற்றுநண்டு சேற்றில்வளை ஏற்றடைக்குதே-மழை
தேடியொரு கோடிவானம் பாடியாடுதே
போற்றுதிரு மாலழகர்க் கேற்றமாம் பண்ணைச-சேரிப்
புள்ளிப்பள்ளர் ஆடிப்பாடித் துள்ளிக் கொள்வோமே.


.மழையே நம்மை என்றும் வாழ வைக்கும் அமிழ்தம் என்று வள்ளுவரும் சொல்கிறார்.
வானின்று உலகம் வழங்கி வருதலால்
தானமிழ்தம் என்றுணரற் பாற்று,